ஒரு பெண்ணுக்குரிய தங்க நகைகளுக்கு ஸகாத் கணக்கிடும் காலம், அந்த நகையின் முழுமையான உரிமை (Ownership) எப்போது அவளது கைக்கு வந்து சேருகிறதோ, அந்த நாளிலிருந்தே ஆரம்பமாகிவிடும். திருமண நாள் என்பதோ அல்லது கணவன் வீட்டுக்குச் செல்லும் நாள் என்பதோ இந்த ஸகாத் கணக்கீட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
உதாரணமாக, ஒரு பெண்ணின் தந்தை, "இந்த நகைகள் உனக்குரியது" என்று அவளது உரிமையில் திருமணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே சில நகைகளைக் கொடுத்துவிட்டால், அந்த நாளிலிருந்தே ஸகாத்துடைய காலம் கணக்கிடப்படத் தொடங்கிவிடும். ஆறு மாதங்களுக்குப் பிறகு திருமணம் முடிவதால் அந்த உரிமை புதிதாக ஆரம்பமாகாது; திருமணத்திற்கு ஆறு மாதங்கள் கழித்து அந்த நகைக்கு ஒரு வருடம் பூர்த்தியாகிவிடும், எனவே அப்போது அவள் ஸகாத் செலுத்த வேண்டும்.
அதேபோன்று, திருமணமாகி ஆறு மாதங்கள் கழித்துக் கணவன் சில புதிய நகைகளை அவளுக்கு அன்பளிப்பாக வழங்கினால், அந்தப் புதிய நகைகளுக்கு, கணவன் கொடுத்த அந்த நாளிலிருந்து தனியாக ஒரு வருடம் கணக்கிடப்பட வேண்டும். இவ்வாறு வெவ்வேறு காலப்பகுதிகளில் சொந்தமான நகைகள் இருந்தால், அந்தந்த நகைகள் எப்போது அவளது உரிமையாக மாறியதோ, அதனதன் அடிப்படையில் தனித்தனியாக ஒரு வருடம் கணக்கிடப்பட்டு ஸகாத் செலுத்தப்பட வேண்டும்.