குர்ஆனிலும் சுன்னாவிலும் 'சீதனம்' என்ற வார்த்தை நேரடியாக இல்லை. இஸ்லாம் பெண்ணுக்கு 'மஹர்' கொடுப்பதைத்தான் வற்புறுத்துகிறது. நாங்களாகவே ஒரு பெண்ணின் தரப்பிலிருந்து "இவ்வளவு தர வேண்டும்" என்று பலவந்தமாக ஒரு பொருளைப் பறிப்பதுதான் 'சீதனம்' எனப்படும்.
எனவே, சீதனம் என்பது பொருளின் அடிப்படையில் அமைவதில்லை. ஒரு 50 பவுன் நகை, அல்லது நிலம், அல்லது தளபாடம் என்பது சீதனத்தில் வராது என்று சிலர் கூறுவது தன்னிச்சையான பிழையான பிரிப்பாகும். ஒரு பெண் அல்லது அவளது குடும்பத்தினர் மனமுவந்து சந்தோஷமாகக் கொடுப்பது ஒரு வீடாக இருந்தாலும் அது சீதனம் அல்ல, அது அன்பளிப்பாகும். ஆனால், அவர்கள் மனமுவக்காமல் வற்புறுத்தலினாலோ அல்லது திருமணத்தை முடிப்பதற்காகவோ பலவந்தமாக ஒரு பவுன் நகை கொடுத்தாலும் அல்லது ஒரு நேரச் சாப்பாடு கொடுத்தாலும் அது சீதனமாகும்.
எனவே, எடுக்கப்படும் பொருள் என்னவென்பதை விட, அது 'வற்புறுத்தி எடுக்கப்படுகிறதா' அல்லது 'மனமுவந்து கொடுக்கப்படுகிறதா' என்பதுதான் சீதனத்தைத் தீர்மானிக்கும் அடிப்படை அளவுகோலாகும்.