நர்சரி ரைம்ஸ் என்பது இன்றைய காலத்தில் மிகவும் இளைய தலைமுறையினரிடத்தில் ஆழமாக இடம் பிடித்திருக்கக்கூடிய ஒன்றாகக் காணப்படுகிறது. அரபு மொழியிலே, ஆங்கிலத்திலே, தமிழிலே என்று பல சிறுவர் பாடல்கள் இன்று மக்கள் மத்தியிலே இடம் பிடித்திருக்கின்றன. இந்த நர்சரி ரைம்ஸ் என்று சொல்லக்கூடிய சிறுவர் பாடல்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா என்றால், பொதுவாக இந்த ரைம்ஸ் என்பது கவிதைகளைக் கொஞ்சம் அழகுபடுத்திப் பாடல்கள் போல் முன்வைப்பதுதான் ஆகும்.
அந்த அடிப்படையில், ரசூல் (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலி) போன்ற பல சஹாபாக்கள் கவிதைகளைப் பாடல்களாக முன்வைக்கக்கூடிய நடைமுறை இருந்திருக்கிறது. அதை ரசூலுல்லாஹி (ஸல்) அவர்களும் கேட்டிருக்கிறார்கள். சஹாபாக்களும் ரசித்திருக்கிறார்கள். சில நேரங்களில் மஜ்லிஸ்களில் எல்லோரும் ஒன்று கூடுகிற இடங்களிலும் இவ்வாறு பாடப்பட்டிருப்பதை நாம் பார்க்கிறோம். நபிகளார் ஹிஜ்ரத் வரும்போது மதீனாவில் இருந்த சிறுவர்கள் இவ்வாறு பாடியதையும், அதேபோன்று பெருநாள் தினங்களில் சிறுவர்கள் பாடல்கள் பாடியதையும் நாம் ஹதீஸ்களிலே பார்க்கலாம். எனவே இந்த ரைம்ஸ் என்பது அடிப்படையில் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது என்பதை நாம் அறியலாம்.
ஆனால் இதற்குச் சில நிபந்தனைகள் இருக்கின்றன. முதலாவது விஷயம், அந்தப் பாடல்களினுடைய உள்ளடக்கம் இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு, கொள்கைக்கு, நடைமுறைக்கு மாற்றமாக இருக்கக்கூடாது. இஸ்லாத்திற்கு முரண் இல்லாத கருத்தைக் கொண்ட பாடல்களாக அவை அமைய வேண்டும். இரண்டாவதாக, அந்த ரைம்ஸைப் பாடும்போது இசைக் கருவிகள் தவிர்க்கப்பட வேண்டும். இசைக் கருவிகள் மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்குத் தெரியும். மூன்றாவதாக, அந்த ரைம்ஸ் பாடல்களில் பிள்ளைகள் அடிக்ட் ஆகிவிடாமல் (அதற்கு முழுமையாக அடிமையாகி விடாமல்) நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். நான்காவதாக, பெண்களை வைத்து இவ்வாறான பாடல்களைப் பாடுவது (பொதுவெளியில்) தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறான நிபந்தனைகளைக் கருத்தில் கொண்டு நர்சரி ரைம்ஸ் பயன்படுத்துவது கூடும் என்பதுதான் இஸ்லாமிய அறிஞர்களுடைய நிலைப்பாடாக இருக்கிறது.