குர்ஆனில் "ஜும்ஆ தொழுகைக்கு அழைக்கப்பட்டால் வியாபாரத்தை விட்டுவிட்டு பள்ளிக்கு விரையுங்கள்" என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இது தவிர்க்க முடிந்த எல்லாத் தொழில்களுக்கும் பொருந்தும். ஒரு கார் ஓட்டுநர் (Taxi Driver) ஜும்ஆ நேரம் வந்ததும் கட்டாயம் தனது ஓட்டத்தை நிறுத்திவிட்டு ஜும்ஆ தொழுகைக்குச் செல்ல வேண்டும்.
"எனது காரில் முஸ்லிம் அல்லாதவர் இருக்கிறார்" என்றோ, "இது எனது தொழில்" என்றோ காரணங்களை சொல்லி ஜும்ஆவை தவறவிடக் கூடாது. இது இறைவனோடு உள்ள ஒரு கட்டாய அப்பாயிண்ட்மென்ட் ஆகும். நமது சொந்த அத்தியாவசிய வேலைகளுக்காக நாம் சில வாடகைகளை (Hires) எடுக்காமல் தவிர்க்கிறோமோ, அதுபோல ஜும்ஆ நேரத்திலும் நாம் தொழிலை நிறுத்த வேண்டும்.
ஆனால் மருத்துவ அவசர சிகிச்சை அளிப்பவர்கள், தொலைதொடர்பு (Network) சேவையில் இருப்பவர்கள் போன்ற தவிர்க்க முடியாத அத்தியாவசிய கட்டாய சேவைகளில் இருப்பவர்களுக்கு இதிலிருந்து விதிவிலக்கு உண்டு. ஒரு பிரயாணிக்கு ஜும்ஆ கடமையில்லை என்று எந்த ஆதாரமும் இல்லை, நாஸிலாவாக (ஒரு ஊரில் இறங்கி தங்கியிருப்பவராக) இருந்தால் அவரும் ஜும்ஆவுக்குச் செல்ல வேண்டும்; அதேபோல ஊரில் தங்கி தொழில் செய்யும் அனைவருக்கும் ஜும்ஆ கடமையாகும்.