ஜனாஸா தொழுகையில் மூன்றாவது தக்பீருக்குப் பின்னால் ரசூல் (ஸல்) அவர்கள் கேட்ட துஆக்கள் நிறைய வந்துள்ளன (உதாரணமாக, அல்லாஹும்மஃபிர்லஹு...). இந்த மஃசூரான (ஹதீஸில் வந்த) துஆக்களை ஓதுவது மிகவும் சிறந்தது. அதே நேரம் ஹதீஸில் வராத சொந்த துஆக்களையும் ஜனாஸாவில் நாம் ஓதலாம். மூணாவது தக்பீருக்குப் பிறகு, ஜனாஸாவுக்காக வேண்டி தமிழாலோ அல்லது நமது தாய்மொழியிலோ, "யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னித்துவிடு, இவருக்கு நல்ல கப்ரில் விசாலத்தைக் கொடு, இவரை நரகத்திலிருந்து பாதுகாத்துவிடு" என்று உளப்பூர்வமாகக் கேட்பதற்கு எந்தவிதமான தடையும் ஜனாஸா தொழுகையில் இல்லை.
குறிப்பாக குழந்தை மரணித்துவிட்டால், அந்த குழந்தைக்குப் பாவம் எழுதப்பட்டிருக்காது. எனவே, "யா அல்லாஹ் என் தந்தை தாயின் பாவங்களை மன்னித்துவிடுவாயாக, பெற்றோருக்கு மறுமையில் ஒரு பெரிய நன்மையாக இந்தக் குழந்தையை ஆக்குவாயாக" என்றெல்லாம் துஆ கேட்பதில் எவ்விதப் பிழையும் இல்லை. அத்தஹிய்யாத்தின் கடைசியில் "தனக்கு விரும்பியதெல்லாம் கேட்டுக்கொள்ளுங்கள்" என்று சொல்லப்பட்டிருப்பதைப் போல, மையத்துக்காக நாம் விரும்பிய மொழியில் துஆ கேட்கலாம்.
மேலும், இமாம் ஷவ்கானி அவர்கள் கூறுவது போல், ஒவ்வொரு தக்பீர்களுக்கு இடையிலும் துஆக்களைக் கேட்டுக்கொள்ளலாம். நாலாவது தக்பீருக்குப் பின்னாலும் துஆ கேட்பதில் தவறில்லை.
பெருநாள் திக்ருகள் பற்றிய சட்டம்:
பெருநாள் தொழுகையில் "அல்லாஹு அக்பர்" என்று மட்டும் சொல்ல வேண்டும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட திக்ரு தான் சொல்ல வேண்டும் என்றோ ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் எந்த துஆவையும் கற்றுத்தரவில்லை. குர்ஆன் "உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வைப் பெருமைப்படுத்துங்கள்" என்று சொல்கிறது. எனவே, அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ் என எவ்விதத்திலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தலாம். ரசூலுல்லாஹ் ஒரு குறிப்பிட்ட துஆவை மட்டும் சொல்லித்தரவில்லை என்பதால், ஒவ்வொருவரும் தங்களுக்கு விரும்பிய திக்ருகளைச் செய்யலாம்.
ஆனால், இன்றைக்கு ஒரு பித்அத் நடக்கிறது. அதாவது, ஒருவரோ அல்லது இமாமோ மைக்கில் ஒரு மெட்டெடுத்து பாட்டுப் படிப்பது போல சத்தம் போட்டு ஓத, அனைவரும் ஒரே வாய்ஸில் கோரஸாக சத்தம் போட்டுப் பாட்டுப் படிப்பது போல் திக்ரு செய்கிறார்கள். இது சந்தேகமே இல்லாமல் ஒரு பித்அத் ஆகும். ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களுக்கு விரும்பியவாறு சத்தமிட்டு அல்லாஹ்வைப் புகழ வேண்டும். பலவிதமான திக்ருகளின் சத்தங்கள் தனித்தனியாகக் கேட்க வேண்டுமே தவிர, ஒருவரே வழிநடத்தி பாட்டுப் போல் கூட்டு திக்ரு செய்வது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.