النور
ஸூரா 24 — அந்நூர் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
64 வசனங்கள் · ஜுஸ் 18
1
سُوْرَةٌ اَنْزَلْنٰهَا وَفَرَضْنٰهَا وَاَنْزَلْنَا فِیْهَاۤ اٰیٰتٍ بَیِّنٰتٍ لَّعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
முஹம்மது ஜான்
(இது திருக்குர்ஆனின்) ஓர் அத்தியாயமாகும்; இதனை நாமே அருளச் செய்து, அதிலுள்ளவற்றை விதியாக்கினோம்; நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இதில் நாம் தெளிவான வசனங்களை அருள் செய்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! இது) ஓர் அத்தியாயம். இதை நாமே இறக்கி (இதிலுள்ள சட்ட திட்டங்களை) நாமே விதித்துள்ளோம். மேலும், இதைக்கொண்டு நீங்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு தெளிவான வசனங்களையே நாம் இதில் இறக்கிவைத்தோம்.
IFT
இது ஓர் அத்தியாயம்; இதனை நாம் இறக்கியருளினோம். இதனை நாம் விதியாக்கியிருக்கின்றோம். மேலும், இதில் தெளிவான கட்டளைகளையும் நாம் இறக்கியிருக்கின்றோம். (இதனால்) நீங்கள் பாடம் பெறக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இது) ஓர் அத்தியாயம், இதனை நாம் இறக்கி வைத்தோம், இதனை - இதிலுள்ள சட்டங்களை உங்கள் மீது) நாமே விதியாக்கினோம், இன்னும், (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக, இதில் தெளிவான வசனங்களை நாம் இறக்கி வைத்தோம்.
2
اَلزَّانِیَةُ وَالزَّانِیْ فَاجْلِدُوْا كُلَّ وَاحِدٍ مِّنْهُمَا مِائَةَ جَلْدَةٍ ۪ وَّلَا تَاْخُذْكُمْ بِهِمَا رَاْفَةٌ فِیْ دِیْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ تُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ۚ وَلْیَشْهَدْ عَذَابَهُمَا طَآىِٕفَةٌ مِّنَ الْمُؤْمِنِیْنَ ۟
முஹம்மது ஜான்
விபசாரியும், விபசாரனும் - இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்; மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால். அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம்; இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார் (நேரில்) பார்க்கட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
விபசாரம் செய்த பெண், விபசாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவரையும் நூறு கசையடிகள் அடியுங்கள். மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ் விதித்த இக்கட்டளையை நிறைவேற்றுவதில், அவ்விருவர்களுடைய விஷயத்தில் உங்களுக்கு இரக்கம் ஏற்படக்கூடாது. அவ்விருவருக்கும் (தண்டனையாக) வேதனை கொடுக்கும் சமயத்தில் நம்பிக்கையாளர்களில் ஒரு தொகையினர் அதன் சமீபமாக இருக்கவும்.
IFT
விபச்சாரம் செய்த பெண், விபச்சாரம் செய்த ஆண் இவர்களில் ஒவ்வொருவருக்கும் நூறு சாட்டையடி கொடுங்கள். மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாள் மீதும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால், அல்லாஹ்வுடைய தீனின் மார்க்கத்தின் விவகாரத்தில் இவர்கள்மீதுள்ள இரக்கம் உங்களை பாதித்துவிடக்கூடாது. மேலும், இவர்களுக்குத் தண்டனை அளிக்கும்போது, இறைநம்பிக்கையாளர்களின் ஒரு குழு அங்கே இருக்க வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(திருமணமாகாத) விபச்சாரி, விபச்சாரகன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள், நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும், விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மார்க்கத்(தில் விதிக்கப்பட்ட சட்டத்தை அமுல் செய்வ)தில் அவ்விருவருக்காக உங்களை இரக்கம் பிடித்துவிட வேண்டாம், இன்னும், அவ்விருவரின் வேதனையை விசுவாசிகளில் ஒரு சாரார் (நேரில் பிரசன்னமாகிப்) பார்க்கவும்.
3
اَلزَّانِیْ لَا یَنْكِحُ اِلَّا زَانِیَةً اَوْ مُشْرِكَةً ؗ وَّالزَّانِیَةُ لَا یَنْكِحُهَاۤ اِلَّا زَانٍ اَوْ مُشْرِكٌ ۚ وَحُرِّمَ ذٰلِكَ عَلَی الْمُؤْمِنِیْنَ ۟
முஹம்மது ஜான்
விபசாரன், விபசாரியையோ அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான்; விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறுயாரையும்) விவாகம் செய்ய மாட்டாள் - இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
(கேவலமான) ஒரு விபசாரன் (தன்னைப் போன்ற) ஒரு விபசாரியை அல்லது இணைவைத்து வணங்கும் ஒரு பெண்ணைத் தவிர (மற்றெவளையும்) திருமணம் செய்ய முடியாது. (அவ்வாறே) ஒரு விபசாரி (கேவலமான) ஒரு விபசாரனை அல்லது இணைவைத்து வணங்கும் ஓர் ஆணைத் தவிர (மற்றெவனையும்) திருமணம் செய்ய முடியாது. இத்தகைய திருமணம் நம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
IFT
விபச்சாரம் செய்யும் ஆண், விபச்சாரம் செய்யும் பெண் ணையோ அல்லது இறைவனுக்கு இணைவைக்கும் பெண் ணையோ தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய வேண்டாம். விபச்சாரம் செய்யும் ஒரு பெண்ணை, விபச்சாரம் செய்பவனோ அல்லது இறைவனுக்கு இணை வைப்பவனோ அன்றி வேறு யாரும் திருமணம் செய்ய வேண்டாம். மேலும், இது இறைநம்பிக்கையாளர்களுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விபச்சாரகன், விபச்சாரியை அல்லது இணைவைப்பவளையே தவிர (மற்றெவளையும்) மணந்து கொள்ளமாட்டான். (அவ்வாறே) விபச்சாரி – அவளை விபச்சாரகனோ, அல்லது இணை வைப்பவனோ தவிர (மற்றெவரும்) மணந்து கொள்ள மாட்டான்; மேலும், இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து விசுவாசிகளுக்குத் தடுக்கப்பட்டிருக்கிறது.
4
وَالَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ یَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِیْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا ۚ وَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவனேனும் கற்புடைய பெண்கள் மீது குற்றம் கூறி (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவன் கொண்டு வராவிட்டால் அவனை நீங்கள் எண்பது கசையடிகள் அடியுங்கள். பின்னர், அவன் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பெரும் பாவிகள்தான்.
IFT
எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பத்தினிப்பெண்களை அவதூறு கூறி (அதன்) பிறகு (அதற்குரிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வரவில்லையே அத்தகையோர் - அப்போது அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள், மேலும், அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதீர்கள், இன்னும் அத்தகையோர் பாவிகளாவர்.
5
اِلَّا الَّذِیْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا ۚ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
எனினும் (இவர்களில்) எவர் இதற்குப் பின்னர் தவ்பா செய்து கொண்டு (தங்களைத்) திருத்திக் கொள்கிறார்களோ - நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆயினும், (இவர்களில்) எவரேனும் இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து) விலகி கைசேதப்பட்டு மன்னிப்புக் கோரி(த் தங்கள்) நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (அவர்களை) மன்னிப்பவனும் கருணை செய்பவனுமாக இருக்கிறான்.
IFT
ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதற்குப் பின்னர் (தங்கள் குற்றங்களிலிருந்து விலகிப்) பச்சாதாபப்பட்டு(த் தங்கள் நிலைகளை) சீர்திருத்திக் கொண்டவர்கள் தவிர (இத்தகையோரை) நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், பெருங்கிருபை செய்பவன்.
6
وَالَّذِیْنَ یَرْمُوْنَ اَزْوَاجَهُمْ وَلَمْ یَكُنْ لَّهُمْ شُهَدَآءُ اِلَّاۤ اَنْفُسُهُمْ فَشَهَادَةُ اَحَدِهِمْ اَرْبَعُ شَهٰدٰتٍۢ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الصّٰدِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி:
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபசாரத்தைக் கொண்டு) குற்றம் கூறித் தங்களைத் தவிர அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,
IFT
ஆனால், யார் தம்முடைய மனைவியர் மீது அவதூறு சுமத்துகின்றார்களோ மேலும், அதற்குத் தங்களைத் தவிர வேறு சாட்சிகள் அவரிடம் இல்லையோ, அப்படிப்பட்ட ஒவ்வொருவரின் சாட்சியமும் (இவ்வாறு இருக்க வேண்டும். அதாவது, தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் உண்மையாளன் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தங்கள் மனைவியரை (விபச்சாரக் குற்றம் சாட்டி) அவதூறு கூறி இன்னும், தங்களையன்றி அவர்களுக்கு வேறு சாட்சிகள் இருக்கவில்லையே அத்தகையோர், அப்போது (அவதூறு கூறிய) அவர்களில் ஒருவரின் சாட்சியானது – “நிச்சயமாக தான் உண்மையாளர்களில் உள்ளவன்” என்று அல்லாஹ்வைக் கொண்டு நான்கு (முறை சத்தியம் செய்து) சாட்சி கூறுவதாகும்.
7
وَالْخَامِسَةُ اَنَّ لَعْنَتَ اللّٰهِ عَلَیْهِ اِنْ كَانَ مِنَ الْكٰذِبِیْنَ ۟
முஹம்மது ஜான்
ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).
அப்துல் ஹமீது பாகவி
ஐந்தாவது முறை (இவ்விஷயத்தில்) தான் பொய் சொல்வதாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன் மீது உண்டாகுக! என்றும் அவன் சத்தியம் செய்து கூறவேண்டும்.
IFT
மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஐந்தாவது முறையாக (இவ்விஷயத்தில்) “தான் பொய் சொல்பவர்களில் உள்ளவனாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாவதாக” என்று(ம் அவன் கூற வேண்டும்).
8
وَیَدْرَؤُا عَنْهَا الْعَذَابَ اَنْ تَشْهَدَ اَرْبَعَ شَهٰدٰتٍ بِاللّٰهِ ۙ اِنَّهٗ لَمِنَ الْكٰذِبِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி:
அப்துல் ஹமீது பாகவி
(அவனுடைய மனைவி குற்றமற்றவளாக இருக்க அவள் மீது குற்றம் திரும்பினால்) அவள் தன் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனையைத் தட்டிக் கழிப்பதற்காக (அவள் அதை மறுத்து) நிச்சயமாக(த் தனது) அ(க்கண)வன் பொய்யே கூறுகிறான் என்று அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து,
IFT
‘இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) பொய்யன் ஆவான்’ என்று அவள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு தடவை கூறி,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் (அவனுடைய மனைவி தன்மீது சுமத்தப்பட்ட அவதூறை மறுத்து) “நிச்சயமாக அவன் பொய்யர்களில் உள்ளவன்” என்று அல்லாஹ்வைக் கொண்டு (சத்தியம் செய்து) நான்கு முறை அவள் சாட்சி கூறுவது அவளை விட்டும் (விபச்சாரக் குற்றத்திற்கான) தண்டனையை நீக்கிவிடும்.
9
وَالْخَامِسَةَ اَنَّ غَضَبَ اللّٰهِ عَلَیْهَاۤ اِنْ كَانَ مِنَ الصّٰدِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).
அப்துல் ஹமீது பாகவி
ஐந்தாவது முறை மெய்யாகவே அவன் (இவ்விஷயத்தில்) உண்மை சொல்லியிருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாகுக! என்றும் அவள் கூறவேண்டும். (இதன் மூலம் அவள் மீது விதிக்கப்பட வேண்டிய தண்டனை நீக்கப்பட்டுவிடும்.)
IFT
ஐந்தாவது தடவை இவன் (இவனுடைய குற்றச்சாட்டில்) உண்மையாளனாக இருந்தால் தன்மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக என்று அவள் அளிக்கும் சாட்சியம், அவளைவிட்டுத் தண்டனையைத் தடுக்கக்கூடியதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஐந்தாவது முறையாக “அவன் (இவ்விஷயத்தில்) உண்மையாளர்களில் உள்ளவனாக இருந்தால், நிச்சயமாக தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாவதாக” (என்றும் அவள் கூறுவாள்.)
10
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ تَوَّابٌ حَكِیْمٌ ۟۠
முஹம்மது ஜான்
இன்னும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய நல்லருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாது போயிருப்பின், (உங்களுக்கு அழிவு உண்டாயிருக்கும்;) நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை ஏற்றுக் கொள்பவனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பவனாகவும் ஞானமுடையவனுமாகவும் இல்லையெனில்... (உங்கள் குடும்ப வாழ்க்கையே சிதறி நீங்கள் பல துன்பங்களுக்குள்ளாகி இருப்பீர்கள்).
IFT
உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் இல்லாது போயிருந்து, மேலும், அல்லாஹ் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இல்லாதிருந்தால் (மனைவியர் மீது அவதூறு கற்பிக்கும் விவகாரம் உங்களைப் பெரும் சிக்கலில் ஆழ்த்திவிட்டிருக்கும்!)
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுடைய பேரருளும், அவனுடைய கிருபையும் உங்கள் மீது இல்லாதிருந்திருப்பின், (உங்களுக்கு அழிவு ஏற்பட்டிருக்கும்) இன்னும் நிச்சயமாக அல்லாஹ் மிகுதியாக (தவ்பாக்களை ஏற்று) பாவமன்னிப்பளிப்பவன், தீர்க்கமான அறிவுடையவன்.
11
اِنَّ الَّذِیْنَ جَآءُوْ بِالْاِفْكِ عُصْبَةٌ مِّنْكُمْ ؕ لَا تَحْسَبُوْهُ شَرًّا لَّكُمْ ؕ بَلْ هُوَ خَیْرٌ لَّكُمْ ؕ لِكُلِّ امْرِئٍ مِّنْهُمْ مَّا اكْتَسَبَ مِنَ الْاِثْمِ ۚ وَالَّذِیْ تَوَلّٰی كِبْرَهٗ مِنْهُمْ لَهٗ عَذَابٌ عَظِیْمٌ ۟
முஹம்மது ஜான்
எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (ஆயிஷா (ரழி) மீது பொய்யாக) அவதூறு கூறினார்களோ அவர்களும் உங்களிலுள்ள ஒரு கூட்டத்தினர்தான்! (நம்பிக்கையாளர்களே!) அதனால் உங்களுக்கு ஏதும் தீங்கு ஏற்பட்டு விட்டதாக நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கும் நன்மையாகவே முடிந்தது. (அவதூறு கூறியவர்கள்) ஒவ்வொருவருக்கும் அவர்கள் (அவதூறு கூறித்) தேடிக் கொண்ட பாவத்துக்குத் தக்க தண்டனை(யாக எண்பது கசையடிகள்) உண்டு. இந்த அவதூறில் அவர்களில் எவன் பெரும் பங்கெடுத்துக் கொண்டானோ அவனுக்கு (இத்தண்டனையும்) இன்னும் கடுமையான வேதனையுமுண்டு.
IFT
இந்த அவதூறைப் புனைந்துகொண்டு வந்தவர்கள் உங்களில் உள்ள ஒரு கும்பல்தான். இந்நிகழ்ச்சியினை உங்களுக்கு ஏற்பட்ட ஒரு தீங்காகக் கருதாதீர்கள். மாறாக, இதுவும் உங்களுக்கு நன்மையாகவே உள்ளது! அவர்களில் யார் எந்த அளவுக்கு அதில் பங்கேற்றார்களோ அந்த அளவுக்குப் பாவத்தை அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர். மேலும், அவர்களில் யார் இதில் பெரும் பங்கு வகித்தானோ அவனுக்குப் பெரும் தண்டனை இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பற்றி பொய்யாக) அவதூறைக், கொண்டு வந்தார்களே அத்தகையவர்கள் உங்களில் உள்ள ஒரு கூட்டத்தினரே, அதை உங்களுக்கு தீமையாக நீங்கள் எண்ணவேண்டாம், மாறாக, அது உங்களுக்கு நன்மையாகும், அவர்களில் ஒவ்வொரு மனிதருக்கும் பாவத்தால் எதை அவர் சம்பாதித்தாரோ அது அவருக்கு உண்டு, இன்னும், இந்த அவதூறை உருவாக்கிய(விஷயத்)தில் அவர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டானே அத்தகையவன் - அவனுக்கு மகத்தான வேதனையுண்டு.
12
لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَیْرًا ۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِیْنٌ ۟
முஹம்மது ஜான்
முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களுமாகிய நீங்கள் - இதனைக் கேள்வியுற்றபோது, தங்களைப் (போன்ற முஃமினானவர்களைப்) பற்றி நல்லெண்ணங் கொண்டு, “இது பகிரங்கமான வீண் பழியேயாகும்” என்று கூறியிருக்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
இதை நீங்கள் கேள்வியுற்ற மாத்திரத்தில் (இதை மறுத்து) நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி நல்லெண்ணம் வைத்து ‘‘இது பகிரங்கமான அவதூறே'' என்று கூறியிருக்க வேண்டாமா?
IFT
நீங்கள் இதனைச் செவியுற்ற போதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி ஏன் நல்லெண்ணம் கொள்ளவில்லை? இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று ஏன் அவர்கள் கூறிடவில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் இதைக் கேள்வியுற்ற சமயத்தில், விசுவாசம் கொண்ட ஆண்களும், விசுவாசம் கொண்ட பெண்களும் தங்க(ள் கூட்டத்தினர்க)ளைப் பற்றி நன்மையானதையே எண்ணி “இது தெளிவான அவதூறு(தான்)” என்றும் கூறியிருக்க வேண்டாமா?
13
لَوْلَا جَآءُوْ عَلَیْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ ۚ فَاِذْ لَمْ یَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓىِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْكٰذِبُوْنَ ۟
முஹம்மது ஜான்
அ(ப்பழி சுமத்திய)வர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டாமா, எனவே அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில், அவர்கள் தாம் அல்லாஹ்விடத்தில் பொய்யர்களாக இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அல்லது) இதற்கு வேண்டிய நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? இதற்குரிய சாட்சிகளை அவர்கள் கொண்டு வராததினால் நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ்விடத்தில் ஏற்பட்டுவிட்டது.
IFT
அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) ஏன் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லை? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதன் மீது நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டு வந்திருக்க வேண்டாமா? (இதற்குரிய) சாட்சிகளை அவர்கள் கொண்டு வராதபொழுது அத்தகையோர் - அல்லாஹ்விடத்தில் அவர்கள் பொய்யர்கள்.
14
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ لَمَسَّكُمْ فِیْ مَاۤ اَفَضْتُمْ فِیْهِ عَذَابٌ عَظِیْمٌ ۟ۚۖ
முஹம்மது ஜான்
இன்னும், உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், நீங்கள் இச் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தமைக்காக கடினமான வேதனை நிச்சயமாக உங்களைத் தீண்டியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வுடைய அருளும், அவனுடைய கருணையும் இல்லையெனில் இதை நீங்கள் கூறிக்கொண்டிருந்ததன் காரணமாக மகத்தான வேதனை உங்களைப் பிடித்திருக்கும்.
IFT
உங்கள் மீது இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் பொழிந்திருக்கா விட்டால் எந்த விஷயங்களில் நீங்கள் மூழ்கியிருந்தீர்களோ அதன் பயனாக உங்களுக்குப் பெரும் வேதனை ஏற்பட்டிருக்கும். உங்களில், ஒருவரின் நாவிலிருந்து மற்றவரின் நாவுக்கு இந்த அவதூறுச் செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்த நேரத்(தில் நீங்கள் எவ்வளவு கடும் தவறைச் செய்து கொண்டிருந்தீர்கள் என்ப)தைச் சற்று சிந்தியுங்கள்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் பெருங்கிருபையும் இம்மையிலும், மறுமையிலும் இல்லாதிருந்தால், எதில் நீங்கள் ஈடுபட்டிருந்தீர்களோ (அதன் காரணமாக) அதில் மகத்தான வேதனை நிச்சயமாக உங்களைத் தொட்டிருக்கும்.
15
اِذْ تَلَقَّوْنَهٗ بِاَلْسِنَتِكُمْ وَتَقُوْلُوْنَ بِاَفْوَاهِكُمْ مَّا لَیْسَ لَكُمْ بِهٖ عِلْمٌ وَّتَحْسَبُوْنَهٗ هَیِّنًا ۖۗ وَّهُوَ عِنْدَ اللّٰهِ عَظِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்து(ச் சொல்லி)க் கொண்டு, உங்களுக்குத் (திட்டமாக) அறிவில்லாத ஒன்றைப் பற்றி உங்கள் வாய்களால் கூறித் திரிகின்றீர்கள்; இன்னும் இதை நீங்கள் இலேசானதாகவும் எண்ணி விட்டீர்கள். ஆனால் அது அல்லாஹ்விடத்தில் மிகப்பெரிய (பாவமான)தாக இருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
(ஒருவரிடமிருந்து ஒருவராக இப்பொய்யான) அவதூற்றை, நீங்கள் திட்டமாக அறியாத விஷயத்தை உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு, நீங்கள் உங்கள் வாயால் கூறிக்கொண்டு திரிகிறீர்கள். இதை நீங்கள் இலேசாகவும் மதித்து விட்டீர்கள். ஆனால், இதுவோ அல்லாஹ்விடத்தில் (பாவங்களில்) மிக்க பெரியது.
IFT
நீங்கள் எந்த வகையிலும் அறிந்திராத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் வாய்களால் கூறிக்கொண்டு திரிந்தீர்கள்; அதனைச் சாதாரணமாகக் கருதிவிட்டீர்கள். ஆனால், அல்லாஹ்விடத்தில் அதுவோ, மிகப்பெரிய விஷயமாய் இருந்தது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதனை நீங்கள் (சிலரிடமிருந்து சிலர்) உங்கள் நாவுகளால் எடுத்துக் கொண்டு உங்களுக்கு எதுபற்றிய அறிவு இல்லையோ அ(ந்த விஷயத்)தை, உங்கள் வாய்களால் கூறிக்கொண்டிருந்த பொழுது (உங்களுக்கு வேதனை ஏற்பட்டிருக்கும்) இதனை நீங்கள் இலேசாகவும் எண்ணிவிட்டீர்கள்; இதுவோ, அல்லாஹ்விடத்தில் மிக மகத்தானதாகும்.
16
وَلَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ قُلْتُمْ مَّا یَكُوْنُ لَنَاۤ اَنْ نَّتَكَلَّمَ بِهٰذَا ۖۗ سُبْحٰنَكَ هٰذَا بُهْتَانٌ عَظِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இன்னும் இதை நீங்கள் செவியேற்ற போது, “இதைப் பற்றி நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை; (நாயனே!) நீயே தூயவன்; இது பெரும் பழியாகும்” என்று நீங்கள் கூறியிருக்கலாகாதா?
அப்துல் ஹமீது பாகவி
நீங்கள் இதைக் கேள்வியுற்ற மாத்திரத்தில், அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். இதை நாம் (நம் வாயால்) பேசுவதும் நமக்குத் தகுதியில்லை. இது மாபெரும் அவதூறே என்று நீங்கள் கூறியிருக்க வேண்டாமா?
IFT
நீங்கள் இதனைக் கேள்விப்பட்டதுமே, “இவ்வாறான விஷயத்தை நாம் பேசுவது நமக்கு ஏற்றதல்ல; ஸுப்ஹானல்லாஹ் அல்லாஹ் தூய்மையானவன்! பெரும் அவதூறாயிற்றே இது!” என்று ஏன் நீங்கள் கூறிடவில்லை?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் இதனைக் கேள்விப்பட்டபோது “இதனை நாம் பேசுவது நமக்கு(த் தகுதி) இல்லை, (அல்லாஹ்வே!) நீயே மிகப் பரிசுத்தமானவன், இது மகத்தான (பெரும்) அவதூறு” என்று நீங்கள் கூறி இருக்க வேண்டாமா?
17
یَعِظُكُمُ اللّٰهُ اَنْ تَعُوْدُوْا لِمِثْلِهٖۤ اَبَدًا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِیْنَ ۟ۚ
முஹம்மது ஜான்
நீங்கள் (திடமாக) முஃமின்களாகயிருப்பின் நீங்கள் இது போன்ற (பழி சுமத்துவ)தின் பால் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு போதிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், இத்தகைய விஷயத்தை இனி ஒரு காலத்திலும் நீங்கள் மீண்டும் செய்யக்கூடாது என அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
IFT
நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் இனி ஒருபோதும் இதுபோன்ற தவறை மீண்டும் செய்யக்கூடாது என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவுறுத்துகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நீங்கள் விசுவாசிகளாகயிருந்தால், இதுபோன்றதின்பால் ஒருபோதும் நீங்கள் மீளலாகாது என்று அல்லாஹ் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
18
وَیُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இன்னும், அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு (நன்கு விவரித்துக் கூறுகிறான்; மேலும் அல்லாஹ் (யாவும்) அறிந்தவன்; விவேகம் மிக்கோன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் (அனைத்தையும்) நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
மேலும், அல்லாஹ் உங்களுக்குத் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் நன்கு அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் (தன்னுடைய) வசனங்களை உங்களுக்கு விளக்கிக் கூறுகிறான், மேலும், அல்லாஹ் (யாவையும்) நன்கறிந்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.
19
اِنَّ الَّذِیْنَ یُحِبُّوْنَ اَنْ تَشِیْعَ الْفَاحِشَةُ فِی الَّذِیْنَ اٰمَنُوْا لَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۙ فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ؕ وَاللّٰهُ یَعْلَمُ وَاَنْتُمْ لَا تَعْلَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
எவர்கள் ஈமான் கொண்டுள்ளோரிடையே இத்தகைய மானக்கேடான விஷயங்கள் பரவ வேண்டுமெனப் பிரியப்படுகிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் நோவினை செய்யும் வேதனையுண்டு; அல்லாஹ் (யாவற்றையும்) அறிகிறான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.
IFT
இறைநம்பிக்கை கொண்டோரிடையே மானக்கேடான செயல் பரவிட வேண்டுமென எவர்கள் விரும்புகின்றார்களோ, அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் துன்புறுத்தும் தண்டனைக்கு உரியவர்களாவர். மேலும், அல்லாஹ் அறிகின்றான்; நீங்கள் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதற்குப் பின்னரும்) விசுவாசங்கொண்டோருக்கிடையில் (இவ்வாறான) மானக்கேடான விஷயம் பரவவேண்டுமென விரும்புகிறார்களே, நிச்சயமாக அத்தகையோர்-அவர்களுக்கு இம்மையிலும், மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு, (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்வே நன்கறிவான், நீங்களோ அறியமாட்டீர்கள்.
20
وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ وَاَنَّ اللّٰهَ رَءُوْفٌ رَّحِیْمٌ ۟۠
முஹம்மது ஜான்
இன்னும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை தீண்டியிருக்கும்.) மேலும், நிச்சயமாக அல்லாஹ் இரக்கமுடையவனாகவும், அன்புடையோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வுடைய அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லையெனில், அல்லாஹ் மிக்க இரக்கமுடையவனாகவும் கருணையுடையவனாகவும் இல்லையெனில் (அவனுடைய வேதனை இதுவரை உங்களைப் பிடித்தே இருக்கும்).
IFT
அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது பொழிந்திராவிட்டால், மேலும், அல்லாஹ் மிகுந்த பரிவு கொண்டவனாயும் கிருபையாளனாயும் இல்லாதிருந்தால் (இப்போது உங்களிடையே பரப்பப்பட்டிருந்த இச்செய்தி படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்)!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உஙகள் மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் (உங்களை வேதனை பிடித்திருக்கும்) நிச்சயமாக அல்லாஹ்வோ மிக்க இரக்கமுடையவன், மிகக் கிருபையுடையவன்.
21
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ وَمَنْ یَّتَّبِعْ خُطُوٰتِ الشَّیْطٰنِ فَاِنَّهٗ یَاْمُرُ بِالْفَحْشَآءِ وَالْمُنْكَرِ ؕ وَلَوْلَا فَضْلُ اللّٰهِ عَلَیْكُمْ وَرَحْمَتُهٗ مَا زَكٰی مِنْكُمْ مِّنْ اَحَدٍ اَبَدًا ۙ وَّلٰكِنَّ اللّٰهَ یُزَكِّیْ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்க வற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் தூய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். (ஏனென்றால்,) எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் செல்கிறானோ அவனை அவன் மானக்கேடான விஷயங்களையும், பாவமான காரியங்களையும் செய்யும்படி நிச்சயமாகத் தூண்டிக் கொண்டே இருப்பான். அல்லாஹ்வுடைய அருளும், கருணையும் உங்கள் மீது இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே எக்காலத்திலும் பரிசுத்தவானாக ஆகி இருக்க முடியாது. எனினும், அல்லாஹ், தான் நாடியவனைப் பரிசுத்தவானாக ஆக்குகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அனைத்தையும்) நன்கறிபவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். யாரேனும் அவனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றினால், மானக்கேடானவை மற்றும் தீயவற்றைச் செய்யுமாறே ஷைத்தான் அவனை ஏவுவான். அல்லாஹ்வின் அருளும் அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவருமே ஒருபோதும் மாசற்றவராய் விளங்கியிருக்க முடியாது. ஆயினும், அல்லாஹ், தான் நாடுகின்றவர்களைத் தூய்மையாக்குகின்றான். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசம் கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக்கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான், இன்னும் உங்கள்மீது அல்லாஹ்வுடைய பேரருளும், அவனின் கிருபையும் இல்லாதிருப்பின் உங்களில் ஒருவருமே ஒருபோதும் பரிசுத்தமாக முடியாது, எனினும் அல்லாஹ், தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான், மேலும், அல்லாஹ் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்.
22
وَلَا یَاْتَلِ اُولُوا الْفَضْلِ مِنْكُمْ وَالسَّعَةِ اَنْ یُّؤْتُوْۤا اُولِی الْقُرْبٰی وَالْمَسٰكِیْنَ وَالْمُهٰجِرِیْنَ فِیْ سَبِیْلِ اللّٰهِ ۪ۖ وَلْیَعْفُوْا وَلْیَصْفَحُوْا ؕ اَلَا تُحِبُّوْنَ اَنْ یَّغْفِرَ اللّٰهُ لَكُمْ ؕ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம்; (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களில் செல்வந்தரும் (பிறருக்கு உதவி செய்ய) இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (தர்மம்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதை நீங்கள் மன்னித்துப் புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், கருணையுடையவன் ஆவான்.
IFT
உங்களிடையே பண்பு நலன்களும், வசதிகளும் உடையவர்கள், ‘தங்களுடைய உறவினர்கள், வறியவர்கள் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்கள் ஆகியோருக்குக் கொடுத்துதவ மாட்டோம்’ என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களை மன்னித்து விட வேண்டும்; பொறுத்துக்கொள்ளவும் வேண்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டுமென நீங்கள் விரும்புவதில்லையா என்ன? மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களிலுள்ள (செல்வ)வளம் பெற்றோரும், (மற்றவருக்கு உதவ) வசதியுடையோரும் (தங்கள்) பந்துக்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எப்பொருளையும்) அவர்கள் கொடுக்காமலிருக்க சத்தியம் செய்ய வேண்டாம், அவர்களை மன்னித்து விடவும், (பழைய வருத்தத்தைப்) பொருட்படுத்தாது விட்டுவிடவும், அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
23
اِنَّ الَّذِیْنَ یَرْمُوْنَ الْمُحْصَنٰتِ الْغٰفِلٰتِ الْمُؤْمِنٰتِ لُعِنُوْا فِی الدُّنْیَا وَالْاٰخِرَةِ ۪ وَلَهُمْ عَذَابٌ عَظِیْمٌ ۟ۙ
முஹம்மது ஜான்
எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் கள்ளம் கபடில்லாத நம்பிக்கையாளரான கற்புடைய பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் (இறைவனுடைய) சாபத்திற்குள்ளாவார்கள். இன்னும், அவர்களுக்கு கடுமையான வேதனை உண்டு.
IFT
கற்புடைய, கள்ளங்கபடமற்ற, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் மீது எவர்கள் அவதூறு கூறுகின்றார்களோ அவர்கள் இம்மையிலும் மறுமையிலும் சபிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்குக் கடும் வேதனையும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக கற்புள்ள அப்பாவிகளான விசுவாசிகளான பெண்களை அவதூறு கூறுகிறார்களே அத்தகையோர் - இம்மையிலும், மறுமையிலும் (அல்லாஹ்வினால்) அவர்கள் சபிக்கப்பட்டுள்ளனர், இன்னும், (மறுமையில்) அவர்களுக்கு மகத்தான வேதனையும் உண்டு.
24
یَّوْمَ تَشْهَدُ عَلَیْهِمْ اَلْسِنَتُهُمْ وَاَیْدِیْهِمْ وَاَرْجُلُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! ஒரு நாளை நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக.) அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் (கூட) அவர்களுக்கு விரோதமாக அவர்கள் செய்தவற்றைப் பற்றி சாட்சியம் கூறும்.
IFT
அவர்கள் செய்த தீவினைகளைக் குறித்து அவர்களுடைய நாவுகளும் அவர்களுடைய கைகளும், கால்களும் எந்நாளில் அவர்களுக்கு எதிராக சாட்சியம் கூறுமோ அந்த நாளினை அவர்கள் மறந்துவிட வேண்டாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு விரோதமாக சாட்சி சொல்லும் நாளில் (அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு).
25
یَوْمَىِٕذٍ یُّوَفِّیْهِمُ اللّٰهُ دِیْنَهُمُ الْحَقَّ وَیَعْلَمُوْنَ اَنَّ اللّٰهَ هُوَ الْحَقُّ الْمُبِیْنُ ۟
முஹம்மது ஜான்
அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்குரிய நியாயமான கூலியை, அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான்; இன்னும் அல்லாஹ் தான் “பிரத்தியட்சமான உண்மை(யாளன்) என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் (அவர்களின் செயலுக்குத்தக்க) நீதமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாகவே கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையாளன், (அவர்களின் செயல்களை) வெளியாக்கிவிடக் கூடியவன் என்பதை அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
IFT
அந்நாளில் அவர்களுக்குரிய நியாயமான கூலியை அல்லாஹ் அவர்களுக்கு நிறைவாக அளிப்பான். மேலும், அவர்களுக்குத் தெரிந்துவிடும்; அல்லாஹ்தான் உண்மையானவன்; உண்மையை உண்மையாக்கிக் காட்டுபவன் என்று!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அந்நாளில் அவர்களுக்குரிய (செயல்களுக்கு) உண்மையான கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் பூரணமாகக் கொடுப்பான், நிச்சயமாக அல்லாஹ் -அவனே (கணக்குகளை நீதமாக வைத்து அவற்றை) வெளியாக்கிவிடக்கூடிய உண்மையாளன் என்பதை அவர்கள் அறிந்தும் கொள்வார்கள்.
26
اَلْخَبِیْثٰتُ لِلْخَبِیْثِیْنَ وَالْخَبِیْثُوْنَ لِلْخَبِیْثٰتِ ۚ وَالطَّیِّبٰتُ لِلطَّیِّبِیْنَ وَالطَّیِّبُوْنَ لِلطَّیِّبٰتِ ۚ اُولٰٓىِٕكَ مُبَرَّءُوْنَ مِمَّا یَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِیْمٌ ۟۠
முஹம்மது ஜான்
கெட்ட பெண்கள் கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள் கெட்ட பெண்களுக்கும் இன்னும்: நல்ல தூய்மையுடைய பெண்கள், நல்ல தூய்மையான ஆண்களுக்கும் நல்ல தூய்மையான ஆண்கள் நல்ல தூய்மையான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அவர்கள் கூறுவதை விட்டும் இவர்களே தூய்மையானவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவுமுண்டு.
அப்துல் ஹமீது பாகவி
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும்; கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் தகுமானவர்கள். (அவ்வாறே) பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும்; பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் தகுமானவர்கள். இத்தகைய (பரிசுத்தமான)வர்கள்தான் (இந்த நயவஞ்சகர்கள்) கூறும் குற்றங்குறைகளிலிருந்து பரிசுத்தமாக இருக்கின்றனர். இவர்களுக்கு (மறுமையில்) மன்னிப்பும் உண்டு; கண்ணியமான முறையில் உணவும் உண்டு.
IFT
ஒழுக்கங்கெட்ட பெண்கள், ஒழுக்கங்கெட்ட ஆண்களுக்கும், ஒழுக்கங்கெட்ட ஆண்கள், ஒழுக்கங்கெட்ட பெண்களுக்கும் உரியவர்களாவர். தூய்மையான பெண்கள் தூய்மையான ஆண்களுக்கும், தூய்மையான ஆண்கள் தூய்மையான பெண்களுக்கும் உரியவர்களாவர். புனைந்து உரைப்போரின் பழிச்சொற்களிலிருந்து அவர்களின் பண்பாடு தூய்மையானது. அவர்களுக்குப் பாவமன்னிப்பும் நற்பேறும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும், கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும், இன்னும் பரிசுத்தமான பெண்கள், பரிசுத்தமான ஆண்களுக்கும், பரிசுத்தமான ஆண்கள், பரிசுத்தமான பெண்களுக்கும் (தகுதியானவர்கள்.) அ(த்தகைய)வர்கள், இவர்கள் கூறுவதைவிட்டும் நீக்கம் செய்யப்பட்ட (பரிசுத்தமான)வர்கள், இவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
27
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لَا تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ بُیُوْتِكُمْ حَتّٰی تَسْتَاْنِسُوْا وَتُسَلِّمُوْا عَلٰۤی اَهْلِهَا ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத வீடுகளில் நீங்கள் (நுழையக் கருதினால்,) அதில் இருப்பவர்களுக்கு ஸலாம் கூறி (அவர்களுடைய) அனுமதியைப் பெறும் வரை நுழையாதீர்கள். இவ்வாறு நடந்து கொள்வது உங்களுக்கே மிக்க நன்று. (இதை மறந்து விடாது) நீங்கள் கவனத்தில் வைப்பீர்களாக!
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும், அவர்களுக்கு ஸலாம் கூறாத வரையிலும் நுழையாதீர்கள். இந்த வழிமுறைதான் உங்களுக்கு மிகச்சிறப்புடையதாகும். நீங்கள் இதனை நினைவில் வைப்பீர்கள் என எதிர்பார்க்கலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத (வேறு) வீடுகளில் (நீங்கள் நுழைய அவசியம் ஏற்பட்டால் அவ்வீடுகளில் உள்ளவர்களிடம்) நீங்கள் (மூன்று முறை) அனுமதி கோரி, அவ்வீடுகளில் உள்ளோருக்கு ஸலாம் கூறாதவரை (அவற்றில்) நுழையாதீர்கள், இ(வ்வாறு நடந்துகொள்வ)துவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும், நீங்கள் நல்லுபதேசம் பெறும் பொருட்டு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது).
28
فَاِنْ لَّمْ تَجِدُوْا فِیْهَاۤ اَحَدًا فَلَا تَدْخُلُوْهَا حَتّٰی یُؤْذَنَ لَكُمْ ۚ وَاِنْ قِیْلَ لَكُمُ ارْجِعُوْا فَارْجِعُوْا هُوَ اَزْكٰی لَكُمْ ؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், “திரும்பிப் போய் விடுங்கள்” என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வீட்டில் எவரையுமே நீங்கள் காணாவிடில், உங்களுக்கு அனுமதி கிடைக்கும் வரை அதில் நுழையாதீர்கள். ‘‘ (தவிர இச்சமயம் வீட்டில் நுழைய வேண்டாம்.) நீங்கள் திரும்பிவிடுங்கள்'' என்று (அவ்வீட்டில் இருக்கும் பெண்கள் அல்லது மற்ற எவராலும்) உங்களுக்குக் கூறப்பட்டால், அவ்வாறே நீங்கள் (தாமதிக்காது) திரும்பி விடுங்கள். இதுவே உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
ஆனால், அங்கு எவரையும் நீங்கள் காணவில்லையென்றால், உங்களுக்கு அனுமதி அளிக்கப்படாத வரையில் அங்கே நுழையாதீர்கள். மேலும், உங்களிடம் “திரும்பிச் செல்லுங்கள்” என்று கூறப்பட்டால், உடனே திரும்பிவிடுங்கள். இதுவே, உங்களுக்கு மிகத் தூய்மையான நடைமுறையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவற்றில் எவரையுமே நீங்கள் காணவில்லையென்றால், உங்களுக்கு அனுமதியளிக்கப்படும் வரையில் அவற்றில் நுழையாதீர்கள்; மேலும், “நீங்கள் திரும்பி விடுங்கள்” என்று (அவற்றில் உள்ளோரிடமிருந்து) உங்களுக்குக் கூறப்பட்டால் நீங்கள் திரும்பிவிடுங்கள்; அதுவே உங்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; இன்னும், நீங்கள் செய்பவைகளை அல்லாஹ் நன்கறிகிறவன்.
29
لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَدْخُلُوْا بُیُوْتًا غَیْرَ مَسْكُوْنَةٍ فِیْهَا مَتَاعٌ لَّكُمْ ؕ وَاللّٰهُ یَعْلَمُ مَا تُبْدُوْنَ وَمَا تَكْتُمُوْنَ ۟
முஹம்மது ஜான்
(எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; மேலும் அல்லாஹ் நீங்கள் பகிரங்கமாக செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) குடியில்லாத ஒரு வீட்டில் உங்கள் சாமான்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அதில் (அனுமதியின்றியே) நுழைந்தால் அது உங்கள்மீது குற்றமாகாது. நீங்கள் (உங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் நீங்கள் வெளியாக்குவதையும் அல்லாஹ் நன்கறிவான்.
IFT
ஆயினும் யாரும் குடியிருக்காத உங்களுக்குப் பலன் தரக்கூடிய ஏதாவது பொருள்கள் உள்ள வீடுகளில் நுழைவதில் உங்கள் மீது யாதொரு தவறுமில்லை. நீங்கள் வெளிப்படுத்துபவை மற்றும் மறைத்து வைப்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிவான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! எவராலும்) குடியிருக்கப்படாத வீடுகளில் - அவற்றில் உங்களுடைய பொருட்கள் இருந்து (அதற்காக) நீங்கள் அவற்றில் நுழைவது உங்கள் மீது குற்றமாகாது, மேலும் அல்லாஹ், நீங்கள் வெளியாக்குவதையும் மறைத்துக்கொள்வதையும் அறிவான்.
30
قُلْ لِّلْمُؤْمِنِیْنَ یَغُضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَیَحْفَظُوْا فُرُوْجَهُمْ ؕ ذٰلِكَ اَزْكٰی لَهُمْ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا یَصْنَعُوْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைக்கவும். அவர்கள் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். இது அவர்களைப் பரிசுத்தமாக்கி வைக்கும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும் தங்களுடைய வெட்கத்தலங்களைப் பாதுகாத்துக் கொள்ளும்படியும் நீர் கூறும். இதுவே, அவர்களுக்கு மிகத் தூய்மையான வழிமுறையாகும். அவர்கள் செய்யும் அனைத்தையும் திண்ணமாக, அல்லாஹ் நன்கு தெரிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசிகளுக்கு நீர் கூறுவீராக: “அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும் தங்கள் மர்மஸ்தனங்களையும் பேணிக்காத்துக் கொள்ளவும், “அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவைகளை நன்கு உணர்பவன்.
31
وَقُلْ لِّلْمُؤْمِنٰتِ یَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَیَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْیَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰی جُیُوْبِهِنَّ ۪ وَلَا یُبْدِیْنَ زِیْنَتَهُنَّ اِلَّا لِبُعُوْلَتِهِنَّ اَوْ اٰبَآىِٕهِنَّ اَوْ اٰبَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اَبْنَآىِٕهِنَّ اَوْ اَبْنَآءِ بُعُوْلَتِهِنَّ اَوْ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اِخْوَانِهِنَّ اَوْ بَنِیْۤ اَخَوٰتِهِنَّ اَوْ نِسَآىِٕهِنَّ اَوْ مَا مَلَكَتْ اَیْمَانُهُنَّ اَوِ التّٰبِعِیْنَ غَیْرِ اُولِی الْاِرْبَةِ مِنَ الرِّجَالِ اَوِ الطِّفْلِ الَّذِیْنَ لَمْ یَظْهَرُوْا عَلٰی عَوْرٰتِ النِّسَآءِ ۪ وَلَا یَضْرِبْنَ بِاَرْجُلِهِنَّ لِیُعْلَمَ مَا یُخْفِیْنَ مِنْ زِیْنَتِهِنَّ ؕ وَتُوْبُوْۤا اِلَی اللّٰهِ جَمِیْعًا اَیُّهَ الْمُؤْمِنُوْنَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீர் கூறுவீராக: அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும். தங்கள் அலங்காரத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக்கூடிய (ஹிஜாபின் வெளிப்புறத்)தைத் தவிர எதையும் வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும். தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும். பெண்கள் தங்கள் கணவர்கள், தங்கள் தந்தைகள், தங்கள் கணவர்களின் தந்தைகள், தங்கள் பிள்ளைகள், தங்கள் கணவர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் பிள்ளைகள் அல்லது (முஸ்லிமாகிய) தங்கள் இனத்தாரின் பெண்கள், தங்கள் அடிமைகள் அல்லது பெண்களின் விருப்பமற்ற தங்களை அண்டி வாழும் ஆண்கள், பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துகொள்ளாத சிறு பிராயத்தையுடைய (ஆண்) குழந்தைகள் ஆகிய இவர்களைத் தவிர மற்றெவர் முன்னும் தங்களின் அலங்காரத்தை அறவே வெளிப்படுத்த வேண்டாம். இன்னும் (தாங்கள் அணிந்திருக்கும் ஆடை ஆபரணங்களை போன்ற) மறைந்திருக்கும் தங்கள் அலங்காரத்தை அறிவிக்கும் நோக்கத்துடன் தங்கள் கால்களை (பூமியில்) தட்டித் தட்டி நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! (இதில் எதிலும் உங்களால் தவறு ஏற்பட்டு விட்டால்) நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு பாவமன்னிப்பைக் கோரி அல்லாஹ்வின் பக்கமே (உங்கள் மனதால்) திரும்புங்கள்.
IFT
மேலும் (நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். தங்கள் கணவன்மார்கள், தங்களுடைய தந்தையர்கள், தங்கள் கணவன்மார்களின் தந்தையர், தங்களுடைய மகன்கள், தங்கள் கணவன்மார்களின் மகன்கள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் மகன்கள், சகோதரிகளின் மகன்கள், தங்களுடன் நெருங்கிப் பழகும் பெண்கள், தங்களுடைய ஆண், பெண் அடிமைகள் மற்றும் தவறான வேட்கைகளில்லாத தம்மை அண்டி வாழுகின்ற ஆண்கள், மேலும், பெண்களின் அந்தரங்க விஷயங்களைப் பற்றி எதுவும் தெரிந்திராத சிறுவர்கள் ஆகிய இவர்கள் முன்னிலையிலன்றி (வேறு எவரிடத்திலும்) தங்களுடைய அழகை அவர்கள் வெளிக்காட்ட வேண்டாம். தாங்கள் மறைத்து வைத்திருக்கும் தங்களின் அழகை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக தங்களுடைய கால்களை(ப் பூமியில்) அடித்துக் கொண்டு நடக்க வேண்டாம். நம்பிக்கையாளர்களே! நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் பாவமன்னிப்புக் கோரி மீளுங்கள். நீங்கள் வெற்றியடையக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைகளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும், தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும் அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைத் தவிர தங்கள் (அலங்காரத்தை,) அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் முந்தானைகளை தம் மேல் சட்டைகளின்மீது போட்டு (தலை கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்து)க் கொள்ள வேண்டும், மேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவர்களின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவர்களின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள் அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தங்களுடைய வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்து கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றெவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம், அன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைத்திருப்பதை அறியப்படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம், விசுவாசிகளே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவ மன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யுங்கள்.
32
وَاَنْكِحُوا الْاَیَامٰی مِنْكُمْ وَالصّٰلِحِیْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآىِٕكُمْ ؕ اِنْ یَّكُوْنُوْا فُقَرَآءَ یُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் எவருக்கும் வாழ்க்கைத் துணை இல்லாவிட்டால், அவர்களுக்கு(ம் விதவைகளுக்கும்) திருமணம் செய்து வையுங்கள். (அவ்வாறே) உங்கள் அடிமையிலுள்ள நல்லவர்கள் ஆணாயினும் பெண்ணாயினும் சரி (வாழ்க்கைத் துணைவரில்லாத) அவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாயிருந்தாலும் அல்லாஹ் தன் அருளைக்கொண்டு அவர்களுடைய வறுமையை நீக்கிவிடுவான். (கொடை கொடுப்பதில்) அல்லாஹ் மிக்க விசாலமானவன், (மனிதர்களின் நிலைமையை) நன்கறிந்தவன் ஆவான்.
IFT
உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்கும், மேலும், உங்களுடைய ஆண்பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் வறியவர்களாயிருந்தால் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களை தனவந்தர்களாக்குவான். அல்லாஹ் மிகவும் விசாலமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களில் வாழ்க்கைத் துணையில்லாதவருக்கும் (அவ்வாறே வாழ்க்கைத் துணைவரில்லாத) உங்களுடைய ஆண் அடிமைகள், இன்னும், அடிமைப்பெண்களிலிருந்து நல்லொழுக்கமுள்ளவர்களுக்கும் திருமணம் செய்து வையுங்கள், அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன்னுடைய பேரருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான், மேலும், (நல்குவதில்) அல்லாஹ் விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.
33
وَلْیَسْتَعْفِفِ الَّذِیْنَ لَا یَجِدُوْنَ نِكَاحًا حَتّٰی یُغْنِیَهُمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَالَّذِیْنَ یَبْتَغُوْنَ الْكِتٰبَ مِمَّا مَلَكَتْ اَیْمَانُكُمْ فَكَاتِبُوْهُمْ اِنْ عَلِمْتُمْ فِیْهِمْ خَیْرًا ۖۗ وَّاٰتُوْهُمْ مِّنْ مَّالِ اللّٰهِ الَّذِیْۤ اٰتٰىكُمْ ؕ وَلَا تُكْرِهُوْا فَتَیٰتِكُمْ عَلَی الْبِغَآءِ اِنْ اَرَدْنَ تَحَصُّنًا لِّتَبْتَغُوْا عَرَضَ الْحَیٰوةِ الدُّنْیَا ؕ وَمَنْ یُّكْرِهْهُّنَّ فَاِنَّ اللّٰهَ مِنْ بَعْدِ اِكْرَاهِهِنَّ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
விவாகம் செய்வதற்கு (உரிய வசதிகளைப்) பெற்றுக் கொள்ளாதவர்கள் - அவர்களை அல்லாஹ் தம் நல்லருளினால் சீமான்களாக்கும் வரை - அவர்கள் ஒழுக்கம் பேணட்டும். இன்னும் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் (அடிமைகளில் உரிய தொகையைக் கொடுத்தோ அல்லது முறையாக சம்பாதித்துத் தருவதாக வாக்குக் கொடுத்தோ) எவரேனும் (சுதந்திரமாவதற்கான) உரிமைப் பத்திரம் விரும்பினால் - அதற்குரிய நன்மையான தகுதியை நீங்கள் அவ்வடிமையிடம் (இருப்பது பற்றி) அறிவீர்களாயின், அவர்களுக்குத் உரிமை பத்திரம் எழுதிக் கொடுங்கள்; இன்னும் (அதற்கான பொருளை) அல்லாஹ் உங்களுக்குத் தந்திருக்கும் பொருளிலிருந்து அவர்களுக்குக் கொடுப்பீர்களாக; மேலும், தங்கள் கற்பைப் பேணிக் கொள்ள விரும்பும் உங்கள் அடிமைப் பெண்களை - அற்பமான உலக வாழ்க்கை வசதிகளைத் தேடியவர்களாக - விபசாரத்திற்கு (அவர்களை) நிர்ப்பந்திக்காதீர்கள்; அப்படி எவனேனும் அந்தப் பெண்களை நிர்ப்பந்தித்தால் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(வறுமையினால்) திருமணம் செய்ய சக்தியற்றோர், அல்லாஹ் தன் அருளைக் கொண்டு (அவர்களுடைய வறுமையை நீக்கிப்) பொருளைக் கொடுக்கும் வரை அவர்கள் (நோன்பு நோற்றுக் கொண்டு) உறுதியாகத் தங்கள் கற்பைக் காத்துக் கொள்ளவும். உங்கள் அடிமைகளில் எவரேனும் (ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேகரித்து உங்களுக்குத் தருவதாகவும், தன்னை விடுதலை செய்து விடும்படியாகவும் கூறி அதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதித் தரும்படிக் கோரி, அவர்களிடம் அதற்குரிய தகுதியை (அதாவது: விடுதலையான பின்னர், அவர்கள் கண்ணியமான முறையில் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வார்கள் என்று) நீங்கள் கண்டால், உரிமைப் பத்திரத்தை அவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிடுங்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்தும் நீங்கள் அவர்களுக்குக் கொடு(த்து அவர்கள் விடுதலையாக உதவி செய்யு)ங்கள். தங்கள் கற்பை பாதுகாத்துக் கொண்டிருக்கும் உங்கள் அடிமைப் பெண்களை இவ்வுலக வாழ்க்கைக்குரிய அற்பப் பொருளை நீங்கள் அடையும் பொருட்டு விபசாரம் செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்காதீர்கள். அவர்களை எவரேனும் (அவர்கள் விருப்பத்திற்கு மாறாக) நிர்ப்பந்தத்திற்குள்ளாக்கி விட்டால், நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து கருணை புரிவான்.(எனினும், நிர்ப்பந்தித்தவன் பாவி ஆகிவிடுவான்.)
IFT
திருமணத்திற்குரிய வசதி வாய்ப்பைப் பெறாதவர்கள் அல்லாஹ் தன்னுடைய அருளால் அவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கும்வரை ஒழுக்கத்தூய்மையை மேற்கொள்ளட்டும். உங்களுடைய அடிமைகளில் எவர்கள் ‘முகாத்தபத்’* கோருகின்றார்களோ அவர்களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால் அவர்களோடு ‘முகாத்தபத்’ செய்து கொள்ளுங்கள். மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்திலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். மேலும், உலக வாழ்க்கையின் இலாபங்களைத் தேடிக்கொள்வதற்காக உங்கள் அடிமைப் பெண்களை விபச்சாரத்திற்காக பலவந்தப்படுத்தாதீர்கள். அவர்கள் சுயமே ஒழுக்கத்தூய்மையை விரும்பும்போது அவர்களை எவரேனும் பலவந்தப்படுத்தினால், அவர்கள் பலவந்தப்படுத்தப்பட்ட பின்பும் அல்லாஹ் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குபவனாகவும் மிகுந்த கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திருமணத்தை(ச்செய்ய வசதிகளை)ப்பெற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ் தன் பேரருளால் அவர்களை சீமான்களாக்கி வைக்கும்வரை பத்தினித்தனமாக இருந்து கொள்ளவும், உங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிலிருந்து (தன்னை விடுவிப்பதற்குரிய) உரிமைப் பத்திரத்தை எழுதுமாறு தேடுகிறார்களே அத்தகையோர் - அவர்களில் நன்மையை நீங்கள் அறிந்தால், (உரிமைப் பத்திரத்தை) அவர்களுக்கு எழுதிக் கொடுத்து விடுங்கள், (விசுவாசிகளே!) இன்னும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருளிலிருந்து நீங்கள் அவர்களுக்கும் கொடுங்கள், இன்னும், உங்கள் அடிமைப் பெண்களை – பத்தினித்தனத்தை அவர்கள் நாடுவார்களானால் இவ்வுலக வாழ்க்கைக்குரிய ஓர் அற்பப் பொருளை நீங்கள் அடைவதற்காக, விபச்சாரத்திற்கு (அதைச் செய்யுமாறு) நிர்ப்பந்திக்காதீர்கள், அவர்களை எவரேனும் நிர்ப்பந்தித்தால், நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டபின் (அவர்களை) மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.
34
وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكُمْ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ وَّمَثَلًا مِّنَ الَّذِیْنَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِیْنَ ۟۠
முஹம்மது ஜான்
இன்னும் நிச்சயமாக உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர்களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் உங்களுக்குத் தெளிவான வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றவர்களின் உதாரணங்களையும், இறையச்சமுடையவர்களுக்கு நல்லுபதேசங்களையும் (இதில்) இறக்கி வைத்திருக்கிறோம்;
IFT
மேலும், நாம் தெள்ளத்தெளிவாக வழிகாட்டும் வசனங்களை உங்களுக்கு அருளி இருக்கின்றோம்; உங்களுக்கு முன் சென்ற சமூகங்களின் (படிப்பினை மிக்க) உதாரணங்களையும் நாம் உங்கள் முன் வைத்துள்ளோம். மேலும், இறையச்சம் கொள்ளக் கூடியவர்களுக்குப் பயனளிக்கும் நல்லுரைகளையும் நாம் வழங்கியுள்ளோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், தெளிவுபடுத்தும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்றுள்ளோர்களிலிருந்து, உதாரணத்தையும் பயபக்தியுடையோர்க்கு நல்லுபதேசத்தையும் (இதில்) உங்கள்பால் நிச்சயமாக நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.
35
اَللّٰهُ نُوْرُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ مَثَلُ نُوْرِهٖ كَمِشْكٰوةٍ فِیْهَا مِصْبَاحٌ ؕ اَلْمِصْبَاحُ فِیْ زُجَاجَةٍ ؕ اَلزُّجَاجَةُ كَاَنَّهَا كَوْكَبٌ دُرِّیٌّ یُّوْقَدُ مِنْ شَجَرَةٍ مُّبٰرَكَةٍ زَیْتُوْنَةٍ لَّا شَرْقِیَّةٍ وَّلَا غَرْبِیَّةٍ ۙ یَّكَادُ زَیْتُهَا یُضِیْٓءُ وَلَوْ لَمْ تَمْسَسْهُ نَارٌ ؕ نُوْرٌ عَلٰی نُوْرٍ ؕ یَهْدِی اللّٰهُ لِنُوْرِهٖ مَنْ یَّشَآءُ ؕ وَیَضْرِبُ اللّٰهُ الْاَمْثَالَ لِلنَّاسِ ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟ۙ
முஹம்மது ஜான்
அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி)யில் இருக்கிறது; அக் கண்ணாடி ஒளிவீசும் நட்சத்திரத்தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த்திசையை சேர்ந்ததுமன்று; மேல்திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டாவிடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளி மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப்பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான். அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கின்ற ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கிறது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய (பிரகாசிக்கின்ற) ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டு) இருக்கிறது. (அதில்) பாக்கியம் பெற்ற ‘ஜைத்தூன்' மரத்தின் எண்ணெய் எரிக்கப்படுகிறது. அது கீழ்நாட்டில் உள்ளதுமல்ல; மேல்நாட்டில் உள்ளதுமல்ல. அந்த எண்ணெயை நெருப்புத் தொடாவிடினும் அது பிரகாசிக்கவே செய்கிறது. (அதுவும்) பிரகாசத்திற்கு மேல் பிரகாசமாக (பிரகாசிக்கிறது). அல்லாஹ், தான் நாடியவர்களைத் தன் பிரகாசத்தின் பக்கம் செலுத்துகிறான். மனிதர்களுக்கு அல்லாஹ் (தன் தன்மையை அறிவிக்கும் பொருட்டு) இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன்.
IFT
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான். (பேரண்டத்தில்) அவனது ஒளிக்கு உவமை இவ்வாறாகும்; ஒரு மாடத்தில் விளக்கு வைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விளக்கு ஒரு கண்ணாடிக் கூண்டினுள் இருக்கிறது; அக்கண்ணாடிக் கூண்டு முத்தாய் ஒளிரும் தாரகை போன்றுள்ளது. அவ்விளக்கு கிழக்கைச் சேர்ந்ததாயும், மேற்கைச் சேர்ந்ததாயும் இல்லாத, அருள் பெற்ற ஒலிவ மரத்தின் எண்ணெய் கொண்டு எரிக்கப்படுகின்றது. அதன் எண்ணெய் தானாக ஒளிரவே செய்யும்; நெருப்பு அதனைத் தீண்டாத போதிலும்! (இவ்வாறு) ஒளிக்கு மேல் ஒளி (அதிகமாவதற்கான அனைத்துக் காரணங்களும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன.) அல்லாஹ் தான் நாடுவோர்க்கு தன்னுடைய ஒளியின் பக்கம் வழிகாட்டுகின்றான். அவன் உவமைகளின் வாயிலாக மக்களுக்கு விஷயத்தை விளக்குகின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியின் பிரகாசமாக இருக்கிறான், அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம்: அதில் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும், அவ்விளக்கு கண்ணாடியினுள் இருக்கிறது, நிச்சயமாக அக்கண்ணாடி பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தைப் போன்றதாகும், (அது) பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எரிக்கப்படுகிறது, (அது) கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று, மேல் திசையைச் சேர்ந்ததுமன்று, அதன் எண்ணெய், அதை நெருப்பு தொடாவிடினும் பிரகாசிக்கவே முற்படும், (இவை யாவும் இணைந்து) ஒளிக்குமேல் ஒளியாகும், அல்லாஹ் தான் நாடியவர்களைத் தன் பிராகாசத்தின் பால் செலுத்துகிறான், மேலும், மனிதர்களுக்கு அல்லாஹ் இத்தகைய உதாரணங்களைக் கூறுகிறான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளைப்பற்றியும் நன்கறிந்தவன்.
36
فِیْ بُیُوْتٍ اَذِنَ اللّٰهُ اَنْ تُرْفَعَ وَیُذْكَرَ فِیْهَا اسْمُهٗ ۙ یُسَبِّحُ لَهٗ فِیْهَا بِالْغُدُوِّ وَالْاٰصَالِ ۟ۙ
முஹம்மது ஜான்
இறை இல்லங்களில் அவனது பெயர் கூறப்படவேண்டுமென்றும் (அவற்றின் கண்ணியம்) உயர்த்தப்படவேண்டுமென்றும் அல்லாஹ் கட்டளையிடுகிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமின்கள்) அவனை துதி செய்து கொண்டிருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவ்விளக்குகள்) வீடுகளில் இருக்கின்றன. அவ்வீடுகள் அவற்றில் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறப்படவும், அதைக் கண்ணியப்படுத்தப்படவும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்துகொண்டு,
IFT
(அவனது ஒளியின்பால் வழிகாட்டுதலைப் பெற்றவர்கள்) எந்த இல்லங்கள் உயர்த்தப்படுவதற்கும், எங்கே தன் பெயர் நினைவுகூரப்படுவதற்கும் அல்லாஹ் அனுமதி வழங்கியுள்ளானோ அந்த இல்லங்களில் காணப்படுகிறார்கள். அவற்றில் காலை, மாலை நேரங்களில் அவனைத் துதித்துக் கொண்டிருப்பவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்வின் இல்லங்களான அவ்)வீடுகளில் (வணக்க வழிபாடுகளின் மூலம்) அவை உயர்த்தப்படவும், அவற்றில் அவனது பெயர் கூறப்படவேண்டுமெனவும் அல்லாஹ் கட்டளையிடுகிறான், அவற்றில் காலையிலும் மாலையிலும் அவனை (நல்லடியார்கள்) துதி செய்வர்.
37
رِجَالٌ ۙ لَّا تُلْهِیْهِمْ تِجَارَةٌ وَّلَا بَیْعٌ عَنْ ذِكْرِ اللّٰهِ وَاِقَامِ الصَّلٰوةِ وَاِیْتَآءِ الزَّكٰوةِ یَخَافُوْنَ یَوْمًا تَتَقَلَّبُ فِیْهِ الْقُلُوْبُ وَالْاَبْصَارُ ۟ۗۙ
முஹம்மது ஜான்
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள்.
IFT
எத்தகையோர் எனில், இறைவனை நினைவுகூருவதை விட்டும், தொழுகையை நிலைநாட்டுவது மற்றும் ஜகாத் கொடுப்பதை விட்டும் வியாபாரமும் கொள்வினை கொடுப்பினையும் அவர்களைப் பாராமுகமாக்கி விடுவதில்லை; இதயங்கள் நிலைகுலைந்து, பார்வைகள் நிலைகுத்தி விடக்கூடிய ஒருநாள் குறித்து அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவ்வாறு துதி செய்யும்) ஆடவர்கள் - அவர்களை வாணிபமோ (கொடுப்பினையின் மூலம்) விற்பனையோ, அல்லாஹ்வை நினைவு கூருவதைவிட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதைவிட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் (பராமுகமாக்கி) வீணாக்கிவிடாது, இன்னும், ஒருநாளை அவர்கள் பயந்து கொண்டிருப்பர், அதில் (அந்நாளில்) இதயங்களும், பார்வைகளும் (திடுக்கிட்டுத்) தடுமாற்றமடைந்து விடும்.
38
لِیَجْزِیَهُمُ اللّٰهُ اَحْسَنَ مَا عَمِلُوْا وَیَزِیْدَهُمْ مِّنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ یَرْزُقُ مَنْ یَّشَآءُ بِغَیْرِ حِسَابٍ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்துகொண்டிருந்த (நன்மையான)வற்றை விட அழகான கூலியை அல்லாஹ் அவர்களுக்குக் கொடுப்பான். தன் அருளைக்கொண்டு மேன்மேலும் அவர்களுக்கு அதிகமாகவே கொடுப்பான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுக்கிறான்.
IFT
(அவர்கள் இப்படி ஏன் செய்கின்றார்கள் என்றால்) அவர்கள் செய்த மிக அழகிய செயல்களுக்குரிய கூலியை அல்லாஹ் அவர்களுக்கு அருள்வதற்காகவும் அவனுடைய அருளால் இன்னும் அதிகமாக அவர்களுக்கு வழங்குவதற்காகவும்தான்! மேலும், அல்லாஹ் தான் நாடுவோர்க்கு கணக்கின்றி வழங்குகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு மிக அழகானதை அல்லாஹ் அவர்களுக்கு நற்கூலியாகக் கொடுப்பதற்காகவும், தன் பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகமாக்கவும், (இவ்வாறு தொழுது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வருவார்கள்.) மேலும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றியே கொடுப்பான்.
39
وَالَّذِیْنَ كَفَرُوْۤا اَعْمَالُهُمْ كَسَرَابٍۭ بِقِیْعَةٍ یَّحْسَبُهُ الظَّمْاٰنُ مَآءً ؕ حَتّٰۤی اِذَا جَآءَهٗ لَمْ یَجِدْهُ شَیْـًٔا وَّوَجَدَ اللّٰهَ عِنْدَهٗ فَوَفّٰىهُ حِسَابَهٗ ؕ وَاللّٰهُ سَرِیْعُ الْحِسَابِ ۟ۙ
முஹம்மது ஜான்
அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை); ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நிராகரிப்பவர்களாகி விட்டார்களோ, அவர்களுடைய செயல்கள் வனாந்தரத்தில் தோன்றும் கானலைப்போல் இருக்கின்றன. தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொண்டு அதன் சமீபமாகச் சென்றபொழுது ஒன்றையுமே அவன் காணவில்லை; எனினும், அல்லாஹ் தன்னிடமிருப்பதை அவன் காண்கிறான். அவன் (இவனை மரிக்கச் செய்து) இவனுடைய கணக்கை முடித்து விடுகிறான். கேள்வி கணக்குக் கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்.
IFT
(இதற்கு மாறாக) எவர்கள் இறைவனை நிராகரித்தார்களோ அவர்களின் செயல்களுக்கு உவமை (நீரில்லாப்) பாலைவனத்தின் கானலாகும். தாகித்தவன் அதனை நீர் என்று கருதுகின்றான். இறுதியில் அவன் அந்த இடத்திற்கு வந்தபோது, அங்கு எதையும் காணவில்லை. ஆனால், அவன் அங்கு கண்டுகொண்டது அல்லாஹ்வை! அல்லாஹ்வோ அவனுக்குரிய கணக்கை முழுமையாகத் தீர்த்துவிடுகின்றான். அல்லாஹ் கணக்கு வாங்குவதில் விரைவானவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் நிராகரித்துவிட்டார்களே அவர்கள் - அவர்களின் செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் (நீரைப்) போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொள்கிறான், எதுவரையெனில் (முடிவாக) அவன் அதனிடத்தில் வந்தடைந்தால் அதை அவன் ஒரு பொருளாகப் பெற்றுக் கொள்ள மாட்டான், (மறுமையில் இது காஃபிர்களின் நிலையாகும், அங்கு) அதனிடத்தில் (தனக்கெதிரில்) அல்லாஹ்வைக் காண்கிறான்; அப்போது அவனுடைய கணக்கை அவனுக்கு அவன் (அல்லாஹ்) நிறைவு செய்துவிடுகிறான், இன்னும், அல்லாஹ் கணக்குத்தீர்ப்பதில் தீவிரமானவன்.
40
اَوْ كَظُلُمٰتٍ فِیْ بَحْرٍ لُّجِّیٍّ یَّغْشٰىهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌ ؕ ظُلُمٰتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ ؕ اِذَاۤ اَخْرَجَ یَدَهٗ لَمْ یَكَدْ یَرٰىهَا ؕ وَمَنْ لَّمْ یَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ ۟۠
முஹம்மது ஜான்
அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அல்லது (அவர்களுடைய செயல்) கடலின் ஆழத்திலுள்ள இருளுக்கு ஒப்பாக இருக்கிறது. அதை அலைக்கு மேல் அலைகள் மூடிக் கொண்டிருப்பதுடன் மேகங்களும் (கவிழ்ந்து) மூடிக்கொண்டிருக்கின்றன. அன்றி, அவன் தன் கையை நீட்டிய போதிலும் அதைக் காண முடியாத அளவுக்கு இருள்களும் ஒன்றன்மேல் ஒன்றாகச் சூழ்ந்துகொண்டு இருக்கின்றன. அல்லாஹ் எவனுக்குப் பிரகாசத்தைக் கொடுக்கவில்லையோ அவனுக்கு (எங்கிருந்தும்) ஒரு பிரகாசமும் கிட்டாது.
IFT
அல்லது (நிராகரிப்பாளர்களின் செயல்கள்) ஆழ்கடலில் இருள்களைப் போன்று உள்ளன. அந்தக் கடலை ஓர் அலை மூடியுள்ளது; அதற்கு மேல் மற்றொரு அலை; அதற்கு மேல் மேகம்! (இப்படியாக) இருளுக்கு மேல் இருள் என எங்கும் இருள்மயம்! மனிதன் தனது கையை நீட்டினால் அதைக்கூட அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை வழங்கவில்லையோ பிறகு அவனுக்கு வேறு எந்த ஒளியுமில்லை!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லது (அவர்களுடைய செயல்களுக்கு உதாரணம்:) ஆழ் கடலிலுள்ள இருள்களைப் போன்றதாகும், அதனை ஒரு அலை மூடிக் கொள்கிறது, அதற்கு மேல் மற்றோர் அலை, அதற்கு மேல் மேகம் (இவ்வாறு) பல இருள்கள், அதில் சில சிலவற்றுக்குமேல் இருக்கின்றன, (இருள்களால் சூழப்பட்ட நிலையில் பார்ப்பவன்) தன் கையை வெளியாக்கி (நீட்டி)னால் அதனை அவனால் பார்க்க முடியாது, இன்னும், எவருக்கு அல்லாஹ் ஒளியை ஆக்கவில்லையோ அவருக்கு (எங்கும்) ஒளி இல்லை.
41
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُسَبِّحُ لَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَالطَّیْرُ صٰٓفّٰتٍ ؕ كُلٌّ قَدْ عَلِمَ صَلَاتَهٗ وَتَسْبِیْحَهٗ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும் (இவற்றிற்கு மத்தியில் உள்ளவையும் குறிப்பாக) பறவைகளும் (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக அல்லாஹ்வை துதித்துக் கொண்டிருக்கின்றன என்பதை (நபியே!) நீர் காணவில்லையா? இவை அனைத்தும் தாங்கள் புகழ்ந்து வணங்க வேண்டிய முறையை நிச்சயமாக அறிந்தே இருக்கின்றன. அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும், சிறகடித்துப் பறக்கும் பறவைகளும் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா என்ன? ஒவ்வொன்றும் தன்னுடைய தொழுகையையும் துதிமுறையையும் அறிந்திருக்கின்றது. மேலும், இவை செய்பவை அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக, அல்லாஹ் - அவனை வானங்களிலும், பூமியிலும் உள்ளவைகளும், (தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)தவண்ணமாக பறவைகளும் துதி செய்து கொண்டிருக்கின்றன, என்பதை (நபியே!) நீர் காணவில்லையா? (இவற்றில்) ஒவ்வொன்றும் தன் தொழுகையையும் அவனைத் துதி செய்யும் முறையையும் திட்டமாக அறிந்திருக்கின்றன, மேலும், அல்லாஹ் அவைகள் செய்பவற்றை நன்கறிகிறவன்.
42
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۚ وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟
முஹம்மது ஜான்
இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள் பூமி (ஆகியவை)யின் ஆட்சி அல்லாஹ்வுக்கு உரியதே! அவனிடமே (அனைவரும்) திரும்பச் செல்ல வேண்டியதிருக்கிறது.
IFT
வானங்கள் மற்றும் பூமியுடைய ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. மேலும், அவனிடமே அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், வானங்களுடையவும், பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது!, அல்லாஹ்வின்பாலே அனைவரின் திரும்பச் செல்லுதல் இருக்கிறது.
43
اَلَمْ تَرَ اَنَّ اللّٰهَ یُزْجِیْ سَحَابًا ثُمَّ یُؤَلِّفُ بَیْنَهٗ ثُمَّ یَجْعَلُهٗ رُكَامًا فَتَرَی الْوَدْقَ یَخْرُجُ مِنْ خِلٰلِهٖ ۚ وَیُنَزِّلُ مِنَ السَّمَآءِ مِنْ جِبَالٍ فِیْهَا مِنْ بَرَدٍ فَیُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ وَیَصْرِفُهٗ عَنْ مَّنْ یَّشَآءُ ؕ یَكَادُ سَنَا بَرْقِهٖ یَذْهَبُ بِالْاَبْصَارِ ۟ؕ
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேகக் கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
அப்துல் ஹமீது பாகவி
(பல பாகங்களிலும் சிதறிக் கிடக்கும்) மேகங்களை ஓட்டி அவற்றை ஒன்று சேர்த்து ஒன்றின் மேல் ஒன்றாக நிச்சயம் அல்லாஹ்தான் அடுக்குகிறான் என்பதை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? பின்னர், அந்த மேகங்களின் மத்தியிலிருந்து மழையை பொழியச் செய்வதையும் நீர் காண்கிறீர். அவனே வானத்தில் மலை போன்றிருக்கும் மேகங்களிலிருந்து ஆலங்கட்டி (கல் மாரி)யையும் பொழியச் செய்கிறான். அதை அவன் நாடியவர்கள் மீது விழும்படி செய்கிறான். அவன் நாடியவர்களை விட்டு அதைத் தடுத்துக் கொள்கிறான். அதன் மின்னலின் வெளிச்சம் பார்வையைப் பறிக்கப் பார்க்கிறது.
IFT
நீங்கள் பார்க்கவில்லையா என்ன? அல்லாஹ் மேகத்தை மெல்ல மெல்ல நகர்த்துகின்றான். பின்னர், அதன் சிதறல்களை ஒன்றிணைக்கின்றான். பிறகு அதனை அடர்த்தியான மேகமாக ஆக்குகின்றான். பிறகு, அதற்கிடையிலிருந்து மழைத்துளிகள் வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை நீர் பார்க்கின்றீர். மேலும், அவன் வானத்திலிருந்து அதிலே உயர்ந்து நிற்கின்ற மலைகளின் காரணத்தால் பனிக்கட்டிகளைப் பொழிவிக்கின்றான். பிறகு, அதன் மூலம், தான் நாடுகின்றவர்களுக்கு இழப்பை ஏற்படுத்துகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்கின்றான். அதனுடைய மின்னலின் ஒளி, பார்வைகளைப் பறிக்க முனைகின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் (பல பாகங்களிலிருந்து) மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதன்பின் ஒன்றின்மேல் ஒன்றாக இணையச் செய்கிறான், (பின்னர், அம்மேகங்களான) அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர், அவனே வானத்திலுள்ள மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்கி வைக்கிறான், அதனைக்கொண்டு அவன் நாடியவர்களைப் பிடிக்கச் செய்கிறான், இன்னும், அவன் நாடியவர்களைவிட்டு அதனைத் திருப்பிவிடுகிறான், அதன் மின்னலின் ஒளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.
44
یُقَلِّبُ اللّٰهُ الَّیْلَ وَالنَّهَارَ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَعِبْرَةً لِّاُولِی الْاَبْصَارِ ۟
முஹம்மது ஜான்
இரவையும் பகலையும் அல்லாஹ்வே மாறி மாறி வரச் செய்கிறான்; நிச்சயமாக சிந்தனையுடையவர்களுக்கு இதில் (தக்க) படிப்பினை இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
இரவையும் பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக் கொண்டு இருக்கிறான். அறிவுடையவர்களுக்கு இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு.
IFT
இரவையும் பகலையும் அவன்தான் மாற்றிக் கொண்டிருக்கின்றான். திண்ணமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது, பார்வை உள்ளவர்களுக்கு!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவையும், பகலையும் அல்லாஹ்வே (திருப்பித் திருப்பி) மாற்றிக்கொண்டு இருக்கிறான், பார்வைகள் உடையோர்க்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை உண்டு.
45
وَاللّٰهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّنْ مَّآءٍ ۚ فَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی بَطْنِهٖ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰی رِجْلَیْنِ ۚ وَمِنْهُمْ مَّنْ یَّمْشِیْ عَلٰۤی اَرْبَعٍ ؕ یَخْلُقُ اللّٰهُ مَا یَشَآءُ ؕ اِنَّ اللّٰهَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟
முஹம்மது ஜான்
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு; அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு; அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு; தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) ஊர்ந்து செல்லக்கூடிய (உயிர்ப் பிராணிகள்) அனைத்தையும் அல்லாஹ் ஒரேவித தண்ணீரைக் கொண்டு படைத்திருந்த போதிலும் (அவை அனைத்தும் ஒரு வகையாக இருக்கவில்லை.) அவற்றில் சில தன் வயிற்றால் (பாம்புகளைப் போல்) ஊர்ந்து செல்கின்றன. அவற்றில் சில இரு கால்களால் நடக்கின்றன. அவற்றில் சில நான்கு கால்களால் நடக்கின்றன. (இவ்வாறு) அல்லாஹ் தான் விரும்பியவற்றை (விரும்பியவாறு) படைப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் மிக்க ஆற்றலுடையவன் ஆவான்.
IFT
மேலும், அல்லாஹ் ஒவ்வோர் உயிர்பிராணியையும் ஒரேவிதமான நீரிலிருந்து படைத்தான். அவற்றில் சில தம் வயிற்றால் ஊர்ந்து செல்கின்றன. வேறு சில இரு கால்களால் நடந்து செல்கின்றன; இன்னும் சில நான்கு கால்களால் நடந்து திரிகின்றன. தான் நாடுகின்றவற்றை அல்லாஹ் படைக்கின்றான். திண்ணமாக, அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுள்ளவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் – (பூமியின் மீது ஊர்ந்து திரியும்) ஒவ்வொரு உயிர்ப்பிராணியையும் நீரிலிருந்து – அவன் படைத்திருக்கின்றான், அவைகளில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு, அவைகளில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு, இன்னும் அவைகளில் நான்கு(கால்)களால் நடப்பவைகளும் உண்டு, (இவ்வாறு) அல்லாஹ் தான் நாடியதை படைக்கிறான், நிச்சயமாக அல்லாஹ், ஒவ்வொரு பொருளின்மீதும் பேராற்றலுடையவன்.
46
لَقَدْ اَنْزَلْنَاۤ اٰیٰتٍ مُّبَیِّنٰتٍ ؕ وَاللّٰهُ یَهْدِیْ مَنْ یَّشَآءُ اِلٰی صِرَاطٍ مُّسْتَقِیْمٍ ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்; மேலும் தான் நாடியோரை அல்லாஹ் நேர்வழிப் படுத்துகிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே! அனைவரும் எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய) தெளிவான வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம். எனினும், அல்லாஹ் தான் விரும்பிய (நல்ல)வர்களையே (இதன் மூலம்) நேரானவழியில் செலுத்துகிறான்.
IFT
உண்மையை மிகத்தெளிவாகக் காண்பிக்கும் வசனங்களை நாம் இறக்கியருளியிருக்கின்றோம். மேலும், அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு நேர்வழியின் பக்கம் வழிகாட்டுகின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) தெளிவாக்கி வைக்கக்கூடிய வசனங்களையே நிச்சயமாக நாம் (இதில்) இறக்கியிருக்கிறோம், இன்னும், அல்லாஹ் தான் நாடிய (நல்ல)வர்களை நேரான வழியின்பால் செலுத்துகிறான்.
47
وَیَقُوْلُوْنَ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالرَّسُوْلِ وَاَطَعْنَا ثُمَّ یَتَوَلّٰی فَرِیْقٌ مِّنْهُمْ مِّنْ بَعْدِ ذٰلِكَ ؕ وَمَاۤ اُولٰٓىِٕكَ بِالْمُؤْمِنِیْنَ ۟
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வின் மீதும், (இத்)தூதர் மீதும் நாங்கள் ஈமான் கொண்டோம்; (அவர்களுக்குக்) கீழ்படிகிறோம்” என்று சொல்லுகிறார்கள். (ஆனால் அதன்) பின்னர் அவர்களிலிருந்து ஒரு பிரிவார் புறக்கணித்து விடுகின்றனர் - எனவே, இவர்கள் (உண்மையில்) முஃமின்கள் அல்லர்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நாங்கள் நம்பிக்கை கொண்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கிறோம்'' என்று கூறுபவர்களில் சிலர் பின்னர் புறக்கணித்து விடுகின்றனர். ஆகவே, இவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களே அல்ல.
IFT
“அல்லாஹ்வின் மீதும் தூதர் மீதும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம்; மேலும், கீழ்ப்படிதலை ஏற்றுக் கொண்டோம்” என்று இவர்கள் கூறுகின்றார்கள். ஆயினும் இதன்பின்னர், இவர்களில் ஒரு பிரிவினர் (கீழ்ப்படியாமல்) புறக்கணித்து விடுகின்றார்கள். இத்தகையோர் எவ்வகையிலும் நம்பிக்கையாளர்கள் அல்லர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வையும், (அவனுடைய) தூதரையும் நாங்கள் விசுவாசித்திருக்கிறோம், (அவர்களின் கட்டளைகளுக்கு) நாங்கள் கீழ்ப்படிகிறோம் என்றும் (நபியே! இந்த முனாஃபிக்குகள்) கூறுகின்றனர், பின்னர், அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப்பிறகு புறக்கணித்துவிடுகின்றனர்.) ஆகவே, இவர்கள் (உண்மையான) விசுவாசிகள் அல்லர்.
48
وَاِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اِذَا فَرِیْقٌ مِّنْهُمْ مُّعْرِضُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும் தம்மிடையே (விவகாரம் ஏற்பட்டு, அதுபற்றிய) தீர்ப்புப் பெற அல்லாஹ்விடமும், அவன் தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்களில் ஒரு பிரிவார் (அவ்வழைப்பைப்) புறக்கணிக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
தவிர, தங்களுக்கிடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி நியாயத்) தீர்ப்புபெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அழைக்கப்பட்டால் அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்து விடுகின்றனர்.
IFT
அவர்களுக்கிடையிலான வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பளித்திட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அவர்கள் அழைக்கப்படும்போது அவர்களில் ஒரு சாரார் புறக்கணித்துச் செல்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தங்களுக்கிடையில் (ஏற்பட்டவற்றில் அல்லாஹ்வின் தூதராகிய) அவர் தீர்ப்பளிக்க அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வாருங்கள் என அவர்கள் அழைக்கப்பட்டால், அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணிக்கக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
49
وَاِنْ یَّكُنْ لَّهُمُ الْحَقُّ یَاْتُوْۤا اِلَیْهِ مُذْعِنِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களின் பக்கம் - உண்மை (நியாயம்) இருக்குமானால், வழி பட்டவர்களாக அவரிடம் வருகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக இருந்தால் (நம் தூதருக்கு) கீழ்ப்படிந்து (நடப்பவர்களைப் போல்) அவரிடம் வருகின்றனர்.
IFT
ஆனால் நியாயம் அவர்களுக்கு சாதகமாக அமையும்போது தாழ்மையோடு இறைத்தூதரிடம் வருகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், உண்மை அவர்கள் பக்கம் இருக்குமானால் கீழ்ப்படிந்தவர்களாக (விரைந்து) அவரிடம் வருகிறார்கள்.
50
اَفِیْ قُلُوْبِهِمْ مَّرَضٌ اَمِ ارْتَابُوْۤا اَمْ یَخَافُوْنَ اَنْ یَّحِیْفَ اللّٰهُ عَلَیْهِمْ وَرَسُوْلُهٗ ؕ بَلْ اُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
அவர்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) அவர்கள் சந்தேகப்படுகிறார்களா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநியாயம் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்களா? அல்ல! அவர்களே அநியாயக் காரர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என்னே! இவர்களுடைய உள்ளங்களில் ஏதும் நோய் இருக்கிறதா? அல்லது (அவரைப் பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இவர்களுக்கு அநியாயம் செய்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? (அவர்கள் அநீதி செய்யப்படவே மாட்டார்கள்.) மாறாக, இவர்கள்தான் வரம்பு மீறும் அநியாயக்காரர்கள் ஆவர். (ஆதலால்தான் இவ்வாறு செய்கின்றனர்.)
IFT
அவர்களின் உள்ளங்களில் (நயவஞ்சகப்) பிணி தொற்றிக் கொண்டுள்ளதா? அல்லது அவர்கள் சந்தேகத்துக்கு ஆளாகியிருக்கின்றனரா? அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தங்களுக்கு அநீதி இழைத்திடுவார்களோ என்று அஞ்சுகின்றார்களா? உண்மை என்னவெனில், இவர்களே கொடுமையாளர்கள் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுடைய இதயங்களில் நோய் இருக்கின்றதா? அல்லது (அவரைப்பற்றி) இவர்கள் சந்தேகிக்கின்றனரா, அல்லது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவர்களுக்கு அநீதியிழைத்து விடுவார்கள் என்று பயப்படுகின்றனரா? அல்ல, இவர்கள்தாம் (தமக்குத்தாமே) அநியாயக்காரர்கள்.
51
اِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِیْنَ اِذَا دُعُوْۤا اِلَی اللّٰهِ وَرَسُوْلِهٖ لِیَحْكُمَ بَیْنَهُمْ اَنْ یَّقُوْلُوْا سَمِعْنَا وَاَطَعْنَا ؕ وَاُولٰٓىِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ ۟
முஹம்மது ஜான்
முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், மெய்யாகவே நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்கு இடையில் (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றித்) தீர்ப்பு பெற அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் வரும்படி அழைக்கப்பட்டால், அதற்கவர்கள் ‘‘நாங்கள் செவி சாய்த்தோம்; நாங்கள் கீழ்ப்படிந்தோம்'' என்று கூறுவதைத் தவிர, வேறு ஒன்றும் கூறுவதில்லை. இவர்கள்தான் முற்றிலும் வெற்றி அடைந்தவர்கள் ஆவர்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களுக்கிடையிலுள்ள வழக்குகளில் இறைத்தூதர் தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் வருமாறு அழைக்கப்படும்போது, “நாங்கள் செவியேற்றோம்; கீழ்ப்படிந்தோம்!” என்று கூறுவதே அவர்களின் தன்மையாகும். இத்தகையோர்தாம் வெற்றி பெறக்கூடியவர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசிகளின் கூற்றாக இருப்பதெல்லாம்-அவர்களுக்கிடையே (அல்லாஹ்வுடைய தூதராகிய) அவர் தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் (வருமாறு) அவர்கள் அழைக்கப்பட்டால் - “நாங்கள் செவியுற்றோம், இன்னும், கீழ்ப்படிந்தோம்” என்று அவர்கள் கூறுவதுதான், இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
52
وَمَنْ یُّطِعِ اللّٰهَ وَرَسُوْلَهٗ وَیَخْشَ اللّٰهَ وَیَتَّقْهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفَآىِٕزُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும் எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகி அவனை அஞ்சிக் கொண்டார்களோ அவர்கள்தான் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்.
IFT
எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வுக்கு அஞ்சி அவனுக்கு மாறு செய்வதைத் தவிர்த்துக் கொள்கின்றார்களோ, அவர்கள்தாம் வெற்றியாளர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து இன்னும், அல்லாஹ்வை அஞ்சி அவனைப்பயந்தும் கொள்கிறாரோ அத்தகையோர்-அவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள்.
53
وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ اَمَرْتَهُمْ لَیَخْرُجُنَّ ؕ قُلْ لَّا تُقْسِمُوْا ۚ طَاعَةٌ مَّعْرُوْفَةٌ ؕ اِنَّ اللّٰهَ خَبِیْرٌ بِمَا تَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும் (நபியே! நயவஞ்சகர்களுக்கு) நீர் கட்டளையிட்டால், நிச்சயமாகப் (போருக்குப்) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து கூறுகிறார்கள்; (அவர்களை நோக்கி:) “நீங்கள் சத்தியம் செய்யாதீர்கள். (உங்கள்) கீழ்படிதல் தெரிந்தது தான்- நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன்” என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நயவஞ்சகர்களாகிய) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால், அவர்களும் நிச்சயமாக (போருக்குப்) புறப்பட்டு விடுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியான சத்தியம் செய்து கூறுகிறார்கள். நீர் (அவர்களை நோக்கிக்) கூறுவீராக: ''(இவ்வாறு) சத்தியம் செய்யாதீர்கள்! நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதாகக் கூறுவதன் உண்மை தெரிந்த விஷயம்தான். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.''
IFT
(நயவஞ்சகர்களாகிய) இவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாகச் சத்தியம் செய்து, “தாங்கள் எங்களுக்கு ஆணையிட்டால் வீடுகளை விட்டு வெளியேறிவிடுகின்றோம்” என்று கூறுகின்றார்கள். அவர்களிடம் நீர் கூறும்: “சத்தியம் செய்யாதீர்கள். உங்களுடைய கீழ்ப்படிதல் எத்தகையது என்பது தெரிந்த விஷயம்தான்! திண்ணமாக நீங்கள் செய்யும் செயல்களை அல்லாஹ் அறியாதவன் அல்லன்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் அவர்களுக்குக் கட்டளையிட்டால், நிச்சயமாக அவர்கள் (போர் செய்ய) புறப்பட்டுவிடுவதாக அல்லாஹ்வின் மீது அவர்கள் உறுதியான சத்தியம் செய்(து கூறு)கின்றார்கள், “சத்தியம் செய்யாதீர்கள் என்று நீர் கூறுவீராக! (உங்களுடைய) கீழ்படிதல் (நயவஞ்சகமானதென) அறியப்பட்டதுதான், நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கு உணர்பவன்.
54
قُلْ اَطِیْعُوا اللّٰهَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ ۚ فَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا عَلَیْهِ مَا حُمِّلَ وَعَلَیْكُمْ مَّا حُمِّلْتُمْ ؕ وَاِنْ تُطِیْعُوْهُ تَهْتَدُوْا ؕ وَمَا عَلَی الرَّسُوْلِ اِلَّا الْبَلٰغُ الْمُبِیْنُ ۟
முஹம்மது ஜான்
“அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக; ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுச் செய்தியை உங்களிடம் அறிவிப்ப)துதான்; இன்னும் உங்கள் மீதுள்ள கடமையானது, உங்கள் மீது சுமத்தப்பட்ட (படி வழிபடுவ)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்; இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்) தூதர்மீது கடமையில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் (உண்மையாக) கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் புறக்கணித்தாலோ (நமக்கொன்றும் நஷ்டமில்லை. ஏனென்றால்) அவர் மீதுள்ள கடமை எல்லாம், அவர் (தன்) மீது சுமத்தப்பட்ட (தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான். உங்கள் மீதுள்ள கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்ட (அவருக்கு கட்டுப்பட்டு நடப்ப)து தான். நீங்கள் அவருக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள்தான் நேரான வழியில் சென்று விடுவீர்கள். (நம் தூதைப்) பகிரங்கமாக (தெளிவாக) அறிவிப்பதைத் தவிர, வேறொன்றும் நம் தூதர் மீது கடமையில்லை.
IFT
நீர் கூறும்: “அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படியுங்கள். மேலும், தூதரைப் பின்பற்றுபவராய்த் திகழுங்கள்; ஆயினும், நீங்கள் புறக்கணித்தால் (நன்கு புரிந்து கொள்ளுங்கள்!) தூதரின் மீது எந்தக் கடமை சுமத்தப்பட்டுள்ளதோ, அந்தக் கடமைக்கு அவரே பொறுப்பு; உங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடமைக்கு பொறுப்பு நீங்களே! நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிவீர்களாயின், நீங்கள்தாம் நேர்வழியடைவீர்கள். (இல்லையெனில் கட்டளைகளைத்) தெள்ளத் தெளிவாக அறிவித்துவிடுவதைத் தவிர தூதர் மீது வேறெந்தப் பொறுப்புமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக! அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்ப்படியுங்கள், அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படியுங்கள், நீங்கள் புறக்கணித்தாலோ, அவர் மீதுள்ளதெல்லாம் அவர்மீது சுமத்தப்பட்ட தூதை உங்களுக்கு எடுத்துரைப்ப)துதான், உங்கள் மீதுள்ளதெல்லாம் நீங்கள் சுமத்தப்பட்ட(வாறு கீழ்ப்படிவ)துதான், மேலும், நீங்கள் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழியை அடைந்து விடுவீர்கள், (நம் தூதைத்) தெளிவாக எத்திவைப்பதைத் தவிர, (வேறொன்றும் நம்) தூதர் மீது(கடமை) இல்லை.
55
وَعَدَ اللّٰهُ الَّذِیْنَ اٰمَنُوْا مِنْكُمْ وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَیَسْتَخْلِفَنَّهُمْ فِی الْاَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ۪ وَلَیُمَكِّنَنَّ لَهُمْ دِیْنَهُمُ الَّذِی ارْتَضٰی لَهُمْ وَلَیُبَدِّلَنَّهُمْ مِّنْ بَعْدِ خَوْفِهِمْ اَمْنًا ؕ یَعْبُدُوْنَنِیْ لَا یُشْرِكُوْنَ بِیْ شَیْـًٔا ؕ وَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ فَاُولٰٓىِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۟
முஹம்மது ஜான்
உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்; “அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;” இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான்.
IFT
உங்களில் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களிடம் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான். என்னவெனில், அவர்களைப் பூமியில் பிரதிநிதிகளாக்குவான்; அவர்களுக்கு முன் சென்று போன மக்களைப் பிரதிநிதிகளாக்கியது போன்று! மேலும், அவர்களுக்காக அல்லாஹ் எந்த மார்க்கத்தை விரும்பினானோ அந்த மார்க்கத்தை வலுவான அடிப்படைகள் மீது நிலைநாட்டுவான். மேலும், அவர்களின் (இன்று நிலவுகின்ற) அச்சநிலையை அமைதி நிலையாய் மாற்றித் தருவான். எனவே, அவர்கள் எனக்கே அடிபணியட்டும்; மேலும், என்னுடன் எதனையும் இணை வைக்காதிருக்கட்டும். மேலும், இதன் பின்னர் எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களே பாவிகள் ஆவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) உங்களில் விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையவர்களுக்கு – அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை அதிபதிகளாக்கிய பிரகாரமே, இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் அவர்களுக்குப் பொருந்திக்கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக உறுதிப்படுத்தி வைப்பதாகவும், அவர்களுடைய பயத்திற்குப் பிறகு அமைதியைக் கொண்டு நிச்சயமாக மாற்றிவிடுவதாகவும் - அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான், அவர்கள் எனக்கு யாதொன்றையும் இணையாக்காது, என்னையே வணங்குவார்கள், இதன் பின்னர் (உங்களில்) எவர் நிராகரிப்பவராகிவிட்டாரோ நிச்சயமாக அவர்கள்தாம் (அல்லாஹ்வின் கட்டளையை ஏற்காத) பாவிகள்.
56
وَاَقِیْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّكٰوةَ وَاَطِیْعُوا الرَّسُوْلَ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து தொழுது, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்.
IFT
மேலும், தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத்தையும் வழங்குங்கள். மேலும், தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்; உங்கள் மீது கருணை புரியப்படக் கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், (விசுவாசிகளே!) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுங்கள், ஜகாத்தையும் கொடுங்கள், மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள், (அவற்றின் மூலம்) நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்.
57
لَا تَحْسَبَنَّ الَّذِیْنَ كَفَرُوْا مُعْجِزِیْنَ فِی الْاَرْضِ ۚ وَمَاْوٰىهُمُ النَّارُ ؕ وَلَبِئْسَ الْمَصِیْرُ ۟۠
முஹம்மது ஜான்
நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிராகரிப்பவர்கள் பூமியில் (ஓடி ஒளிந்து தப்பித்துக்கொண்டு) நம்மைத் தோற்கடித்து விடுவர் என நீர் எண்ண வேண்டாம். (அவர்களைத் தண்டனைக் குள்ளாக்கியே தீருவோம். மறுமையில்) அவர்கள் செல்லுமிடம் நரகம்தான். அது தங்குமிடங்களில் மிகக் கெட்டது.
IFT
நிராகரித்துக் கொண்டிருப்பவர்களைக் குறித்து, அவர்கள் பூமியில் அல்லாஹ்வை தோல்வியுறச் செய்துவிடுவார்கள் என்று தப்பெண்ணம் கொள்ளாதீர்கள். அவர்களுடைய இருப்பிடம் நரகம்தான்; அது மிகவும் கெட்ட இருப்பிடமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிராகரிப்போர் பூமியில் தப்பித்துக் கொண்டுவிடுவார்கள் என நிச்சயமாக நீர் எண்ண வேண்டாம், (மறுமையில்) அவர்கள் ஒதுங்குமிடம் நரகம்தான், திட்டமாக திரும்பிச் செல்லும் இடத்தில் அது மிகவும் கெட்டது.
58
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْا لِیَسْتَاْذِنْكُمُ الَّذِیْنَ مَلَكَتْ اَیْمَانُكُمْ وَالَّذِیْنَ لَمْ یَبْلُغُوا الْحُلُمَ مِنْكُمْ ثَلٰثَ مَرّٰتٍ ؕ مِنْ قَبْلِ صَلٰوةِ الْفَجْرِ وَحِیْنَ تَضَعُوْنَ ثِیَابَكُمْ مِّنَ الظَّهِیْرَةِ وَمِنْ بَعْدِ صَلٰوةِ الْعِشَآءِ ؕ۫ ثَلٰثُ عَوْرٰتٍ لَّكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ وَلَا عَلَیْهِمْ جُنَاحٌ بَعْدَهُنَّ ؕ طَوّٰفُوْنَ عَلَیْكُمْ بَعْضُكُمْ عَلٰی بَعْضٍ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் “லுஹர்” நேரத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவமடையாத (சிறிய) பிள்ளைகளும் (நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்களில்) உங்களிடம் (வருவார்களாயின் உங்கள்) அனுமதியை மூன்று தடவைகள் அவர்கள் கோர வேண்டும். (அந்த நேரங்களாவன:) ‘ஃபஜ்ரு' (அதிகாலை) தொழுகைக்கு முன்னரும் (படுக்கைக்காக உங்கள் மேல் மிச்சமான) ஆடைகளைக் களைந்திருக்கக் கூடிய ‘ளுஹர்' (மதிய) வேளையிலும், ‘இஷா' (இரவு) நேரத்தில் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய (இம்) மூன்று நேரங்களும் நீங்கள் திரைக்குள் அந்தரங்கமாக இருக்கக்கூடிய நேரங்கள். (இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் உங்கள் அனுமதியின்றியே உங்களிடம் வருவது) அவர்கள் மீது குற்றமல்ல. (ஏனென்றால்,) இவர்கள் அடிக்கடி உங்களிடம் வரக்கூடியவர்களாகவும், உங்களில் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி செல்ல வேண்டியவர்களாகவும் இருப்பதனாலும் (அடிக்கடி அனுமதி கோரவேண்டிய அவசியமில்லை). இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன், ஞானமுடையவன் ஆவான்.
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுடைய அடிமைகளான ஆண்களும் பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும் மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதற்கு அனுமதி பெற்றுக் கொள்ளட்டும். வைகறை தொழுகைக்கு முன்னர்; மதியவேளையில் நீங்கள் உங்கள் ஆடைகளைக் களைந்திருக்கும்போது; இஷா தொழுகைக்குப் பின்னர். இம்மூன்று நேரங்களும் நீங்கள் மறைவாக இருக்கக்கூடிய நேரங்களாகும். இவற்றைத் தவிர மற்ற நேரங்களில் அவர்கள் அனுமதியின்றி வருவார்களாயின் உங்கள்மீதும், அவர்கள் மீதும் எவ்விதக் குற்றமுமில்லை. நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அடிக்கடி வரவேண்டியுள்ளது. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய அறிவுரைகளைத் தெளிவுபடுத்துகின்றான். மேலும், அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! உங்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களும் (-அடிமைகளும்), உங்களில் பிராயமடையாத சிறுவர்களும், (நீங்கள் வீட்டினுள் இருக்கக்கூடிய நேரங்களில் உங்களிடம் வருவதாயின்,) மூன்று நேரங்களில் அவர்கள் அனுமதி கோரவேண்டும், (அந்நேரங்களாவன;) ஃப்ஜ்ரு தொழுகைக்கு முன்னரும், உச்சிப்பொழுதில் உங்களுடைய (மிச்சமான) ஆடைகளைக் களைந்து வைத்திருக்கும் நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பின்னரும் (இவை) உங்களுக்கு மறைவுடைய மூன்று (நேரங்கள்)ஆகும்; இவற்றுக்குப்பின் (வருவது) உங்கள் மீதோ, அவர்கள் மீதோ குற்றமில்லை, (காரணம்,) இவர்கள் (அடிக்கடி) உங்களிடம் சுற்றி வருபவர்கள், உங்களில் சிலர் சிலரிடம் (திரும்பத் திரும்ப வருபவர்களாகவும் இருக்கிறீர்கள்) இவ்வாறு அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு விளக்குகிறான்; இன்னும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிகிறவன், தீர்க்கமான அறிவுடையவன்.
59
وَاِذَا بَلَغَ الْاَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْیَسْتَاْذِنُوْا كَمَا اسْتَاْذَنَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمْ اٰیٰتِهٖ ؕ وَاللّٰهُ عَلِیْمٌ حَكِیْمٌ ۟
முஹம்மது ஜான்
இன்னும் உங்களிலுள்ள குழந்தைகள் பிராயம் அடைந்துவிட்டால் அவர்களும், தங்களுக்கு (வயதில்) மூத்தவர்கள் அனுமதி கேட்பது போல் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்கள் குழந்தைகள் பருவமடைந்துவிட்டால், அவர்களும் தங்களுக்கு மூத்தவர்கள் அனுமதி கோரவேண்டிய பிரகாரம் அனுமதி கோர வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரித்துக் கூறுகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஞானமுடையவன் ஆவான்.
IFT
மேலும், உங்கள் சிறுவர்கள் விவரம் தெரியும் பருவத்தை அடைந்து விட்டால், அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். இவ்வாறு அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களிடம் விவரிக்கின்றான். மேலும், அவன் மிக அறிந்தவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், உங்களிலுள்ள சிறுவர்கள் பிராயமடைந்துவிட்டால், அவர்களுக்கு முன்னுள்ள (மூத்த)வர்கள் அனுமதி கேட்டது போன்று அவர்களும் அனுமதி கேட்க வேண்டும்; இவ்வாறே அல்லாஹ் தன்னுடைய வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிகிறவன்; தீர்க்கமான அறிவுடையவன்.
60
وَالْقَوَاعِدُ مِنَ النِّسَآءِ الّٰتِیْ لَا یَرْجُوْنَ نِكَاحًا فَلَیْسَ عَلَیْهِنَّ جُنَاحٌ اَنْ یَّضَعْنَ ثِیَابَهُنَّ غَیْرَ مُتَبَرِّجٰتٍ بِزِیْنَةٍ ؕ وَاَنْ یَّسْتَعْفِفْنَ خَیْرٌ لَّهُنَّ ؕ وَاللّٰهُ سَمِیْعٌ عَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
மேலும், பெண்களில் விவாகத்தை நாட முடியாத (முதிர்ந்து) வயதை அடைந்து விட்ட பெண்கள், தங்கள் அழகலங்காரத்தை(ப் பிறருக்கு) வெளியாக்காதவர்களான நிலையில், தங்கள் மேலாடைகளைக் கழற்றியிருப்பது, அவர்கள் மீது குற்றமில்லை; ஆனால் (இதனையும் அவர்கள் தவிர்த்து) ஒழுங்கைப் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிகவும் நலமாக இருக்கும். அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன்; நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
திருமண விருப்பமற்ற முதிர்ந்த வயதுடைய (நடமாட முடியாது) உட்கார்ந்தே இருக்கக்கூடிய கிழவிகள், தங்கள் அழகைக் காண்பிக்க வேண்டுமென்ற நோக்கமின்றித் தங்கள் மேல் ஆடைகளைக் களைந்து விட்டிருப்பதில் அவர்கள் மீது குற்றமில்லை. இதையும் அவர்கள் தவிர்த்துக் கொள்வதே அவர்களுக்கு மிக்க நன்று. அல்லாஹ் (அனைத்தையும்) நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்.
IFT
எந்தப் பெண்கள் இளமைப் பருவத்தைக் கடந்து திருமணத்தில் விருப்பம் இல்லாதவர்களாய் இருந்துவிடுகின்றார்களோ அந்தப் பெண்கள் தங்கள் அழகை வெளிக்காட்டாதவர்களாய், தங்கள் மேலாடைகளைக் கழற்றி வைப்பதில் அவர்கள் மீது யாதொரு குற்றமுமில்லை; ஆயினும், அவர்களும் நாணமுள்ள பெண்களாய் நடந்து கொள்வதே அவர்களுக்கு மிக ஏற்றதாகும். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பெண்களில் திருமண விருப்பமற்ற (மாதவிலக்கு நின்று குழந்தைகள் பெறும் நிலையைத் தாண்டிவிட்ட,) முதியவர்கள் தங்கள் அழகை வெளிப்படுத்தாதவர்களாக தங்கள் மேல் ஆடைகளை களைந்து விட்டிருப்பதில் அவர்கள்மீது குற்றமில்லை, (இதனையும் தவிர்த்து) அவர்கள் பேணிக்கொள்வது அவர்களுக்கு மிக்க நன்று, அல்லாஹ்வோ (யாவற்றையும்) கேட்கிறவன், நன்கறிகிறவன்.
61
لَیْسَ عَلَی الْاَعْمٰی حَرَجٌ وَّلَا عَلَی الْاَعْرَجِ حَرَجٌ وَّلَا عَلَی الْمَرِیْضِ حَرَجٌ وَّلَا عَلٰۤی اَنْفُسِكُمْ اَنْ تَاْكُلُوْا مِنْ بُیُوْتِكُمْ اَوْ بُیُوْتِ اٰبَآىِٕكُمْ اَوْ بُیُوْتِ اُمَّهٰتِكُمْ اَوْ بُیُوْتِ اِخْوَانِكُمْ اَوْ بُیُوْتِ اَخَوٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَعْمَامِكُمْ اَوْ بُیُوْتِ عَمّٰتِكُمْ اَوْ بُیُوْتِ اَخْوَالِكُمْ اَوْ بُیُوْتِ خٰلٰتِكُمْ اَوْ مَا مَلَكْتُمْ مَّفَاتِحَهٗۤ اَوْ صَدِیْقِكُمْ ؕ لَیْسَ عَلَیْكُمْ جُنَاحٌ اَنْ تَاْكُلُوْا جَمِیْعًا اَوْ اَشْتَاتًا ؕ فَاِذَا دَخَلْتُمْ بُیُوْتًا فَسَلِّمُوْا عَلٰۤی اَنْفُسِكُمْ تَحِیَّةً مِّنْ عِنْدِ اللّٰهِ مُبٰرَكَةً طَیِّبَةً ؕ كَذٰلِكَ یُبَیِّنُ اللّٰهُ لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
(முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது; ஆனால் நீங்கள் எந்த வீட்டில் பிரவேசித்தாலும் அல்லாஹ்விடமிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் முபாரக்கான - பாக்கியம் மிக்க - பரிசுத்தமான (“அஸ்ஸலாமு அலைக்கும்” என்னும்) நல்வாக்கியத்தை நீங்கள் உங்களுக்குள் கூறிக்கொள்ளுங்கள் - நீங்கள் அறிந்து கொள்வதற்காக, இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு(த் தன்) வசனங்களை விவரிக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே! உங்களுடன் சேர்ந்து உணவு உண்பதில்) குருடன் மீதும் குற்றமாகாது; நொண்டி மீதும் குற்றமாகாது; நோயாளி மீதும் குற்றமாகாது; உங்கள் மீதும் குற்றமாகாது. நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தைகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாய்மார்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயினுடைய சகோதரர்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகள் வீட்டிலோ அல்லது சாவி உங்கள் வசமிருக்கும் வீட்டிலோ அல்லது உங்கள் தோழர்கள் வீட்டிலோ நீங்கள் (உணவு) புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. இதில் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து புசித்தாலும் சரி, தனித்தனியாகப் புசித்தாலும் சரியே (உங்கள் மீது குற்றமில்லை). ஆனால், நீங்கள் எந்த வீட்டில் நுழைந்தபோதிலும் அல்லாஹ்வினால் உங்களுக்குக் கற்பிக்கப்பட்ட மிக்க பாக்கியமுள்ள பரிசுத்தமான (‘ஸலாம்' என்னும்) முகமனை நீங்கள் உங்களுக்குள் (ஒருவருக்கு மற்றொருவர்) கூறிக் கொள்ளவும். இவ்வாறே அல்லாஹ் உங்களுக்குத் தன் வசனங்களை விவரித்துக் கூறுகிறான்! (என்பதை) நீங்கள் அறிந்துகொள்வீர்களாக!
IFT
குருடர், நொண்டி, நோயாளி போன்றவர்கள் (யாருடைய வீட்டில் சாப்பிடுவதிலும் அவர்கள்) மீது எவ்விதக் குற்றமும் இல்லை. ஆனால், நீங்கள் உங்களின் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையரின் வீடுகளிலோ, உங்கள் அன்னையரின் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது உங்கள் சிறிய தந்தை பெரிய தந்தையரின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகளின் வீடுகளிலோ, உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் சிற்றன்னை, பெரியன்னையரின் வீடுகளிலோ அல்லது எந்த வீடுகளின் திறவுகோல்கள் உங்கள் பொறுப்பில் உள்ளனவோ அந்த வீடுகளிலோ அல்லது உங்கள் நண்பர்களின் வீடுகளிலோ சாப்பிடுவதில் உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் அனைவரும் சேர்ந்தோ தனித்தனியாகவோ சாப்பிடுவதிலும் உங்கள் மீது குற்றமில்லை. எவ்வாறாயினும் வீடுகளில் நீங்கள் நுழையும்போது நீங்கள் உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள். இது நல்லாசி எனும் முறையில் இறைவனிடமிருந்து நிர்ணயிக்கப்பட்டதும், பாக்கியங்கள் கொண்டதும், தூய்மையானதுமாகும். இவ்வாறு அல்லாஹ் அறிவுரைகளை உங்களுக்கு விவரிக்கின்றான்; இதனால் நீங்கள் சிந்தித்துணர்ந்து செயல்படக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளே! உங்களுடன் சேர்ந்து உண்ணுவதில்) குருடர் மீதும் குற்றமில்லை, முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை, நீங்கள் உங்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தைகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையுடைய சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையுடைய சகோதரிகளின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயுடைய சகோதரர்களின் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயுடைய சகோதரிகளின் வீடுகளிலோ அல்லது எ(ந்)த (வீட்டி)ன் சாவிகளை நீங்கள் உடமையாக்கிக் கொண்டீர்களோ, அவற்றிலோ, அல்லது உங்கள் தோழர்களிடத்திலோ நீங்கள் உண்பது உங்கள் மீது குற்றமில்லை, நீங்கள் (பலர்) ஒன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ உண்பது உங்கள் மீது குறறமில்லை, ஆகவே, நீங்கள் வீடுகளில் நுழைந்தால், அல்லாஹ்விடமிருந்துள்ள பரிசுத்தமான பாக்கியமுள்ள காணிக்கையாக உங்களின் மீது நீங்கள் ஸலாம் சொல்லிக் கொள்ளுங்கள், நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக இவ்வாறு அல்லாஹ் (தன்) வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்.
62
اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ وَاِذَا كَانُوْا مَعَهٗ عَلٰۤی اَمْرٍ جَامِعٍ لَّمْ یَذْهَبُوْا حَتّٰی یَسْتَاْذِنُوْهُ ؕ اِنَّ الَّذِیْنَ یَسْتَاْذِنُوْنَكَ اُولٰٓىِٕكَ الَّذِیْنَ یُؤْمِنُوْنَ بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ۚ فَاِذَا اسْتَاْذَنُوْكَ لِبَعْضِ شَاْنِهِمْ فَاْذَنْ لِّمَنْ شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும் ஈமான் கொண்டவர்களே! (உண்மை) முஃமின்களாவார்கள், மேலும், அவர்கள் ஒரு பொதுவான காரியம் பற்றி அவருடன் (ஆலோசிக்கக் கூடி) இருக்கும் போது அவருடைய அனுமதியின்றி (அங்கிருந்து) செல்லமாட்டார்கள்; (நபியே!) உம்மிடத்தில் (அவ்வாறு) அனுமதி பெற்றுச் செல்பவர்களே நிச்சயமாக அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் மெய்யாகவே ஈமான் கொண்டவர்கள், ஆகவே தங்கள் காரியங்கள் சிலவற்றுக்காக அவர்கள் உம்மிடம் அனுமதி கேட்டால், அவர்களில் நீர் விரும்பியவருக்கு அனுமதி கொடுப்பீராக; இன்னும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் நீர் மன்னிப்புக் கோருவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக உண்மையான நம்பிக்கையாளர்கள் மெய்யாகவே யாரென்றால், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். அவர்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆலோசனை செய்ய அவ(னுடைய தூத)ரிடம் கூடியிருந்தால், அவருடைய அனுமதியின்றி (கூட்டத்திலிருந்து) அவர்கள் விலகிப் போகவே மாட்டார்கள். (அவ்வாறு போகவேண்டிய அவசியம் ஏற்பட்டால், நபியே!) நிச்சயமாக எவர்கள் உம்மிடம் அனுமதியைக்கோரி செல்கிறார்களோ அவர்கள்தான் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் மெய்யாக நம்பிக்கை கொண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்கள் அவசர வேலை ஒன்றுக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி அளிப்பீராக. அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் உளப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவர்களும், மேலும், ஏதேனுமொரு பொதுப் பணிக்காக அவர்கள் இறைத்தூதருடன் இருக்கும்போது அவரிடம் அனுமதி பெறாமல் அவரை விட்டுப் பிரிந்து போகாத வர்களுமே உண்மையான இறைநம்பிக்கையாளர்களாவர். (நபியே!) உம்மிடம் அனுமதி கோருபவர்கள்தாம் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் ஏற்றுக் கொண்டவர்கள். எனவே, அவர்கள் தங்களுடைய ஏதேனும் தேவைக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் விரும்பியவர்களுக்கு அனுமதி வழங்குவீராக! மேலும், இத்தகையோருக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் கோருவீராக! திண்ணமாக, அல்லாஹ் பெரிதும் மன்னித்தருள்பவனாகவும் பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உண்மையான விசுவாசிகளெல்லாம், “அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங்கொண்டார்களே அத்தகையோர்தாம், மேலும், அவர்கள் யாதொரு பொது விஷயத்தைப் பற்றி (ஆலோசனை செய்ய) அவ(னுடைய தூத)ருடன் இருந்தால், அவரிடம் அனுமதி பெறும் வரை (கூட்டத்திலிருந்து) அவர்கள் போக மாட்டார்கள், நிச்சயமாக உம்மிடம் அனுமதி கோருகின்றனரே அத்தகையோர் - அவர்கள்தாம் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசங் கொண்டவர்கள், ஆகவே, அவர்கள் தங்களுடைய காரியத்தின் சிலவற்றுக்காக உம்மிடம் அனுமதி கோரினால், அவர்களில் நீர் நாடுபவர்களுக்கு அனுமதி கொடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பும் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிக்க கிருபையுடையவன்.
63
لَا تَجْعَلُوْا دُعَآءَ الرَّسُوْلِ بَیْنَكُمْ كَدُعَآءِ بَعْضِكُمْ بَعْضًا ؕ قَدْ یَعْلَمُ اللّٰهُ الَّذِیْنَ یَتَسَلَّلُوْنَ مِنْكُمْ لِوَاذًا ۚ فَلْیَحْذَرِ الَّذِیْنَ یُخَالِفُوْنَ عَنْ اَمْرِهٖۤ اَنْ تُصِیْبَهُمْ فِتْنَةٌ اَوْ یُصِیْبَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟
முஹம்மது ஜான்
(முஃமின்களே!) உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பதுபோல் உங்களுக்கிடையில் (அல்லாஹ்வுடைய) தூதரின் அழைப்பை ஆக்காதீர்கள். உங்களிலிருந்து (அவருடைய சபையிலிருந்து) எவர் மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை திடமாக அல்லாஹ் (நன்கு) அறிவான் - ஆகவே எவர் அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களோ அவர்கள் தங்களை சோதனை பிடித்துக் கொள்வதையோ, அல்லது தங்களை நோவினை தரும் வேதனை பிடித்துக் கொள்வதையோ அஞ்சிக் கொள்ளட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய தூதரை நீங்கள் அழைத்தால் அதை நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றொருவரை அழைப்பதைப்போல் கருத வேண்டாம். (யா முஹம்மது என பெயர் கூறி அழைக்க வேண்டாம்.) உங்களில் எவர்கள் (நம் தூதர் கூட்டிய சபையிலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களோ அவர்களை அல்லாஹ் நிச்சயமாக நன்கறிவான். ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும்.
IFT
(முஸ்லிம்களே!) உங்களுக்கிடையே விடுக்கப்படும் தூதரின் அழைப்பை உங்களில் ஒருவர் மற்றொருவரை அழைப்பது போன்று கருதிவிட வேண்டாம்! உங்களில் எவர்கள் ஒருவரையொருவர் திரையாக்கிக் கொண்டு மறைவாக நழுவிச் செல்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் நன்கறிகின்றான். இறைத்தூதரின் கட்டளைக்கு மாறு செய்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் கடும் சோதனை நேர்ந்துவிடுமோ, தம்மீது துன்புறுத்தும் வேதனை வந்துவிடுமோ என்று அஞ்சட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு மத்தியில் சிலர் சிலரை (ப்பெயர்கூறி) அழைப்பது போன்று அல்லாஹ்வின் தூதரின் அழைப்பை (முஹம்மதே என்று கூறி) ஆக்கிக் கொள்ளாதீர்கள், நிச்சயமாக உங்களில் (கூட்டத்திலிருந்து) மறைவாக நழுவி விடுகிறார்களே அத்தகையவர்களை, அல்லாஹ் அறிவான், ஆகவே, (நம் தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறு செய்கிறார்களே, அத்தகையவர்கள், (உலகில்) தங்களுக்கு யாதொரு துன்பம் பிடித்துவிடுவதையோ, அல்லது துன்புறுத்தும் வேதனை பிடித்து விடுவதையோ பயந்து கொண்டிருக்கவும்.
64
اَلَاۤ اِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ قَدْ یَعْلَمُ مَاۤ اَنْتُمْ عَلَیْهِ ؕ وَیَوْمَ یُرْجَعُوْنَ اِلَیْهِ فَیُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوْا ؕ وَاللّٰهُ بِكُلِّ شَیْءٍ عَلِیْمٌ ۟۠
முஹம்மது ஜான்
வானங்களிலும், பூமியிலும் உள்ள யாவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதை அறிந்து கொள்வீர்களாக! நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதை அவன் (நன்கு) அறிவான்; மேலும் அவனிடத்தில் அவர்கள் மீட்டப்படும் அந் நாளில் அவன், அவர்கள் (இம்மையில்) என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவர்களுக்கு அறிவிப்பான் - மேலும், அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே என்பதை நிச்சயமாக அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் (இன்றைய தினம்) இருக்கும் நிலைமையையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான். அவனிடம் கொண்டு போகப்படும் நாளில் (இருக்கும் நிலைமையையும் அவன் நன்கறிவான். ஆகவே,) அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அந்த நாளில்) அவன் அவர்களுக்கு அறிவித்து விடுவான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்.
IFT
அறிந்து கொள்ளுங்கள்! வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். நீங்கள் எந்த நிலையில் இருக்கின்றீர்களோ அதனையும் அல்லாஹ் அறிகின்றான். மக்கள் அவனிடம் திரும்பக் கொண்டு வரப்படும் நாளில், அவர்கள் என்னவெல்லாம் செய்(துவிட்டு வந்)திருக்கின்றார்கள் என்பதை அவன் அவர்களுக்கு அறிவித்துவிடுவான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக வானங்களிலும், பூமியிலும் இருப்பவை அல்லாஹ்வுக்கே உரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் எந்நிலையில் இருக்கிறீர்களோ அதை அவன் திட்டமாக அறிவான், இன்னும், அவன் பக்கமே அவர்கள் மீட்டப்படும், (அந்)நாளில் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அவன் அறிவிப்பான், மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் பற்றியும் நன்கறிந்தவன்.