ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

அல்குர்ஆனின் பாதுகாப்பை விட ஹதீஸின் பாதுகாப்பு பலவீனமானதா? குர்ஆன் மற்றும் சுன்னாவின் பாதுகாப்புத் தன்மை எத்தகையது?

அல்குர்ஆன் ஹதீஸ் வஹீ தொகுப்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
அல்குர்ஆனின் பாதுகாப்பை விட ஹதீஸின் பாதுகாப்பு பலவீனமானதா? குர்ஆன் மற்றும் சுன்னாவின் பாதுகாப்புத் தன்மை எத்தகையது?
பதில்
பதில்:

அல்குர்ஆனின் பாதுகாப்பும் ஹதீஸின் (சுன்னாவின்) பாதுகாப்பும் சமமானது என்பதே இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில், "நிச்சயமாக நாமே இந்த அறிவுரையை (திக்ரை) இறக்கினோம், நாமே அதனைப் பாதுகாப்போம்" என்று கூறுகிறான். இதில் 'திக்ர்' என்பது குர்ஆன் மற்றும் சுன்னா இரண்டையுமே குறிக்கும்.

குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ் தேவையில்லை என்று சொல்லக்கூடியவர்கள், ஹதீஸ்கள் நபிகளார் காலத்தில் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை என்பதைக் காரணமாகக் காட்டுகின்றனர். குர்ஆன் என்பது 6000-க்கும் மேற்பட்ட வசனங்களை மட்டுமே கொண்ட வஹீயாகும். ஆனால் ஹதீஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 63 வருட முழு வாழ்க்கையையும், 23 வருட நபித்துவக் காலத்தில் அவர்கள் சொன்ன, செய்த, மற்றும் அனுமதித்த அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான சட்டமாகும். இந்த ஹதீஸ்களை நபிகளார் காலத்திலோ அல்லது அபூபக்கர் (ரழி) காலத்திலோ ஒரே புத்தகமாகத் தொகுத்திருந்தால் அது மிகப்பெரிய குழப்பத்தை (ஃபித்னாவை) ஏற்படுத்தியிருக்கும்.

காரணம், லட்சக்கணக்கான நபித்தோழர்கள் பல்வேறு தேசங்களுக்குச் சென்று குடியேறிவிட்டார்கள். ஒவ்வொருவரிடமும் நபிகளாரோடு இருந்த வெவ்வேறு காலக்கட்டத்து சம்பவங்கள் இருந்தன. ஒருவேளை அப்போது ஒரு புத்தகத்தைத் தொகுத்திருந்தால், பிற்காலத்தில் தூர தேசத்திலிருந்து ஒரு நபித்தோழர் வந்து ஒரு ஹதீஸைச் சொன்னால், "இது எங்கள் புத்தகத்தில் இல்லை, எனவே நீ பொய் சொல்கிறாய்" என்று அந்த உண்மையான வஹீ நிராகரிக்கப்பட்டிருக்கும். எனவே, அல்லாஹ் தனது நுட்பமான ஏற்பாட்டால் (ஹிக்மத்) ஹதீஸ்களை உடனே ஒரே நூலாகத் தொகுக்கவிடாமல், காலப்போக்கில் இமாம் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் போன்ற மாபெரும் அறிஞர்கள் மூலம் உலகம் முழுவதுமாகத் தேடித் தொகுக்கச் செய்தான்.

உண்மையில் குர்ஆனின் பாதுகாப்பே ஹதீஸ்களில்தான் தங்கியுள்ளது. குர்ஆனில் முதலாவது இறங்கிய வசனம் 'இக்ரஃ' என்பதும், கடைசியாக இறங்கிய வசனம் எது என்பதையெல்லாம் நாம் ஹதீஸ்களின் ஊடாகவே அறிந்து கொள்கிறோம். ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிவிப்பாளர் வரிசைகளை (Sanad) சல்லடை போட்டு சலித்து, சரியானவற்றையும் பலவீனமானவற்றையும் மிகத் துல்லியமாகப் பிரித்தறிந்து பாதுகாத்துள்ளனர். எனவே, குர்ஆனும் ஹதீஸும் ஒரே தரத்திலான இறைவனின் பாதுகாப்பைப் பெற்றவை என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

← முந்தையஅடுதது →