உபை இப்னு கஅப் (ரழி) அவர்கள், தனது பிரார்த்தனைகளில் (துஆக்களில்) ஒரு பகுதியை ஸலவாத்துக்காக ஒதுக்குவதாகவும், இறுதியில் முழு பிரார்த்தனையையும் ஸலவாத்தாகவே ஆக்கிக் கொள்வதாகவும் கூறியபோது, அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படிச் செய்தால் உனது உலகக் கவலைகள் மற்றும் தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு, உனது பாவங்களும் மன்னிக்கப்படும்" என்று கூறியதாக வரும் செய்தி பலவீனமான (ழயீஃப்) செய்தியாகும்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் 'அப்துல்லாஹ் இப்னு முஹம்மது இப்னு அக்கீல்' என்பவர் வருகிறார். இவரை ஹதீஸ்கலை அறிஞர்கள் பலவீனமானவர் என்றும், முன்கரான (நிராகரிக்கத்தக்க) பல செய்திகளைத் தனித்து அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளார்கள். (உதாரணமாக, உளுவில் எஞ்சிய தண்ணீரால் தலைக்கும் காதுக்கும் மஸஹ் செய்வது, நபி (ஸல்) அவர்கள் 7 துணிகளில் கபனிடப்பட்டார்கள் என்ற பலவீனமான செய்திகளையெல்லாம் தனித்து அறிவித்தவர் இவரே).
அல்லாஹ்விடம் கேட்கவேண்டிய பாவமன்னிப்பு, தேவைகள், சுவர்க்கம் போன்ற பல பிரார்த்தனைகளை முழுமையாக விட்டுவிட்டு, அனைத்திற்கும் ஸலவாத் மட்டும் கூறினால் போதும் என்ற இஸ்லாமிய துஆவின் அடிப்படைக்கு மாற்றமான ஒரு கருத்தை (அஸூலை) இவர் இந்த செய்தியில் கொண்டு வருகிறார். இதற்கு சப்போர்ட்டாக வேறு எந்த ஆதாரப்பூர்வமான செய்திகளும் கிடையாது. பல ஹதீஸ்கலை விமர்சகர்கள் இவரைத் தெளிவாக விமர்சித்துள்ளதால், இந்த ஹதீஸ் பலவீனமானதே ஆகும்.