السجدة
ஸூரா 32 — அஸ்ஸஜ்தா
30 வசனங்கள் · ஜுஎ் 21
1
الٓمّٓ ۟ۚ
முஹம்மது ஜான்
அலிஃப், லாம், மீம்.
அப்துல் ஹமீது பாகவி
அலிஃப் லாம் மீம்.
IFT
அலிஃப், லாம், மீம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அலிஃப் லாம் மீம்.
2
تَنْزِیْلُ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟ؕ
முஹம்மது ஜான்
அகிலங்களின் இறைவனிடம் இருந்து அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில் சந்தேகமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! உம் மீது) அருளப்பட்ட இவ்வேதம் உலகத்தாரின் இறைவனிடமிருந்தே வந்ததென்பதில் ஒரு சந்தேகமுமில்லை.
IFT
எவ்வித ஐயமுமின்றி அகில உலகின் அதிபதியிடமிருந்தே இவ்வேதம் இறக்கியருளப்பட்டிருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! உம்மீது) அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இவ்) வேதம் இறக்கியருளப்பட்டது, அதில் யாதொரு சந்தேகமுமில்லை.
3
اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰىهُمْ مِّنْ نَّذِیْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ یَهْتَدُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆயினும் அவர்கள் “இவர் இதை இட்டுக்கட்டிக் (கற்பனை செய்து) கொண்டார்” என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தாருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மை(வேதமாகும்).
அப்துல் ஹமீது பாகவி
(நம் நபி) “இதை(த் தாமாகவே) கற்பனை செய்து கொண்டார்'' என்று (உங்களைப் பற்றி) அவர்கள் கூறுகின்றனரா? அவ்வாறன்று. இது உமது இறைவனால் உமக்கு அருளப்பட்ட உண்மையான வேதமாகும். உமக்கு முன்னர் இதுவரை ஒரு தூதருமே வராதிருந்த (இந்த அரபி) மக்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவே (இவ்வேதம் அருளப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி) அவர்கள் நேரான வழியில் செல்வார்களாக!
IFT
“இவர் சுயமாக இதனை இயற்றியுள்ளார்” என்று இம்மக்கள் கூறுகின்றார்களா, என்ன? அவ்வாறில்லை. மாறாக, இது உம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமேயாகும்; அவர்களிடம் உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரும் வந்திருக்காத இந்தச் சமுதாயத்தினரை நீர் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதற்காக! அவர்கள் அதன் மூலம் நேர்வழி பெறக்கூடும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மாறாக, “இதனை(த் தாமாகவே) கற்பனை செய்துகொண்டார்” என்று (உம்மைப்பற்றி) அவர்கள் கூறுகின்றார்களா? அவ்வாறல்ல! எவர்களுக்கு உமக்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர் வரவில்லையோ, அந்த சமூகத்தினருக்கு அவர்கள் நேர்வழி பெறுவதற்காக நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக அது உம்முடைய இரட்சகனிடமிருந்து (அருளப்பட்ட) உண்மையா(ன வேதமா)கும்.
4
اَللّٰهُ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا فِیْ سِتَّةِ اَیَّامٍ ثُمَّ اسْتَوٰی عَلَی الْعَرْشِ ؕ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِیٍّ وَّلَا شَفِیْعٍ ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ ۟
முஹம்மது ஜான்
அல்லாஹ் தான் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப்பின் அர்ஷின் மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்து பேசுபவரோ இல்லை. எனவே (இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்க வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் ஆறே நாள்களில் படைத்து அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (உங்களைப்) பாதுகாப்பவனோ அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ அவனைத் தவிர (வேறொருவரும்) உங்களுக்கு இல்லை. (இதை அறிந்து) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா?
IFT
அல்லாஹ் எத்தகையவன் எனில், வானங்களையும் பூமியையும் அவற்றிற்கிடையிலுள்ள அனைத்துப் பொருள்களையும் ஆறுநாட்களில் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். அவனைத் தவிர உங்களுக்கு பாதுகாப்பளிப்பவரும் யாரும் இல்லை. மேலும், அவனிடம் பரிந்துரை செய்பவரும் எவருமில்லை. இனியும் நீங்கள் உணர்ந்துகொள்ள மாட்டீர்களா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும், இவையிரண்டிற்கு மத்தியிலுள்ளவைகளையும் ஆறு நாட்களில் அவன் படைத்தான், பின்னர் (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும் மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், அவனைத்தவிர உங்களுக்குப் பாதுகாவலனோ, அல்லது (உங்களுக்குப்) பரிந்து பேசுபவனோ (வேறொருவரும்) இல்லை, (இதனை) நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?
5
یُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَی الْاَرْضِ ثُمَّ یَعْرُجُ اِلَیْهِ فِیْ یَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ ۟
முஹம்மது ஜான்
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
அப்துல் ஹமீது பாகவி
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகிறான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
IFT
அவன் வானங்கள் முதல் பூமி வரை உலகின் எல்லாக் காரியங்களையும் நிர்வகிக்கின்றான். அந்நிர்வாகத்தைப் பற்றிய அறிக்கை ஒருநாள் அவனிடம் உயர்ந்து செல்கின்றது. அந்நாள் உங்கள் கணக்குப்படி ஓராயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்திலிருந்து பூமிவரை உள்ள காரியத்தை அவன் நிர்வகிக்கின்றான், பின்னர் (நிர்வகிக்கப்பட்ட காரியமான) அது நீங்கள் எண்ணுகின்ற (உங்கள்) கணக்கின்படி ஆயிரம் வருடங்களாக அதனுடைய அளவு இருக்கும் (அந்)நாளில் அவன் பக்கம் உயரும்.
6
ذٰلِكَ عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟ۙ
முஹம்மது ஜான்
அவனே மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன்; (அன்றியும் அவனே யாவற்றையும்) மிகைத்தவன்; அன்புடையோன்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும் வெளிப்படையானதையும் (உள்ளது உள்ளபடி) நன்கறிந்தவன்; (அனைத்தையும்) மிகைத்தவன், மகா கருணையுடையவன் ஆவான்.
IFT
அவன்தான் மறைவான மற்றும் வெளிப்படையான அனைத்தையும் நன்கறிந்தவனாகவும், வலிமை மிக்கவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேற் கூறப்பட்ட தகுதிகளுக்குரிய) அவனே (வானம் பூமியிலுள்ள) மறைவானதையும், வெளிப்படையானதையும் நன்கு அறிந்தவன், (அன்றி யாவற்றையும், அவனே மிகைத்தோன், பெருங்கிருபையுடையவன்.
7
الَّذِیْۤ اَحْسَنَ كُلَّ شَیْءٍ خَلَقَهٗ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِیْنٍ ۟ۚ
முஹம்மது ஜான்
அவனே தான் படைத்துள்ள ஒவ்வொரு பொருளையும் அழகாக்கினான்; இன்னும், அவன் மனிதனின் படைப்பைக் களி மண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
அப்துல் ஹமீது பாகவி
அவனே எல்லா பொருள்களையும் (படைத்து) அவற்றின் கோலத்தையும் மிக்க அழகாக அமைத்தான். ஆரம்பத்தில் மனிதனை களிமண்ணைக் கொண்டே படைத்தான்.
IFT
அவன் படைத்த எந்த ஒரு பொருளையும் அழகாகவே படைத்துள்ளான். அவன் களிமண்ணிலிருந்து, மனிதனைப் படைக்கத் தொடங்கினான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவன்) எத்தகையவனென்றால், எதனை அவன் படைத்தானோ அந்த ஒவ்வொரு பொருளையும், (அதன் வடிவமைப்பையும்) மிக்க அழகாக்கி வைத்தான், மேலும், அவன் மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்.
8
ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِیْنٍ ۟ۚ
முஹம்மது ஜான்
பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், ஓர் அற்பத் துளியாகிய (இந்திரியச்) சத்திலிருந்து அவனுடைய சந்ததியைப் படைக்கிறான்.
IFT
பின்னர் அவனுடைய சந்ததிகளை அற்பமான நீரைப் போன்ற ஒருவித சத்திலிருந்து படைத்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர் வடிகட்டி எடுக்கப்பட்ட அற்ப நீரில் (_இந்திரியத்தில்) இருந்து அவனுடைய சந்ததியை (உருவகித்து) உண்டாக்கினான்.
9
ثُمَّ سَوّٰىهُ وَنَفَخَ فِیْهِ مِنْ رُّوْحِهٖ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـِٕدَةَ ؕ قَلِیْلًا مَّا تَشْكُرُوْنَ ۟
முஹம்மது ஜான்
பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், அவன் (படைப்பாகிய) அதைச் செப்பனிட்டுத் தனது ‘ரூஹை' அதில் புகுத்தி (உங்களை உற்பத்தி செய்கிறான்.) உங்களுக்குக் காதுகள், கண்கள், உள்ளங்கள் ஆகியவற்றையும் அவனே அமைக்கிறான். இவ்வாறு இருந்தும் உங்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சிலரே!
IFT
பிறகு, குறைபாடு இல்லாதவாறு அவனைச் சீரமைத்து அவனுள் தன்னுடைய உயிரை ஊதினான். மேலும், உங்களுக்குக் காதுகளையும், இதயங்களையும் கொடுத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதனைச் சரியாக உருவாக்கி, தன்னுடைய “ரூஹ்” (ஆன்மா)விலிருந்து அதில் ஊதி (மனிதனை உண்டாக்கி)னான், இன்னும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வை(ப்புலன்)களையும், இதயங்களையும் அவனே அமைத்தான். (இவ்வாறிருந்தும்) நீங்கள் மிகக்குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.
10
وَقَالُوْۤا ءَاِذَا ضَلَلْنَا فِی الْاَرْضِ ءَاِنَّا لَفِیْ خَلْقٍ جَدِیْدٍ ؕ۬ بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ ۟
முஹம்மது ஜான்
“நாம் பூமியில் அழிந்து போய் விடுவோமாயின் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாவோமா?” எனவும் அவர்கள் கூறுகின்றனர்; ஏனெனில் அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையே நிராகரிப்போராய் இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(நாங்கள் இறந்து) பூமியில் அழிந்து போனதன் பின்னர் மெய்யாகவே நாங்கள் புதிய படைப்பாக அமைக்கப்பட்டு விடுவோமா?'' என்று அவர்கள் கூறுகின்றனர். இதுமட்டுமல்ல, அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
IFT
மேலும், “நாம் மண்ணோடு மண்ணாய்க் கலந்துவிட்ட பிறகு மீண்டும் புதிதாய்ப் படைக்கப்படுவோமா?” என்று இவர்கள் கேட்கின்றார்கள். உண்மை என்னவெனில், இவர்கள் தங்களுடைய இறைவனின் சந்திப்பையே நிராகரிப்பவர்களாய் இருக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(நாங்கள் இறந்து) பூமியில் மறைந்து (அழிந்து) போன பின்னர், நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பில் ஆவோமோ?” என்று அவர்கள் கூறுகின்றனர். அ(வ்வாற)ல்ல! அவர்கள் தங்கள் இரட்சகனின் சந்திப்பையே நிராகரிப்போராக இருக்கின்றனர்.
11
قُلْ یَتَوَفّٰىكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِیْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
“உங்கள் மீது நியமிக்கப்பட்டிருக்கும், “மலக்குல் மவ்து” தாம் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார் - பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் மீள்விக்கப்படுவீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது (உங்கள் இறைவனால்) சாட்டப்பட்டிருக்கும் ‘மலக்குல் மவ்த்து' (என்ற மரண வானவர்)தான் உங்கள் உயிரைக் கைப்பற்றுவார். பின்னர், உங்கள் இறைவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்.''
IFT
இவர்களிடம் கூறும்: “உங்கள்மீது நியமிக்கப்பட்ட மரணத்தின் வானவர் உங்களை முழுமையாகக் கைப்பற்றிக் கொள்வார். பின்னர், உங்களுடைய இறைவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே (நபியே!) நீர் கூறுவீராக: உங்களுக்கென நியமனம் செய்யப்பட்டிருக்கும் மலக்குல் மவ்த் (ஆகிய வானவர் தான்) உங்களுடைய உயிரைக் கைப்பற்றுவார், பின்னர் (மீண்டும் உயிர்க்கொடுக்கப்பட்டு), உங்கள் இரட்சகனிடமே நீங்கள் திருப்பிக்கொண்டு வரப்படுவீர்கள்.
12
وَلَوْ تَرٰۤی اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ ؕ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًا اِنَّا مُوْقِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! விசாரணைக்காக) இக்குற்றவாளிகள் தங்கள் இறைவன் முன் (நிறுத்தப்படும் சமயத்தில்) தலை குனிந்தவர்களாக “எங்கள் இறைவனே! எங்கள் கண்களும் காதுகளும் திறந்து கொண்டன. (நாங்கள் அனைத்தையும் பார்த்தும் கேட்டும் தெரிந்தும் கொண்டோம். முந்திய உலகிற்கு ஒரு தடவை) எங்களை திரும்ப அனுப்பிவை. நாங்கள் நற்செயல்களையே செய்வோம். நிச்சயமாக நாங்கள் (இந்த விசாரணை நாளை) உறுதியாக நம்புகிறோம்'' என்று கூறுவதை நீர் காண்பீராயின் (அவர்களுடைய நிலைமை எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை அறிந்து கொள்வீர்.)
IFT
அந்தோ! இந்தக் குற்றவாளிகள் தலை குனிந்தவர்களாய்த் தம் இறைவன் திருமுன் நிற்கும் வேளையில் நீங்கள் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை அவர்கள் இப்படிக் கூறிக்கொண்டிருப்பார்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் நன்கு பார்த்துவிட்டோம்; கேட்டுவிட்டோம். எனவே, எங்களைத் திரும்ப அனுப்பி வைப்பாயாக நாங்கள் நற்செயல் புரிவதற்காக! இப்போது எங்களுக்கு உறுதி வந்துவிட்டது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், இக்குற்றவாளிகள் தங்கள் இரட்சகனிடத்தில் அவர்கள் தலைகுனிந்தவர்களாக, “எங்கள் இரட்சகனே! (இது சமயம்) நாங்கள் (எதைப் பொய்ப்படுத்தினோமோ அதைப்) பார்த்துக்கொண்டோம்; இன்னும், கேட்டுக்கொண்டோம். ஆகவே (உலகிற்கு ஒரு தடவை) எங்களைத் திருப்பி அனுப்பிவை! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம் நிச்சயமாக நாங்கள் (இந்த நாளை) உறுதி கொண்டவர்களாக ஆகிவிட்டோம்.” (என்று பிரார்த்திப்பதை நீர் காண்பீர்).
13
وَلَوْ شِئْنَا لَاٰتَیْنَا كُلَّ نَفْسٍ هُدٰىهَا وَلٰكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّیْ لَاَمْلَـَٔنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِیْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
அப்துல் ஹமீது பாகவி
நாம் விரும்பியிருந்தால் (இவர்களில் உள்ள) ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் நேரான வழியில் செல்லக்கூடிய வசதியைக் கொடுத்திருப்போம். எனினும், ஜின் இன்னும் மனிதர்களில் (உள்ள பாவிகள்) பலரைக் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவோம் என்ற நம் தீர்ப்பு (முன்னரே) ஏற்பட்டு விட்டது.
IFT
(விடை பகரப்படும்:) “நாம் நாடியிருந்தால் ஆரம்பத்திலேயே ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியைக் காட்டி இருப்போம். ஆயினும், ‘ஜின்கள் மற்றும் மனிதர்கள் அனைவரைக் கொண்டும் நான் நரகத்தை நிரப்புவேன்’ என்று கூறியிருந்த என்னுடைய வாக்கு நிறைவேறிவிட்டது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நாம் நாடியிருந்தால், (இவர்களில் உள்ள) ஒவ்வோர் ஆத்மாவிற்கும், அதற்குரிய நேர் வழியை நாம் கொடுத்திருப்போம், எனினும் ஜின்களாலும், மனிதர் (களில் உள்ள குற்றவாளி)கள் யாவராலும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து வாக்கு (முன்னரே) ஏற்பட்டுவிட்டது.
14
فَذُوْقُوْا بِمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا ۚ اِنَّا نَسِیْنٰكُمْ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆகவே, உங்களுடைய இந்த நாளின் சந்திப்பை நீங்கள் மறந்திருந்ததின் (பலனை) அனுபவியுங்கள், நிச்சயமாக நாமும் உங்களை மறந்து விட்டோம்; மேலும் நீங்கள் செய்த (தீ) வினையின் பயனாக என்றென்றும் நிலையான வேதனையை அனுபவியுங்கள்” (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, ‘‘ (நம்மைச்) சந்திக்கும் இந்நாளை நீங்கள் மறந்துவிட்டதன் பலனை நீங்கள் சுவைத்துக் கொண்டிருங்கள். (இந்நாளை நீங்கள் மறந்தவாறே) நிச்சயமாக நாமும் உங்களை மறந்துவிட்டோம். நீங்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயலின் காரணமாக என்றென்றும் நிலையான இந்த வேதனையை அனுபவித்துக் கொண்டிருங்கள்'' (என்றும் கூறப்படும்).
IFT
எனவே, இப்போது சுவையுங்கள், நீங்கள் இந்நாளின் சந்திப்பை மறந்துவிட்டிருந்ததற்கான விளைவை! நாமும் இப்போது உங்களை மறந்துவிட்டோம். மேலும், சுவையுங்கள் நிரந்தரமான வேதனையை, நீங்கள் செய்த தீயசெயல்களுக்குப் பகரமாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“ஆகவே, உங்களுடைய இந்நாளின் சந்திப்பை நீங்கள் மறந்து விட்டதனால் (வேதனையை), நீங்கள் சுவைத்துப் பாருங்கள், (இந்நாளை நீங்கள் மறந்தவாறே,) நிச்சயமாக நாம் உங்களை மறந்துவிட்டோம், மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினையின் காரணமாக, (என்றென்றும்) நிலையான வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்” (என்றும் கூறப்படும்).
15
اِنَّمَا یُؤْمِنُ بِاٰیٰتِنَا الَّذِیْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا یَسْتَكْبِرُوْنَ ۟
முஹம்மது ஜான்
நம் வசனங்களின் மேல் நம்பிக்கை கொண்டோர் யாரென்றால் அவர்கள், அவற்றின் மூலம் நினைவூட்டப்பட்டால், அவர்கள் விழுந்து ஸுஜூது செய்தவர்களாய்த் தம் இறைவனைப் புகழ்ந்து, துதிப்பார்கள்; அவர்கள் பெருமை அடிக்கவும் மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், எவர்கள் (பூமியில்) சிரம் பணிந்து தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதி செய்கிறார்களோ அவர்கள்தான் நம் வசனங்களை மெய்யாகவே நம்பிக்கை கொள்வார்கள். அவர்கள் கர்வம்கொண்டு பெருமையடிக்கவும் மாட்டார்கள்.
IFT
நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்பவர்கள் யாரெனில், அவ்வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டி, அறிவுரை கூறப்படும்போது அவர்கள் ஸஜ்தாவில் விழுந்து விடுகின்றார்கள். மேலும், இறைவனைப் புகழ்ந்து துதிக்கின்றார்கள். மேலும், அவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நம்முடைய வசனங்களைக் கொண்டு விசுவாசிப்பவர்களெல்லாம், அவற்றைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் சிரம் பணிந்தவர்களாக விழுவார்களே அத்தகையோர் தாம். மேலும், தங்கள் இரட்சகனின் புகழைக்கொண்டு துதிசெய்வார்கள். அவர்களோ பெருமையடிக்கமாட்டார்கள்.
16
تَتَجَافٰی جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ یَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا ؗ وَّمِمَّا رَزَقْنٰهُمْ یُنْفِقُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்களுடைய விலாக்களைப் படுக்கைகளிலிருந்து (தூக்கத்தைத் துறந்து) உயர்த்தி அவர்கள் தங்களுடைய இறைவனை அச்சத்தோடும் நம்பிக்கை ஆர்வத்தோடும் பிரார்த்தனை செய்வார்கள்; மேலும் நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து (தானதர்மங்களில்) செலவும் செய்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (நித்திரையில் ஆழ்ந்திருக்கும்போது) படுக்கையிலிருந்து தங்கள் விலாக்களை உயர்த்தி, தங்கள் இறைவனிடம் (அவனது அருளை) ஆசை வைத்தும், (அவனது தண்டனையை) பயந்தும் பிரார்த்தனை செய்வார்கள். நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தானமும் செய்வார்கள்.
IFT
மேலும், அவர்களுடைய விலாப்புறங்கள் படுக்கைகளைவிட்டும் உயர்ந்து விடுகின்றன. அச்சத்துடனும், ஆவலுடனும் தங்கள் இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்! மேலும், நாம் அவர்களுக்கு வழங்கியிருப்பதிலிருந்து செலவும் செய்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு (தூக்கத்திலிருந்து) விலகிவிடும், தங்களுடைய இரட்சகனை அச்சத்தோடும், ஆதரவோடும் அழை(த்து பிரார்த்தி)ப்பார்கள், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து அவர்கள் தர்மமாகச் செலவும் செய்வார்கள்.
17
فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِیَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْیُنٍ ۚ جَزَآءً بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் செய்த (நற்) கருமங்களுக்குக் கூலியாக மறைத்து வைக்கப்பட்டுள்ள கண் குளிர்ச்சியை (மறுமையின் பேரின்பத்தை) எந்த ஓர் ஆன்மாவும் அறிந்து கொள்ள முடியாது.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் செய்த (நற்)காரியங்களுக்குக் கூலியாக நாம் அவர்களுக்காக (தயார்படுத்தி) மறைத்து வைத்திருக்கும் கண் குளிரக்கூடிய (சன்மானத்)தை எவராலும் அறிந்துகொள்ள முடியாது. (அவ்வளவு மேலான சன்மானங்கள் அவர்களுக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.)
IFT
அவர்களுடைய செயல்களின் கூலியாக கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருதவற்றிற்க்குக் கூலியாக, அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை எந்த ஒரு ஆத்மாவும் அறியாது.
18
اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا ؔؕ لَا یَسْتَوٗنَ ۟
முஹம்மது ஜான்
எனவே, (அத்தகைய) முஃமினானவர் (வரம்பு மீறிய) பாவியைப் போல் ஆவாரா? (இருவரும்) சமமாக மாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்ட ஒரு மனிதன் (இறைவனுக்கு) மாறு செய்பவனைப் போலாவானா? இருவரும் சமமாக மாட்டார்கள்.
IFT
நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா? இவ்விருவரும் சமமாக முடியாது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டவராக இருந்தவர் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்து கொண்டிருந்தவரைப் போலாவாரா? அவர்கள் (இருவரும்) சமமாகமாட்டர்கள்.
19
اَمَّا الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰی ؗ نُزُلًا بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟
முஹம்மது ஜான்
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)கருமங்களின் காரணமாக சுவனபதிகள் தங்குமிடங்களாகி (அங்கு அவர்கள்) விருந்தினராய் (உபசரிக்கப்படுவார்கள்).
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்யும் (நற்)செயல்களின் காரணமாக சொர்க்கம் தங்கும் இடமாகி அதில் விருந்தாளியாக உபசரிக்கப்படுவார்கள்.
IFT
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றார்களோ, அவர்களுக்கு சுவனபதிகளில் தங்குமிடங்கள் உள்ளன; அவர்களை உபசரிப்பதற்கு! அவர்கள் செய்து கொண்டிருந்த நற்செயல்களுக்குப் பகரமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகையோர்_ அவர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிற்கு விருந்தாக தங்குவதற்குரிய சுவனபதிகள் உண்டு.
20
وَاَمَّا الَّذِیْنَ فَسَقُوْا فَمَاْوٰىهُمُ النَّارُ ؕ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ یَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِیْدُوْا فِیْهَا وَقِیْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِیْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஆனால் எவர்கள் (வரம்பு மீறிப்) பாவம் செய்தார்களோ, அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்புத்தான் - அவர்கள் அதை விட்டு வெளியேற நாடும் போதெல்லாம், அதிலேயே மீண்டும் தள்ளப்பட்டு: “எதனை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்களோ அந்த (நரக) நெருப்பின் வேதனையை அனுபவியுங்கள்” என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் பாவம் செய்கிறார்களோ அவர்களின் தங்குமிடம் நரகம்தான். அதிலிருந்து அவர்கள் வெளிப்பட முயற்சிக்கும் போதெல்லாம் அதனுள் இழுத்துத் தள்ளப்பட்டு ‘‘நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்த நரக வேதனையைச் சுவைத்துக் கொண்டிருங்கள்'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.
IFT
மேலும், எவர்கள் பாவத்தைச் செய்கின்றார்களோ, அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அவர்கள் அதிலிருந்து வெளியேற விரும்பும்போதெல்லாம் அதிலேயே தள்ளப்படுவார்கள். மேலும், அவர்களிடம் கூறப்படும்: “சுவையுங்கள், எந்த நரக வேதனையைப் பொய்யென்று கூறிக்கொண்டிருந்தீர்களோ அதே நரக வேதனையை!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், பாவம் செய்கிறார்களே அத்தகையோர்_அவர்கள் தங்குமிடம் (நரக) நெருப்பாகும், அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும்போதெல்லாம் அதிலேயே மீட்டப்படுவார்கள், மேலும், நீங்கள் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களே, அந்த (நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப்பாருங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்படும்.
21
وَلَنُذِیْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰی دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ یَرْجِعُوْنَ ۟
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பி விடும் பொருட்டுப் பெரிய வேதனையை (மறுமையில் அவர்கள்) அடைவதற்கு முன்னதாகவே (இம்மையில்) சமீபமான ஒரு வேதனையை அவர்கள் அனுபவிக்கும்படிச் செய்வோம்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
IFT
மேலும், அந்தப் பெரும் வேதனை வருமுன் இவர்களுக்கு இவ்வுலகில் (ஏதேனும் ஒரு சிறு) வேதனையை சுவைக்கக் கொடுப்போம்; இவர்கள் (தங்களது எதிர்ப்புப் போக்கைவிட்டு) விலகி விடக்கூடும் என்பதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் (பாவங்களிலிருந்து) திரும்பிவிடுவதற்காக (மறுமையில் கிடைக்கவிருக்கும்) மிகப்பெரிய வேதனையின்றி (அதற்கு முன்னர்) குறைந்த (இம்மை) வேதனையிலிருந்து அவர்களை நிச்சயமாக நாம் சுவைக்கச் செய்வோம்.
22
وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰیٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ؕ اِنَّا مِنَ الْمُجْرِمِیْنَ مُنْتَقِمُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
எவன் தன்னுடைய இறைவனின் வசனங்களைக் கொண்டு நினைவு படுத்தப்பட்ட பின்னரும் அவற்றைப் புறக்கணித்து விடுகிறானோ, அவனைவிட அநியாயக்காரன் எவன் (இருக்கிறான்)? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை தண்டிப்போம்.
அப்துல் ஹமீது பாகவி
(இவ்வாறு) இறைவனின் (எச்சரிக்கையான) அத்தாட்சிகளைக் கொண்டு (மறுமையை) ஞாபகமூட்டிய பின்னரும் இதைப் புறக்கணித்து விடுபவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் (இத்தகைய) குற்றவாளிகளை பழிவாங்கியே தீருவோம்.
IFT
மேலும், தன்னுடைய இறைவனின் வசனங்கள் வாயிலாக அறிவுரை வழங்கப்பட்ட பிறகும் அதனைப் புறக்கணித்துவிட்டவனை விடக் கொடிய அக்கிரமக்காரன் யார்? இத்தகைய குற்றவாளிகளை நாம் பழிவாங்கியே தீருவோம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், தன்னுடைய இரட்சகனின் வசனங்களைக் கொண்டு நினைவுபடுத்தப்பட்டு, அதன் பின்னர் அவைகளைப் புறக்கணித்து விடுகிறவனை விட மிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக, நாம் (இத்தகைய) குற்றவாளிகளை (அவர்களின் முந்திய பாவத்திற்காக) தண்டிக்கக்கூடியவர்களாவோம்.
23
وَلَقَدْ اٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ فَلَا تَكُنْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآىِٕهٖ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ۚ
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (அவ்) வேதத்தைக் கொடுத்தோம். எனவே, அவர் அதைப் பெற்றதைப்பற்றி சந்தேகப்படாதீர்; நாம் இதனை இஸ்ராயீலின் சந்ததிக்கு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து இருந்தோம்.ஆகவே, (நபியே! மிஃராஜ் இரவில்) அவரை சந்தித்ததில் நீர் சந்தேகிக்காதீர்.நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதை இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக ஆக்கினோம்.
IFT
இதற்கு முன்பு நாம் மூஸாவுக்கு வேதம் வழங்கியிருந்தோம். ஆகையால், அதுபோன்ற வேதத்தை நீர் பெறுவதில் எவ்வித சந்தேகமும் உமக்கு வர வேண்டாம். அவ்வேதத்தை இஸ்ராயீலின் வழித்தோன்றல்களுக்கு ஒரு வழிகாட்டியாக ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், மூஸாவுக்கு (தவ்ராத்) வேதத்தையும் கொடுத்திருந்தோம். எனவே, (நபியே!) அவர் அதனைப் பெற்றதைப்பற்றி நீர் சந்தேகத்தில் ஆகிவிடவேண்டாம், நாம் (மூஸாவுக்குக் கொடுத்த) அதனை, இஸ்ராயீலின் மக்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் ஆக்கினோம்.
24
وَجَعَلْنَا مِنْهُمْ اَىِٕمَّةً یَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا ؕ۫ وَكَانُوْا بِاٰیٰتِنَا یُوْقِنُوْنَ ۟
முஹம்மது ஜான்
இன்னும் அவர்கள் பொறுமையுடனிருந்து, நம் வசனங்களை உறுதியாக நம்பி ஏற்றுக் கொண்ட போது, நம்முடைய கட்டளைப்படி நேர்வழி காட்டும் தலைவர்களை - இமாம்களை - அவர்களில் நின்றும் உண்டாக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
நம் கட்டளைகளைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்த இஸ்ராயீலின் சந்ததிகளில் இருந்த ஒரு கூட்டத்தினரை அவர்களுக்கு வழி காட்டிகளாக அமைத்தோம். அவர்கள் நம் வசனங்களை முற்றிலும் உறுதியுடன் நம்பியவர்களாக இருந்தனர்.
IFT
மேலும், அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, நம் வசனங்கள் மீது உறுதிப்பாடும் கொண்டிருந்தபோது அவர்களிலிருந்து தலைவர்களை நாம் தோற்றுவித்தோம். அவர்களோ நம் கட்டளையைக் கொண்டு வழிகாட்டிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் பொறுமையாக இருந்த பொழுது, நம்முடைய கட்டளையைக் கொண்டு நேர்வழி நடப்பவர்களான தலைவர்களையும் அவர்களிலிருந்து நாம் ஆக்கினோம், அவர்கள் நம்முடைய வசனங்களை உறுதி கொள்பவர்களாகவும் இருந்தனர்.
25
اِنَّ رَبَّكَ هُوَ یَفْصِلُ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் எ(வ்விஷயத்)தில் அபிப்பிராய பேதம் கொண்டார்களோ, (அதுபற்றி) கியாம நாளில் உம்முடைய இறைவன் நிச்சயமாக அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்வான்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களுக்குப் பின்னர் வழிகாட்டியாக ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனர்.) அவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றி மறுமை நாளில் உமது இறைவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பான்.
IFT
(இஸ்ராயீலின் வழித்தோன்றல்கள்) தமக்கிடையில் கருத்து வேறுபாடு கொண்டிருந்த விஷயங்களில் திண்ணமாக உம் இறைவனே மறுமைநாளில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எ(வ்விஷயத்)தில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்களோ அ(வ்விஷயத்)தில், மறுமை நாளில் நிச்சயமாக உமதிரட்சகன்_அவனே அவர்களுக்குகிடையில் தீர்ப்பளிப்பான்.
26
اَوَلَمْ یَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ یَمْشُوْنَ فِیْ مَسٰكِنِهِمْ ؕ اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ ؕ اَفَلَا یَسْمَعُوْنَ ۟
முஹம்மது ஜான்
இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும், அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும், இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா? நிச்சயமாக இதில் (தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கு) இவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னர் எத்தனையோ வகுப்பினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் வசித்திருந்த இடங்களின் மீதே இவர்கள் போய் வந்து கொண்டிருப்பதும் இவர்களுக்கு நேரான வழியைக் காட்டவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (இதற்கும்) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
IFT
இவர்களுக்கு முன்பு வாழ்ந்து சென்ற எத்தனையோ பல சமூகங்களை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம் (எனும் வரலாற்று நிகழ்ச்சியில்) இவர்களுக்கு எந்த வழிகாட்டுதலும் கிடைக்கவில்லையா, என்ன? அவர்கள் வசித்த அதே இடங்களில் இன்று இவர்கள் நடந்து திரிந்து கொண்டிருக்கின்றார்கள்! திண்ணமாக, இவற்றில் பெரும் சான்றுகள் உள்ளன. என்ன, இவர்கள் செவியுறுவதில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம், அவர்கள் வசித்திருந்த இடங்களில் (பிரயாணித்து) இவர்கள் நடக்கிறார்கள். (இவ்வாறு அவர்களின் குடியிருப்புத்தலங்கள் பாழடைந்து கிடப்பதைப்பார்த்து) இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? நிச்சயமாக இதில் அத்தாட்சிகளிருக்கின்றன, (இதற்கு) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?
27
اَوَلَمْ یَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَی الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ ؕ اَفَلَا یُبْصِرُوْنَ ۟
முஹம்மது ஜான்
அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் (இதை ஆய்ந்து) நோட்டமிட வேண்டாமா?
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக நாமே வறண்ட பூமிகளின் பக்கம் மழையின் மேகத்தை ஓட்டி (பொழியச் செய்து) அதன் மூலம் இவர்களும், இவர்களுடைய (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளும் புசிக்கக்கூடிய பயிர்களையும் வெளிப்படுத்துகிறோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? (இதைக்கூட) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?
IFT
மேலும், இவர்கள் (இக்காட்சியை ஒருபோதும்) பார்க்கவில்லையா, என்ன? வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் நீரை ஒலித்தோடச் செய்கின்றோம். அதே பூமியிலிருந்து பயிர்களை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களுடைய கால்நடைகளுக்கும் தீனி கிடைக்கின்றது; இவர்களும் உண்ணுகின்றார்கள்! இவர்களுக்கு எதுவும் புலப்படுவதில்லையா, என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாமே, வறண்ட பூமியின் பக்கம் மழையை இழுத்துவந்து, (பொழியச் செய்து,) பின்னர் அதன்மூலம் பயிர்களை நாம் வெளிப்படுத்துகின்றோம், இவர்களுடைய கால்நடைகளும், இவர்களும் அதிலிருந்து உண்ணுகிறார்கள் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதனை) அவர்கள் பார்க்க வேண்டாமா?
28
وَیَقُوْلُوْنَ مَتٰی هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (வாக்களிக்கப்பட்ட) அந்த வெற்றித் (தீர்ப்பு நாள்) எப்பொழுது (வரும்)?” என்று அவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
“(வாக்களிக்கப்பட்ட) தீர்ப்பு நாள் எப்பொழுது வரும்? நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் (அது வரும் காலத்தைக்) கூறுங்கள்'' எனக் கேட்கின்றனர்.
IFT
மேலும், இந்த மக்கள் கேட்கின்றனர்: “இந்தத் தீர்ப்பு எப்போது ஏற்படும்? நீங்கள் உண்மை கூறுபவர்களாயிருந்தால்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், “(வாக்களிக்கப்பட்ட) இந்த வெற்றி (நாள்) எப்பொழுது (வரும்)? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அது பற்றிக்கூறுங்கள்)” என அவர்கள் கேட்கின்றனர்.
29
قُلْ یَوْمَ الْفَتْحِ لَا یَنْفَعُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِیْمَانُهُمْ وَلَا هُمْ یُنْظَرُوْنَ ۟
முஹம்மது ஜான்
“அந்த வெற்றி(த் தீர்ப்பு) நாளின் போது நிராகரிப்போர், நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு பயன் அளிக்காது - அவர்களுக்குத் தவணையும் கொடுக்கப்பட மாட்டாது.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு) நீர் கூறுவீராக! “அந்தத் தீர்ப்பு நாளின்போது (இந்)நிராகரிப்பவர்கள் நம்பிக்கை கொள்வது அவர்களுக்கு (ஒரு) பயனும் அளிக்காது. (வேதனையைத் தாமதப்படுத்த) அவர்கள் தவணையும் கொடுக்கப்பட மாட்டார்கள்.”
IFT
இவர்களிடம் நீர் கூறும்: “தீர்ப்பு நாளன்று நம்பிக்கை கொள்வது, நிராகரித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எவ்விதப் பயனையும் அளிக்காது. மேலும், அவர்களுக்கு எவ்வித அவகாசமும் கொடுக்கப்படாது!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு) நீர் கூறுவீராக:” அந்த வெற்றி நாளின் பொழுது நிராகரிப்போர் விசுவாசங்கொள்வது, அவர்களுக்குப் பயனளிக்காது, அவர்கள் தவணை கொடுக்கப்படவுமாட்டார்கள்.
30
فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்ப்பீராக! நிச்சயமாக அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் தாம்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து (அந்நாளை) எதிர்பார்த்து இருப்பீராக. நிச்சயமாக அவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
IFT
எனவே, இவர்கள் போக்கிலேயே இவர்களை விட்டுவிடும்; மேலும், எதிர்பார்த்திரும்; இவர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கட்டும்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து விடுவீராக! (அந்நாளை) எதிர்ப்பார்த்துமிருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கிறவர்கள்தாம்!