المطففين
ஸூரா 83 — அல்முதஃப்ஃபிஃபீன் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
36 வசனங்கள் · ஜுஸ் 30
1
وَیْلٌ لِّلْمُطَفِّفِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
அளவில் மோசடி செய்பவர்களுக்குக் கேடுதான்.
IFT
அளவில் மோசடி செய்பவருக்குக் கேடுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அளவையிலும், எடையிலும் மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக!
2
الَّذِیْنَ اِذَا اكْتَالُوْا عَلَی النَّاسِ یَسْتَوْفُوْنَ ۟ؗۖ
முஹம்மது ஜான்
அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால், நிறைய அளந்து கொள்கின்றனர்.
IFT
அவர்கள் எத்தகையோர் என்றால், மக்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக வாங்குகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், (தங்களுக்காக) மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கினால், நிறைவாக (அளந்து) வாங்கிக் கொள்கின்றனர்.
3
وَاِذَا كَالُوْهُمْ اَوْ وَّزَنُوْهُمْ یُخْسِرُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்டமுண்டா)க்குகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து (அவர்களை நஷ்டப்படுத்தி) விடுகின்றனர்.
IFT
அவர்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறைத்துக் கொடுக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆனால்) தாங்கள் அவர்களுக்கு (-மற்ற மனிதர்களுக்கு) அளந்து கொடுத்தாலும், அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் (குறைத்து மோசடி செய்து அவர்களை) நஷ்டப்படுத்தி விடுகின்றனர்.
4
اَلَا یَظُنُّ اُولٰٓىِٕكَ اَنَّهُمْ مَّبْعُوْثُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
IFT
திண்ணமாக, அவர்கள் ஒரு மாபெரும் நாளில் எழுப்பிக் கொண்டுவரப்படவிருக்கின்றார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அத்தகையோர் - நிச்சயமாக, தாம் (மறுமையில் உயிர் கொடுத்து எழுப்பப்படுபவர்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா?
5
لِیَوْمٍ عَظِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
மகத்தான ஒரு நாளுக்காக,
அப்துல் ஹமீது பாகவி
மகத்தான ஒரு நாளில், நிச்சயமாக அவர்கள் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள் நம்பவில்லையா?
IFT
ஒரு மாபெரும் நாளில்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மகத்தான ஒரு நாளைக்காக-
6
یَّوْمَ یَقُوْمُ النَّاسُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்-
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.
IFT
அந்நாளில், அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்றுகொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அந்நாளோ) அகிலத்தாரின் இரட்சகன் முன்னிலையில் மனிதர்கள் நிற்கும் நாள்.
7
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْفُجَّارِ لَفِیْ سِجِّیْنٍ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக பாவிகளின் பதிவேடு (நரகத்தின்) சிறைக்கூடத்தில் இருக்கும்.
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, தீயவர்களின் வினைப்பட்டியல் சிறைப்பதிவேட்டில் உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தீயோர்கள் எண்ணுவது போல்) அல்ல! நிச்சயமாக (தீயோர்களான) பாவிகளின் (பதிவுப்) புத்தகம் ஸிஜ்ஜீனில் இருக்கிறது.
8
وَمَاۤ اَدْرٰىكَ مَا سِجِّیْنٌ ۟ؕ
முஹம்மது ஜான்
“ஸிஜ்ஜீன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) அச்சிறைக்கூடத்தின் பதிவேட்டை நீர் அறிவீரா?
IFT
சிறைப்பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ஸிஜ்ஜீன் என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?
9
كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ؕ
முஹம்மது ஜான்
அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அது ஒரு பதிவுப்புத்தகம் (தண்டிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்கள் எல்லாம்) அதில் பதியப்பட்டிருக்கும்.
IFT
அது எழுதப்பட்ட ஒரு புத்தகமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(பாவிகளின் செயல்கள்) எழுதப்பட்ட புத்தகமாகும்.
10
وَیْلٌ یَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِیْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.
அப்துல் ஹமீது பாகவி
(இதைப்) பொய்யாக்குபவர்களுக்கு அந்நாளில் கேடுதான்!
IFT
அந்நாளில், பொய்யெனத் தூற்றுபவர்களுக்குக் கேடுதான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பொய்யாக்குபவருக்கு அந்நாளில் கேடுதான்!
11
الَّذِیْنَ یُكَذِّبُوْنَ بِیَوْمِ الدِّیْنِ ۟ؕ
முஹம்மது ஜான்
அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (இதை மட்டுமா பொய்யாக்குகின்றனர்?) கூலி கொடுக்கும் நாளையும் பொய்யாக்குகின்றனர்.
IFT
அவர்கள் எத்தகையவர்கள் எனில், கூலி கொடுக்கப்படும் நாளினை பொய் யென வாதிடுகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், கூலி கொடுக்கப்படும் நாளைப் பொய்யாக்குகின்றனர்.
12
وَمَا یُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعْتَدٍ اَثِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார்.
அப்துல் ஹமீது பாகவி
வரம்புமீறிய பாவியைத் தவிர (மற்றெவரும்) அதைப் பொய்யாக்க மாட்டான்.
IFT
அதை யாரும் பொய் யெனக் கூறுவதில்லை, வரம்பு மீறக்கூடிய தீய செயல்கள் செய்யக்கூடிய ஒவ்வொருவனையும் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வரம்பு மீறிய பாவியான ஒவ்வொருவனையும் தவிர (மற்றெவனும்) அதனைப் பொய்யாக்கமாட்டான்.
13
اِذَا تُتْلٰی عَلَیْهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே” என்று கூறுகின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனுக்கு நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், இது முன்னுள்ளோரின் கட்டுக்கதைகள் தான் என்று கூறுகிறான்.
IFT
நம்முடைய வசனங்கள் அவனிடம் ஓதிக் காண்பிக்கப்பட்டால், “இவை பண்டைக் காலத்துக் கட்டுக்கதைகள்” என்று சொல்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனுக்கு நம்முடைய வசனங்கள் ஓதிக்காண்பிக்கப்பட்டால், (இது) முன்னோர்களின் கட்டுக்கதைகள் என அவன் கூறுகின்றான்.
14
كَلَّا بَلْ ٚ رَانَ عَلٰی قُلُوْبِهِمْ مَّا كَانُوْا یَكْسِبُوْنَ ۟
முஹம்மது ஜான்
அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக அவ்வாறல்ல. அவர்கள் செய்து கொண்டிருந்த தீய செயல்களே அவர்களின் உள்ளங்கள் மீது (துருவாகப்படிந்து) மூடிக் கொண்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்.)
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை. மாறாக, உண்மை யாதெனில், அவர்களுடைய தீயசெயல்களின் கறை அவர்களின் உள்ளங்களில் படிந்து விட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவ்வாறன்று! பின்னர் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களின் இதயங்களின் மீது துருவாகப்படிந்து விட்டன. (ஆதலால்தான், இவ்வாறு கூறுகின்றனர்).
15
كَلَّاۤ اِنَّهُمْ عَنْ رَّبِّهِمْ یَوْمَىِٕذٍ لَّمَحْجُوْبُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல. (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக இவர்கள் தங்கள் இறைவனை விட்டும் தடுக்கப்பட்டு விடுவார்கள்.
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, அவர்கள் அந்நாளில் தம் இறைவனைக் காணும் பேற்றினை விட்டு தடுத்து வைக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(காஃபிர்கள் தங்களுக்கு இரட்சகனிடம் நெருக்கமிருப்பதாகக் கூறிக் கொண்டிருந்தார்களே அது) அவ்வாறல்ல! (விசாரணைக்காகக் கொண்டு வரப்படும்) அந்நாளில் நிச்சயமாக அவர்கள் தங்களுடைய இரட்சகனை (ப் பார்ப்பதை) விட்டும் மறைக்கப்பட்டவர்களாவர்.
16
ثُمَّ اِنَّهُمْ لَصَالُوا الْجَحِیْمِ ۟ؕ
முஹம்மது ஜான்
பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நிச்சயமாக இவர்கள் நரகத்தில் நுழைவார்கள்.
IFT
பின்னர், அவர்கள் உறுதியாக நரகில் வீழ்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், நிச்சயமாக அவர்கள் நரகத்தில் நுழையக்கூடியவர்கள் (ஆவர்.)
17
ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
“எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், (இவர்களை நோக்கி) ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தது இதுதான்'' என்று கூறப்படும்.
IFT
பின்னர், அவர்களிடம் “நீங்கள் பொய்யெனத் தூற்றிக் கொண்டிருந்தது இதுதான்” என்று கூறப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (அவர்களிடம்)” எதை நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ, அது இதுதான்” என்று கூறப்படும்.
18
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الْاَبْرَارِ لَفِیْ عِلِّیِّیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீ”னில் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அவ்வாறல்ல! நிச்சயமாக நன்மை செய்தவர்களின் பதிவேடு ‘‘இல்லிய்யூன்' என்ற (மேலான) இடத்தில் இருக்கும்.
IFT
ஒருபோதும் அவ்வாறில்லை! திண்ணமாக, நல்லோரின் வினைப்பட்டியல் மேன்மக்களின் பதிவேட்டில் உள்ளது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நல்லோர், தீயோர் ஆகியோரின் முடிவு ஒன்றுபோல்) அல்ல! நிச்சயமாக நன்மை செய்தோரின் பதிவேடு ‘இல்லிய்யூன்’ என்ற இடத்தில் இருக்கும்.
19
وَمَاۤ اَدْرٰىكَ مَا عِلِّیُّوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
“இல்லிய்யுன்” என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) ‘இல்லிய்யூன்' என்னும் (மேலான) இடத்தில் இருக்கும் பதிவேடு என்னவென்று நீர் அறிவீரா?
IFT
அந்த மேன்மக்களின் பதிவேடு என்னவென்று உமக்குத் தெரியுமா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ‘இல்லிய்யூன்’ என்றால் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
20
كِتٰبٌ مَّرْقُوْمٌ ۟ۙ
முஹம்மது ஜான்
(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அது ஒரு பதிவுப் புத்தகம். அதில் (நல்லவர்களின் பெயர்களெல்லாம்) பதியப்பட்டிருக்கும்.
IFT
அது எழுதப்பட்ட ஒரு புத்தகம்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அது நல்லோர்களின் செயல்கள்) பதியப்பட்ட புத்தகம்.
21
یَّشْهَدُهُ الْمُقَرَّبُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
(அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘முகர்ரப்' (இறைநெருக்கத்திற்குரிய) வானவர்கள் அதை(க் காத்து)ப் பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.
IFT
(இறைவனிடம்) நெருக்கமான வானவர்கள் அதனைப் பாதுகாக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அல்லாஹ்விடம்) நெருக்கமான(வான)வர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
22
اِنَّ الْاَبْرَارَ لَفِیْ نَعِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) “நயீம்” என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நிச்சயமாக நல்லவர்கள் (அந்நாளில்) இன்பம் நிறைந்த சொர்க்கத்தில்,
IFT
திண்ணமாக, நல்லவர்கள் பேரின்பத்தில் இருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நல்லோர்கள் நயீமில் (சுவனபதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கையில்) இருப்பா்.
23
عَلَی الْاَرَآىِٕكِ یَنْظُرُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
உயர்ந்த கட்டில்கள் மீது (சாய்ந்த வண்ணம் சொர்க்கத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
IFT
உயர்தரமான சாய்வு இருக்கைகளில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உயர்ந்த) சாய்வு இருக்கைகளின் மீது (இருந்தவாறு சுவனத்தின் காட்சிகளைப்) பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
24
تَعْرِفُ فِیْ وُجُوْهِهِمْ نَضْرَةَ النَّعِیْمِ ۟ۚ
முஹம்மது ஜான்
அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் முகங்களில் அவர்களின் சுகவாசத்தின் செழிப்பை (நபியே!) நீர் அறிந்து கொள்வீர்.
IFT
அவர்களின் முகங்களில் சுகவாழ்வின் பொலிவை நீர் கண்டறிவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் முகங்களில் சுகபோகத்தின் செழிப்பை (நபியே) நீர் அறிந்து கொள்வீர்.
25
یُسْقَوْنَ مِنْ رَّحِیْقٍ مَّخْتُوْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
(பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
முத்திரையிடப்பட்டிருக்கும் கலப்பற்ற திராட்சை ரசம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
IFT
முத்திரையிடப்பட்ட மிகச்சிறந்த மதுபானம் அவர்களுக்குப் புகட்டப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
முத்திரையிடப்பட்ட கலப்பற்ற மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.
26
خِتٰمُهٗ مِسْكٌ ؕ وَفِیْ ذٰلِكَ فَلْیَتَنَافَسِ الْمُتَنَافِسُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.
அப்துல் ஹமீது பாகவி
அது கஸ்தூரியால் முத்திரையிடப்பட்டிருக்கும். (பானத்தை) ஆசை கொள்ள விரும்புவோர் அதையே ஆசை கொள்ளவும்.
IFT
அதன் மீது கஸ்தூரி முத்திரை பதிந்திருக்கும். போட்டியிட்டு முந்திக்கொள்ள முயல்பவர்கள், இதனை அடைந்து கொள்வதில் முந்திக்கொள்ள முயலட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் முத்திரை கஸ்தூரியினால் ஆனதாகும், (ஆகவே) இன்னும் (நல்லறங்கள் செய்து) அதற்கு முந்திக் கொள்பவர்கள் முந்திக் கொள்ளட்டும்.
27
وَمِزَاجُهٗ مِنْ تَسْنِیْمٍ ۟ۙ
முஹம்மது ஜான்
இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
அதில் ‘தஸ்னீம்' என்ற (வடிகட்டிய) பானமும் கலந்திருக்கும்.
IFT
மேலும், அந்த பானத்தில் ‘தஸ்னீம்’ கலந்திருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அதன் கலவை (உயரத்திலிருந்து ஊற்றப்படும் சிறந்த நீரான) தஸ்னீம் (எனும் சுனை நீர்) ஆகும்.
28
عَیْنًا یَّشْرَبُ بِهَا الْمُقَرَّبُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(தஸ்னீம் என்பது அல்லாஹ்வுக்குச்) சமீபமானவர்கள் அருந்துவதற்கென ஏற்பட்ட ஒரு (சிறப்பான) சுனையின் நீராகும்.
IFT
அது ஒரு நீரூற்று. (இறைவனுக்கு) நெருக்கமானவர்கள் அதன் நீருடன் மது அருந்துவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(தஸ்னீம் எனும்) நீர் ஊற்றை (அல்லாஹ்வுக்கு) நெருக்கமானவர்கள் அதனைப் பருகுவார்கள்.
29
اِنَّ الَّذِیْنَ اَجْرَمُوْا كَانُوْا مِنَ الَّذِیْنَ اٰمَنُوْا یَضْحَكُوْنَ ۟ؗۖ
முஹம்மது ஜான்
நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்) சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக குற்றவாளிகளோ (இன்று) நம்பிக்கை கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிக்கின்றனர்.
IFT
திண்ணமாக, குற்றம் புரிந்தவர்கள் இறைநம்பிக்கை கொண்டவர்களை (உலகில்) ஏளனம் செய்து கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக குற்றமிழைத்தவர்கள், (உலகில்) விசுவாசங்கொண்டவர்களைக் கண்டு (ஏளனமாகச்) சிரிப்பவர்களாக இருந்தனர்.
30
وَاِذَا مَرُّوْا بِهِمْ یَتَغَامَزُوْنَ ۟ؗۖ
முஹம்மது ஜான்
அன்றியும், அவர்கள் அண்மையில் சென்றால், (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொள்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களின் சமீபமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண் ஜாடையும் காட்டிக்கொள்கின்றனர்.
IFT
மேலும், அவர்களை இவர்கள் கடந்து செல்லும்போது கண்களால் சாடை காட்டிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் பக்கமாகச் சென்றால், (பரிகாசமாகத் தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் கண்சாடை காட்டிக் கொள்ளவும் செய்வார்கள்.
31
وَاِذَا انْقَلَبُوْۤا اِلٰۤی اَهْلِهِمُ انْقَلَبُوْا فَكِهِیْنَ ۟ؗۖ
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் தம் குடும்பத்தார்பால் திரும்பிச் சென்றாலும், (தாங்கள் செய்தது பற்றி) மகிழ்வுடனேயே திரும்பிச் செல்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை விட்டும் விலகித்) தங்கள் குடும்பத்தார்களிடம் சென்று விட்டபோதிலும், இவர்களுடைய விஷயங்களையே (பரிகாசமாகப் பேசி) மகிழ்ச்சியடைகின்றனர்.
IFT
மேலும், தம் குடும்பத்தாரிடம் திரும்பும்போது மகிழ்ச்சி ஆரவாரத்துடன் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தங்கள் குடும்பத்தார்பால் திரும்பிச் செல்வார்களாயின் (தாங்கள் செய்ததைப்பற்றி மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகின்றனர்.
32
وَاِذَا رَاَوْهُمْ قَالُوْۤا اِنَّ هٰۤؤُلَآءِ لَضَآلُّوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும் அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்” என்றும் கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(வழியில்) இவர்களைக் கண்டால் (இவர்களைச் சுட்டிக் காண்பித்து) ‘‘நிச்சயமாக இவர்கள் வழிகெட்டுப் போனார்கள்'' என்றும் கூறுகின்றனர்.
IFT
மேலும், அவர்களைப் பார்க்கும்போது, நிச்சயமாக இவர்கள் வழிகெட்டவர்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசிகளாகிய) அவர்களை இவர்கள் பார்த்தால், “நிச்சயமாக இவர்கள் வழி தவறியவர்கள்” என்றும் கூறுகின்றனர்.
33
وَمَاۤ اُرْسِلُوْا عَلَیْهِمْ حٰفِظِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
(முஃமின்களின் மீது) அவர்கள் பாதுகாவலர்களாக அனுப்பப்படவில்லையே!
அப்துல் ஹமீது பாகவி
(நம்பிக்கையாளர்களைப் பற்றி எதற்காக இவர்கள் இவ்வளவு கவலைப்படுகின்றனர்?) இவர்கள் அவர்கள் மீது பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லையே!
IFT
ஆனால், அவர்களோ இறைநம்பிக்கையாளர்களை கண்காணிக்கக் கூடியவர்களாய் அனுப்பப்படவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (விசுவாசிகளான) அவர்கள் மீது (காஃபிர்களான) இவர்கள் பாதுகாப்பாளர்களாக அனுப்பப்படவில்லை.
34
فَالْیَوْمَ الَّذِیْنَ اٰمَنُوْا مِنَ الْكُفَّارِ یَضْحَكُوْنَ ۟ۙ
முஹம்மது ஜான்
ஆனால் (மறுமை) நாளில் ஈமான் கொண்டவர்கள் காஃபிர்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், (மறுமை நாளாகிய) இன்றைய தினம் நம்பிக்கை கொண்டவர்கள் அந்நிராகரிப்பவர்களைக் கண்டு சிரிக்கின்றனர்.
IFT
இன்று இறைநம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால் (மறுமை நாளாகிய) இன்றையத்தினம் விசுவாசங்கொண்டவர்கள் அந்நிராகரிப்போரைக் கண்டு சிரிப்பார்கள்.
35
عَلَی الْاَرَآىِٕكِ ۙ یَنْظُرُوْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(சொர்க்கத்திலுள்ள சிறந்த) இருக்கைகள் மீது (சாய்ந்த வண்ணம்) இருந்து கொண்டு, இந்தப் பாவிகள் படும் வேதனையைப்) பார்த்துக்கொண்டு,
IFT
சாய்வு நாற்காலிகளில் சாய்ந்தவாறு (அவர்களின் நிலைகளைப்) பார்க்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(சுவனபதியிலுள்ள உயர்தரமான) சாய்வு இருக்கைகள் மீது இருந்து (கொண்டு, தீயவர்கள் படும் வேதனையைப்) பார்ப்பார்கள்.
36
هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوْا یَفْعَلُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
அப்துல் ஹமீது பாகவி
(மறுமையை) நிராகரித்த இவர்களுக்கு, இவர்களுடைய செயலுக்குத்தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்பார்கள்.)
IFT
கிடைத்துவிட்டதல்லவா, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்கான நற்கூலி!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மறுமையை) நிராகரித்தோர், அவர்கள் செய்து கொண்டிருந்தவைக்கு(த் தக்க) கூலி கொடுக்கப்பட்டார்களா? (என்றும் பார்ப்பார்கள்,)