புறம் பேசுவது என்றால் நமக்குத் தெரிந்தவர்களைப் பற்றிப் பேசுவது மட்டும்தான் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். இஸ்லாம் அவ்வாறு எங்கும் சொல்லவில்லை. தெரிந்தவராக இருந்தாலும், தெரியாதவராக இருந்தாலும், உலகத்தின் வேறு எந்த மூலையில் இருப்பவராக இருந்தாலும் ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்தில் அவர் வெறுக்கக்கூடிய ஒரு செய்தியைப் பேசுவது "புறம்" ஆகும். இல்லாத ஒரு செய்தியைப் பேசினால் அது "அவதூறு" (Buhtan) ஆகும்.
ஆட்சியாளர்களைப் பற்றிப் பேசுவதாக இருந்தால் அவர்களது நலவுகளை சமுதாயத்தில் பேசலாம். அவர்களது கெடுதிகளைப் பேசுவதற்கு மார்க்கத்தில் சில நிபந்தனைகள் உள்ளன. ஆட்சியாளர்களைச் சந்தித்து அவர்களுக்கு நேரடியாக எடுத்துச் சொல்லி அட்வைஸ் செய்ய வேண்டும்; அதைவிடுத்து சமூக வலைத்தளங்களில் குழுக்களை அமைத்துக்கொண்டு அவர்களைப் பற்றிப் பேசுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை, அது புறமாகவே பதியப்படும். இறந்தவர்களைப் பற்றிப் பேசுவதற்கும் மார்க்க ரீதியான அங்கீகாரம் மற்றும் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும். எனவே, எந்த இடத்தில் பேசினாலும், யாரைப் பற்றிப் பேசினாலும், மார்க்கம் அனுமதித்த சில அடிப்படைகள் மற்றும் சூழ்நிலைகள் இன்றி ஒருவரைப் பற்றிப் பேசுவது புறத்தில்தான் சேரும்.