'ஆலமூன்' என்பதற்கு 'அகிலத்தார்' அல்லது 'உலகத்தார்' என்று மொழிபெயர்ப்பது முற்றுமுழுதாகச் சரியானதேயாகும். இதனைத் தவறு என்று கூறுவது அப்பட்டமான அறியாமையாகும். 'ஆலம்' என்பது இறைவன் அல்லாத ஏனைய அனைத்துப் படைப்புகளையும் குறிக்கும். ஆனால் குர்ஆன் முதன்முதலாகப் பயன்படுத்திய 'ஆலமூன்' அல்லது 'ஆலமீன்' என்ற உயர்திணைப் பன்மைச் சொல் (ஆக்கில்) மனிதர்களையும் சில இடங்களில் ஜின்களையும் குறிக்குமே தவிர, மரம், செடி, கொடிகள் போன்ற அஃறிணைகளைக் குறிக்காது.
உதாரணமாக, "பனூ இஸ்ரவேலர்களே, உங்களை நாம் ஆலமூன்களுக்கு மேலே சிறப்புப்படுத்தினோம்" என்ற வசனத்தில், அகிலத்திலுள்ள மலக்குமார்கள், நபிமார்கள், இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) ஆகிய அனைவரையும் விட பனூ இஸ்ரவேலர்கள் சிறந்தவர்கள் என்று பொருள்கொள்ள முடியாது. மாறாக, அந்தக் குறிப்பிட்ட காலத்தில் வாழ்ந்த மனிதர்களை விட அவர்கள் சிறப்புப்படுத்தப்பட்டார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
அதேபோன்று, "இந்த குர்ஆன் ஆலமூன்களுக்கு நேர்வழிகாட்டி", "ஆலமூன்களில் எவர் நிராகரிக்கிறாரோ" போன்ற வசனங்களில் 'ஆலமூன்' என்பது கல்லு, மண்ணைக் குறிக்காது; மனிதர்களையே குறிக்கும். எனவே, "ரப்புல் ஆலமீன்" அல்லது "ரஹ்மத்தன்லில் ஆலமீன்" போன்ற இடங்களில், 'ஆலமூன்' என்பது குறிப்பிட்ட காலத்திலோ அல்லது எல்லா காலங்களிலுமோ வாழும் மனித குலத்தை (மற்றும் ஜின்களை) குறிக்கும் ஒரு சிறந்த சொல்லாகும். இமாம் தபரீ (ரஹ்) போன்ற பல மாபெரும் விரிவுரையாளர்கள் இந்த 'அகிலத்தார்' என்ற கருத்தையே வலுவாக ஆதரித்துள்ளனர்.