முதலீடு என்பது லாப நஷ்டங்களை விகிதாசார அடிப்படையில் பகிர்ந்துகொள்ளும் நிபந்தனையோடு அமைவதாகும். ஆனால், ஒரு முதலீட்டில் "அசலுக்கு (Capital) நூறு சதவீதம் உத்தரவாதம்; நஷ்டம் ஏற்பட்டாலும் முதலுக்கு எவ்விதப் பாதிப்பும் வராது" என்று ஒரு நிபந்தனை வைக்கப்படுமானால், அந்த முதலீடு 'கடன்' என்ற நிலைக்கு மாறிவிடும்.
கடனின் அடிப்படை என்னவென்றால், உலக அழிவுகள் ஏற்பட்டாலும், திருடப்பட்டாலும், நஷ்டமடைந்தாலும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும். கடனுக்கு மாதாந்தம் ஒரு குறிப்பிட்ட தொகையைத் தருவதாகப் பொருந்திக் கொண்டால் அது வட்டியாக மாறிவிடும்.
எனவே, முதலீட்டில் முதலுக்கு முழுமையான உத்தரவாதம் (Guarantee on Capital) வழங்கப்பட்டால், அது கடன் வடிவத்தைப் பெற்றுவிடும். கடனாக மாறிய ஒன்றிலிருந்து பெறப்படும் எந்தவொரு லாபமும் 'வட்டி' (ரிபா) ஆகக் கருதப்படும். நாம் முதலீடு செய்யும் போது, திறமையான, நேர்மையான, நம்பிக்கையான நபர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதைத் தவிர்த்து, "நஷ்டம் வந்தாலும் முதலுக்கு உத்தரவாதம் தர வேண்டும்" என்று நிபந்தனையிட்டால் அது வட்டிப் பொருளாதாரமாகவே மாறிவிடும்.