தற்போதைய காலகட்டத்தில் தமிழ் பேசும் பிரதேசங்களில் முதல் குத்பாவை அரபு மொழியிலும், இரண்டாவது குத்பாவை தமிழ் மொழியிலும் நிகழ்த்தக்கூடிய ஒரு வழமையைப் பார்க்கிறோம் . குத்பா அரபியில்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு சிக்கல் வந்த நேரத்தில், ஒரு சமரசமாகவே "ஒன்றை அரபியிலும் மற்றொன்றை தமிழிலும் நிகழ்த்தலாம்" என்ற இந்த நடைமுறை ஏற்படுத்தப்பட்டது .
ஆனால் குத்பாவைப் பொறுத்தவரை, அது அரபு மொழியில்தான் இருக்க வேண்டும் என்றோ, அல்லது ஒரே மொழியில்தான் இருக்க வேண்டும் என்றோ இஸ்லாத்தில் எவ்விதமான நிபந்தனையும் கிடையாது . வெளிநாடுகள் போன்று உருது மற்றும் தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் முதல் குத்பாவை உருது மொழியிலும், இரண்டாவது குத்பாவை தமிழ் மொழியிலும் நிகழ்த்துவதில் எவ்விதத் தவறும் கிடையாது . இரண்டையுமே ஒரே மொழியில் நடத்திக் கொள்வதிலும் பிழை கிடையாது . அரபு மொழி எதுவுமே இல்லாமல், மக்களின் புரிதலுக்காகவும் தேவைக்காகவும் குத்பாவை முழுமையாக தமிழ், ஆங்கிலம் அல்லது சிங்களம் என எந்த மொழிகளிலும் அமைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் பூரண அனுமதி உண்டு .