ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

மக்ரிப் தொழாத ஒருவர், இஷா ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது சென்றால் இமாமோடு இணைந்து மக்ரிபை எப்படித் தொழுவது?

தொழுகை மக்ரிப் இஷா முரண்பாடு

← முந்தையஅடுதது →
கேள்வி
மக்ரிப் தொழாத ஒருவர், இஷா ஜமாஅத் நடந்து கொண்டிருக்கும் போது சென்றால் இமாமோடு இணைந்து மக்ரிபை எப்படித் தொழுவது?
பதில்
பதில்:

இஷா ஜமாஅத் நடக்கும் போது மக்ரிப் தொழாத ஒருவர் அதில் இணைவது குறித்து இஸ்லாமிய அறிஞர்கள் மத்தியில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன.

முதலாவது நிலைப்பாடு: மூன்றாவது ரக்அத்தில் அவர் தனியாக ஸலாம் கொடுத்துவிட்டு, பின்னர் எழும்பி இமாமோடு நான்காவது ரக்அத்தில் இணைந்து இஷாவைத் தொடர்ந்து தொழ வேண்டும்.
இரண்டாவது நிலைப்பாடு: மூன்றாவது ரக்அத்தில் அவர் அப்படியே அத்தஹிய்யாத்தில் உட்கார்ந்து வெயிட் பண்ண வேண்டும். இமாம் நான்காவது ரக்அத்தைத் தொழுவித்து ஸலாம் கொடுக்கும் போது, இமாமோடு சேர்ந்து இவரும் ஸலாம் கொடுக்க வேண்டும்.
மூன்றாவது நிலைப்பாடு: இமாம் ஒரு ரக்அத் தொழும் வரைக்கும் காத்திருந்து, இமாமின் இரண்டாவது ரக்அத்தில் சென்று இமாமோடு இணைந்துகொள்வது (அப்போது இமாம் 4 தொழுது முடிக்கும் போது இவருக்கு 3 ரக்அத்கள் முழுமையாகக் கிடைக்கும்).

இந்த மூன்று கருத்துக்களுமே இஸ்லாமிய அறிஞர்களின் வரலாற்று ரீதியான கருத்துக்களாகும். நேரடியாக ரசூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் எதுவும் இதற்கு இல்லை. இந்த மூன்றில் மிகப் பொருத்தமானது என்று ஆய்வு செய்து பார்க்கும்போது, மூன்றாவது ரக்அத்தில் தனியாக ஸலாம் கொடுத்துவிட்டு, அவசரமாக எழுந்து நான்காவது ரக்அத்தில் இமாமோடு சேர்ந்து கொள்வதையே பல அறிஞர்கள் சரி காண்கிறார்கள்.

இதற்கு முன்னுதாரணமாக அச்சநிலைத் தொழுகையில் (ஸலாத்துல் கவ்ஃப்) இமாம் இருக்கும்போதே மஃமூம்கள் ஸலாம் கொடுத்துவிட்டுப் போவதையும், இமாம் ஒரு ஸலாம் கொடுக்கும்போது நாம் எழுந்து தொழுவதையும், முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் நீட்டித் தொழுவித்த போது ஒரு சஹாபி தொழுகையிலிருந்து பிரிந்து சென்று தனியாகத் தொழுது முடித்ததையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். அதாவது தொழுகையின் இடையில் இமாமை விட்டுப் பிரிந்து ஸலாம் கொடுப்பதற்கு மார்க்கத்தில் சில முகாந்திரங்கள் உள்ளன.

இரண்டாவது ரக்அத்தில் போய் இணைந்துகொண்டால் இமாமோடு ஸலாம் கொடுக்கலாம், மூன்று ரக்அத்தும் கிடைக்கும் என்று சிலர் கூறினாலும், அது வேண்டுமென்றே மக்ரிப் தொழுகையின் முதல் அத்தஹிய்யாத்தை இழக்கச் செய்கிறது என்ற விமர்சனம் உள்ளது. எனவே, மக்ரிப் தொழுகையை முறையாக மூன்றாவது ரக்அத்தில் ஸலாம் கொடுத்து முடித்துவிட்டு, அதன் பின்னர் இமாம் ருகூவிலோ அல்லது சுஜூதிலோ இருக்கும்போது அவருடன் இஷாவிற்காக இணைந்து கொள்வதுதான் பொருத்தமானதாகத் தெரிகிறது. நேரடியான ஹதீஸ் இல்லாததால், இதிலுள்ள மூன்று தீர்வுகளிலுமே சிறு மன உறுத்தல்கள் இருக்கவே செய்யும். இமாம் எழுந்து நிற்கும்போது நாம் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பது உறுத்தலாகத் தெரிந்தாலும், இருக்கும் ஆய்வு முடிவுகளில் இதுவே தோதுவான வழிகாட்டலாக அறிஞர்களால் முன்வைக்கப்படுகிறது.

← முந்தையஅடுதது →