← அட்டவணைக்கு திரும்பு
ஹதீஸ் #3141
وحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ، كَانَ يُكْرِي أَرَضِيهِ، حَتَّى بَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ الْأَنْصَارِيَّ كَانَ يَنْهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ، فَلَقِيَهُ عَبْدُ اللهِ، فَقَالَ: يَا ابْنَ خَدِيجٍ، مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي كِرَاءِ الْأَرْضِ، قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ لِعَبْدِ اللهِ: سَمِعْتُ عَمَّيَّ، وَكَانَا قَدْ شَهِدَا بَدْرًا، يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، قَالَ عَبْدُ اللهِ: لَقَدْ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الْأَرْضَ تُكْرَى، ثُمَّ خَشِيَ عَبْدُ اللهِ أَنْ يَكُونَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ عَلِمَهُ، فَتَرَكَ كِرَاءَ الْأَرْضِ Tamil-3141 Shamila-1547 JawamiulKalim-2892
சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவந்தார்கள். இந்நிலையில், ராஃபிஉ பின் கதீஜ் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்துவருகிறார்கள் எனும் செய்தி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுக்கு எட்டியது. உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்களைச் சந்தித்து, “இப்னு கதீஜ்! நிலக்குத்தகை விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகத் தாங்கள் என்ன அறிவித்துவருகிறீர்கள்?”என்று கேட்டார்கள். அதற்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “என் தந்தையின் இரு சகோதரர்கள் -அவர்கள் இருவரும் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள் ஆவர்- (தம்) குடும்பத்தாரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடை செய்தார்கள் எனக் கூறிவந்ததை நான் செவியுற்றேன்”என்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டு வந்ததை நான் அறிந்திருந்தேன்” என்று கூறினார்கள். (ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதைக் கேட்ட) பின் நிலக்குத்தகை தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது கூடாது என்று) புதிய சட்டம் ஏதேனும் பிறப்பித்து, அதை நாம் அறியாமல் இருந்துவிட்டோமோ என்று அஞ்சி, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் நிறுத்திவிட்டார்கள். Book : 21