உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர், துல்ஹஜ் மாதம் ஆரம்பமானதிலிருந்து தனது உழ்ஹிய்யாவை நிறைவேற்றும் வரை நகங்களை வெட்டுவதையும், முடிகளைக் களைவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டுமா என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. சில அறிஞர்கள் வெட்டலாம் என்றும், சிலர் தவிர்ப்பது விரும்பத்தக்கது என்றும் கூறுகின்றனர். ஆனால், மூன்றாவதாக உள்ள கருத்தான "கண்டிப்பாக நகம் வெட்டுவதையும் முடி அகற்றுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்" என்பதே மிகச் சரியானதும் வலுவானதுமான கருத்தாகும்.
இதற்கு ஆதாரமாக, ஸஹீஹ் முஸ்லிமில் இடம்பெறும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் அமைகிறது. "யார் ஒருவர் உழ்ஹிய்யா கொடுக்க நாடியிருக்கிறாரோ, அவர் துல்ஹஜ் மாதத்தின் ஆரம்பப் பத்துக்குள் நுழைந்துவிட்டால், அவர் முடி வெட்டுவதையும் நகங்களைக் களைவதையும் தவிர்ந்து கொள்ளட்டும்" என்று ரசூல் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இந்த ஹதீஸ் மிகவும் பலமான ஆதாரமாக அமைவதால், இதனைப் பின்பற்றுவதே சரியான நிலைப்பாடாகும்.
ஒருவர் துல்கஃதா மாதத்திலேயே உழ்ஹிய்யா கொடுக்க நிய்யத் வைத்திருந்தால், அவர் துல்ஹஜ் பிறை கண்டதிலிருந்து இவற்றைக் களைவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை அவர் துல்ஹஜ் 5-வது நாளில்தான் உழ்ஹிய்யா கொடுக்க முடிவெடுக்கிறார் என்றால், அவர் முடிவெடுத்த அந்த நாளில் இருந்து தவிர்ந்து கொண்டால் போதுமானது. உழ்ஹிய்யா கொடுக்க நிய்யத் வைத்த ஒருவர், தவறுதலாகவோ அல்லது அறியாமையினாலோ உழ்ஹிய்யா கொடுப்பதற்கு முன்னர் நகத்தையோ முடிகளையோ வெட்டிவிட்டால், அவர் அதற்காக அல்லாஹ்விடம் தவ்பா (பாவமன்னிப்பு) செய்து கொண்டால் போதுமானது; இதனால் அவரது உழ்ஹிய்யா பாதிக்கப்பட மாட்டாது.