அல்ஹம்து லில்லாஹ் - புகழ் எல்லாம் அல்லாஹ்வுக்கே உரியது. வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே (உரியன); மறுமையில் புகழ்யாவும் அவனுக்கே. மேலும் அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்) நன்கறிபவன்.
அப்துல் ஹமீது பாகவி
புகழனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே! வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்குச் சொந்தமானவைகளே! மறுமையிலும் எல்லா புகழும் அவனுக்குரியதே! அவன்தான் ஞானமுடையவன், அனைத்தையும் நன்கறிந்தவன்.
IFT
வானங்கள் மற்றும் பூமியிலுள்ள ஒவ்வொன்றுக்கும் உரிமையாளனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்! மேலும், மறுமையிலும்கூட புகழ் அவனுக்கே உரித்தானது. அவன் நுண்ணறிவாளனாகவும், யாவும் தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியதாகும். அவன் எத்தகையவனென்றால், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியதாகும். மறுமையிலும் சகல புகழும் அவனுக்கே உரியதாகும், மேலும், அவன் தீர்க்கமான அறிவுடையவன், (யாவையும்) நன்குணர்பவன்.
பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியேறுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதன் பால் உயருவதையும் (ஆகிய அனைத்தையும்) அவன் அறிகிறான். அவன் மிக்க அன்புடையவன், மிகவும் மன்னிப்பவன்.
அப்துல் ஹமீது பாகவி
பூமிக்குள் பதிகின்ற (வித்து போன்ற)வற்றையும், அதில் இருந்து (முளைத்து செடிகொடிகளாக) வெளிப்படுகின்றவற்றையும் வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், அதன் பக்கம் ஏறுகின்றவற்றையும் அவன் நன்கறிவான். அவன் மகா கருணையுடையவன் மிக்க மன்னிப்பவன்.
IFT
பூமியினுள் செல்பவற்றையும் அதிலிருந்து வெளிப்படுபவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும் அதில் ஏறுகின்றவற்றையும் ஆக எல்லாவற்றையும் அவன் நன்கறிகின்றான். அவன் தனிப்பெருங் கிருபையாளனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமிக்குள் நுழைகின்றதையும், அதிலிருந்து வெளிப்படுகின்றதையும், வானத்திலிருந்து இறங்குகின்றதையும், அதில் ஏறுகின்றதையும் அவன் அறிவான். மேலும், அவன் மிகக் கிருபையுடையவன், மிக்க மன்னிப்பவன்.
எனினும் நிராகரிப்பவர்கள்: “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(எனினும்) “மறுமை நமக்கு வராது'' என்று (இந்)நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். (நபியே!) கூறுவீராக: ‘‘ ஏன் வராது, மறைவானவை அனைத்தையும் அறிந்தவனான என் இறைவன் மீது சத்தியம்! கண்டிப்பாக அது உங்களிடம் வந்தே தீரும். அவன் அறிவை விட்டும் வானங்களிலோ பூமியிலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் தப்பிவிடாது. அணுவைவிட சிறியதோ அல்லது பெரியதோ (ஒவ்வொன்றும் ‘லவ்ஹுல் மஹ்ஃபூள்' என்னும்) தெளிவான குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை.''
IFT
“மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?” என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள். கூறுங்கள்: “மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் நிராகரிப்போர், “மறுமை நாள் நமக்கு (வரவே) வராது” என்று கூறுகின்றனர், (நபியே!) நீர் கூறுவீராக: “அவ்வாறல்ல! மறைவானவற்றை அறியக்கூடிய என் இரட்சகனின் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உங்களிடம் வந்தே தீரும். வானங்களிலோ, பூமியிலோ (உள்ளவற்றில்) ஓர் அணுவளவும் அவனை விட்டும் மறையாது; இன்னும், அதைவிட மிகச் சிறியதோ, மிகப்பெரியதோ (ஒவ்வொன்றும் லவ்ஹுல் மஹ்ஃபுள் என்னும்) தெளிவான புத்தகத்தில் இல்லாமலில்லை.”
ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது); அத்தகையவர்களுக்குத்தான் பாவமன்னிப்பும், கண்ணியமான உணவு (வசதியு)ம் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தவர்களுக்குக் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது). இத்தகையவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் (வாழ்க்கையும்) உண்டு.
IFT
மேலும், இந்த மறுமை வருவதுநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டு நற்கருமங்களையும் செய்தோருக்கு (அந்நாளில்) அவன் கூலி கொடுப்பதற்காக (அவ்வாறு அதில் பதியப்பட்டுள்ளது), அத்தகையோர்_ அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.
எவர்களுக்குக் கல்வி ஞானம் அளிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் உமக்கு உம்முடைய - இறைவனிடமிருந்து அருளப்பெற்ற (இவ்வேதத்)தை உண்மை என்பதையும், அது வல்லமை மிக்க, புகழுக்குரியவ(னான நாய)னின் நேர்வழியில் சேர்க்கிறது என்பதையும் காண்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) எவர்களுக்கு ஞானம் கொடுக்கப்பட்டதோ அவர்கள் உமக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தை, உமது இறைவனால் அருளப்பட்ட உண்மையான வேதம் என்றும்; அது அனைவரையும் மிகைத்த மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியை அறிவிக்கக்கூடியது என்றும் எண்ணுவார்கள்.
IFT
(நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இன்னும், (வேதக்)கல்வி கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர் உமதிரட்சகனிடமிருந்து உமக்கு இறக்கிவைக்கப்பட்ட (இவ்வேத)த்தை இதுவே உண்மை(யான வேதம்) என்றும், யாவரையும் மிகைத்த, மிக்க புகழுக்குரியவனின் நேரான வழியின்பால் இது வழிகாட்டும் என்றும் காண்கிறார்கள்.
ஆனால், நிராகரிக்கிறார்களே அவர்கள்: “நீங்கள் (இறந்து, மக்கித் தூளாகச்) சிதறடிக்கப்பட்ட பின், நீங்கள் ஒரு புதிய படைப்பாக இருப்பீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கும் மனிதரை நாங்கள் உங்களுக்குக் காண்பிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், நிராகரித்தவர்கள் (மற்றவர்களை நோக்கி) ‘‘நீங்கள் (இறந்து, மக்கி) அணுவணுவாகப் பிரிக்கப்பட்டதன் பின்னரும் நிச்சயமாக நீங்கள் புதிதாகப் படைக்கப்பட்டு விடுவீர்கள் என்று உங்களுக்கு (பயமுறுத்தி)க் கூறக்கூடிய ஒரு மனிதரை நாம் உங்களுக்கு அறிவிக்கவா'' என்று (பரிகாசமாகக்) கூறுகின்றனர்.
IFT
நிராகரிப்பாளர்கள் (மக்களிடம்) கூறுகின்றார்கள்: “(நீங்கள் மரணமாகி) உங்கள் உடல் அணு அணுவாய் சிதைந்து போய்விட்ட பிறகு நீங்கள் மீண்டும் புதிதாகப் படைக்கப்படுவீர்கள் என்று உங்களுக்குச் செய்தி அறிவிக்கும் ஒருவரை நாங்கள் உங்களுக்குக் காண்பித்துத் தரவா?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், நிராகரிக்கிறார்களே அவர்கள், (மற்றவர்களிடம்,) “நீங்கள் (இறந்து மக்கி) முற்றிலுமாக துண்டு துண்டாக ஆக்கப்பட்டுவிடுவீர்களானாலும், நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) புதிய படைப்பில் இருப்பீர்களென்று உங்களுக்குத் தெரிவிக்கும் ஒரு மனிதனை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?” என்று (பரிகாசமாகக்) கேட்கின்றனர்.
அன்றியும், இ(வ்வாறு கூறுகின்ற)வர் அல்லாஹ்வின் மீது “பொய்யை இட்டுக் கட்டுகிறாரா; அல்லது இவருக்கு பைத்தியமா?” (என்றும் கேட்கிறார்கள்.) அவ்வாறல்ல! மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் வேதனையிலும் வெகு தூரமான வழி கேட்டிலுமே இருக்கிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
என்ன, (இம்மனிதர்) ‘‘அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறாரோ அல்லது அவருக்குப் பைத்தியம்தான் பிடித்திருக்கிறதோ'' (என்று அவர்களிடம் கூறுகின்றனர்.) மாறாக. எவர்கள் மறுமையை நம்பவில்லையோ அவர்கள்தான் பெரும் வேதனையிலும், வெகு தூரமானதொரு வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
IFT
“இந்த மனிதர் அல்லாஹ்வின் பெயரால் பொய்யைப் புனைந்து கூறுகின்றாரா? அல்லது இவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கின்றதா என்பது புரியவில்லையே!” இல்லை, உண்மையில், மறுமையை நம்பாதவர்கள்தாம் வேதனைக்கு ஆளாகப் போகிறார்கள். மேலும், மிக மோசமாக வழிகெட்டுப் போனவர்களும் அவர்கள்தாம்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“அல்லாஹ்வின் மீது அவர் பொய்யை இட்டுக்கட்டுகிறாரா? அல்லது அவருக்குப் பைத்தியமா?” (என்றும் கூறுகின்றனர்) அல்ல! மறுமையை நம்பவில்லையே அவர்கள் தாம் (பெரும்) வேதனையிலும், வெகுதூரமான வழிகேட்டிலும் இருக்கின்றனர்.
வானத்திலும், பூமியிலும் அவர்களுக்கு முன்னாலுள்ளதையும் அவர்களுக்குப் பின்னாலுள்ளதையும் அவர்கள் பார்க்க வில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியினுள் சொருகி விடுவோம்; அல்லது வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு துண்டை விழச்செய்து (அவர்களை அழித்து) விடுவோம்; (அல்லாஹ்வையே) முன்னோக்கி நிற்கும் ஒவ்வோர் அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
வானத்திலும் பூமியிலும் அவர்களுக்கு முன்னும் பின்னும் இருப்பவற்றை அவர்கள் கவனிக்கவில்லையா? நாம் விரும்பினால் அவர்களைப் பூமிக்குள் சொருகிவிடுவோம் அல்லது வானத்திலிருந்து சில துண்டுகளை அவர்கள் மேல் எறிந்து (அவர்களை அழித்து) விடுவோம். (அல்லாஹ்வையே) நோக்கி நிற்கும் ஒவ்வொரு அடியானுக்கும் நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.
IFT
இவர்கள் தங்களுக்கு முன்னாலும் பின்னாலும் சூழ்ந்துள்ள வானத்தையும் பூமியையும் என்றுமே பார்த்ததில்லையா, என்ன? நாம் நாடினால் இவர்களைப் பூமிக்கடியில் ஆழ்த்தியிருப்போம். அல்லது வானத்தின் சில துண்டுகளை இவர்கள் மீது விழச் செய்திருப்போம். இறைவன் பக்கம் திரும்புகின்ற ஒவ்வோர் அடியானுக்கும் உண்மையில் இதில் ஒரு சான்று இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்திலும், பூமியிலும், அவர்களுக்கு முன்னிருப்பதையும், பின்னிருப்பதையும் அவர்கள் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமிக்குள் அழுந்தச்செய்துவிடுவோம், அல்லது வானத்திலிருந்து பல துண்டுகளை அவர்கள் மேல் விழச் செய்து (அவர்களை அழித்து) விடுவோம், நிச்சயமாக தவ்பாச்செய்து (அல்லாஹ்வின் பக்கமே) திரும்பும் ஒவ்வொரு அடியானுக்கும் இதில் ஓர் அத்தாட்சி இருக்கின்றது.
இன்னும், நிச்சயமாக நாம் தாவூதுக்கு நம் (மேன்மையான) அருளை வழங்கினோம்; “மலைகளே! (அவர் தஸ்பீஹு செய்யும் போது) அவருடன் (அத்துதியை) நீங்களும் எதிரொலியுங்கள்; பறவைகளே! (நீங்களும் அவ்வாறே செய்யுங்கள் என்றோம்;) மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே நாம் நம் புறத்திலிருந்து தாவூதுக்கு பெரும் அருள் புரிந்தோம். மலைகளே! பறவைகளே! ‘‘ நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி செய்யுங்கள்'' (என்றும் கட்டளையிட்டோம்). மேலும், அவருக்கு இரும்பை (மெழுகைப் போல்) மென்மையாக்கித் தந்தோம்.
IFT
நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பெரும் அருட்பேற்றினை வழங்கியிருந்தோம். (நாம் ஆணையிட்டோம்:) “மலைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் துதி பாடுங்கள். இவ்வாறே பறவைகளுக்கும் (நாம் கட்டளையிட்டிருந்தோம்.) நாம் அவருக்காக இரும்பை மென்மையாக்கிக் கொடுத்தோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் திட்டமாக நாம் தாவூதுக்கு நம்மிடமிருந்து பேரருளைக் கொடுத்தோம், “மலைகளே! நீங்கள் அவருடன் (சேர்ந்து) துதி(யை எதிரொலிக்கச் செய்)யுங்கள்” (என்று கூறினோம்), இன்னும் பறவைகளையும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அன்றியும், அவருக்கு இரும்பை மிருதுவாக்கியிருந்தோம்.
“வலுப்பமுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பலமுள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள் செய்வீராக! நீர் செய்பவற்றை உற்று நோக்குபவனாக இருக்கின்றேன்” (என்றும் சொன்னோம்.)
அப்துல் ஹமீது பாகவி
மேலும், (சங்கிலி) வளையங்களை செய்து (அவற்றை முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யவும் (என்று கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) ‘‘நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்'' (என்றோம்).
IFT
“போர்க்கவசங்கள் செய்வீராக! அவற்றின் வளையங்களைச் சரியான அளவில் அமைப்பீராக” என்ற கட்டளையுடன்! (தாவூதுடைய வழித்தோன்றல்களே!) நற்செயல்கள் புரியுங்கள்; நீங்கள் செய்வதனைத்தையும் நான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும்) “நிறைவான போர்க்கவசங்களைச் செய்வீராக! அவற்றின் வளையங்களில் (அளவை) ஒழுங்கு படுத்துவீராக”. நீங்கள் நற்கருமங்களையே செய்துகொண்டிருங்கள். நிச்சயமாக நான் நீங்கள் செய்பவற்றை பார்க்கிறவன்” (என்றும் கூறினோம்).
(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது; மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. இன்னும், செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) அவர்களில் எவன் நம் கட்டளையைப் புறக்கணிக்கிறானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).
IFT
மேலும், நாம் ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அதனுடைய காலைப் புறப்பாடு ஒரு மாத தூரம் வரையிலாகும்; மாலைப் புறப்பாடும் ஒரு மாத தூரம் வரையிலாகும். நாம் அவருக்காக உருகிய செம்பின் ஊற்றை ஓடச் செய்தோம். மேலும், ஜின்களையும் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அவைகளோ தம் இறைவனின் கட்டளைப்படி பணிபுரிந்து கொண்டிருந்தன. அவற்றில் எது நம்முடைய கட்டளையை விட்டும் பிறழ்கின்றதோ அதனைக் கொழுந்துவிட்டெரியும் நெருப்பின் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்வோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், ஸுலைமானுக்குக் காற்றை_(நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அதன் காலை பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது, மேலும், நாம் அவருக்காக செம்பு ஊற்றை (தண்ணீரைப் போன்று உருகி) ஓடச் செய்தோம், தன் இரட்சகனுடைய அனுமதிப்படி அவருக்குமுன் வேலை செய்யக்கூடிய ஜின்களையும் (நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்தோம்,) அவர்களில் எவர் நம்முடைய கட்டளையை விட்டும் (புறக்கணித்துத்) திரும்புகின்றாரோ அவரை, கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையிலிருந்து சுவைக்குமாறு நாம் செய்வோம் (என்று கூறினோம்).
அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. “தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே” (என்று கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) ‘தேகு' (சமையல் பாத்திரங்)களையும் அவை செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) ‘‘தாவூதுடைய சந்ததிகளே ! இவற்றுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்'' (என்று கட்டளையிட்டோம்). எனினும், என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமே ஆவார்கள்.
IFT
அந்த ஜின்கள் ஸுலைமானுக்காக அவர் விரும்பியவை அனைத்தையும் உயர்ந்த மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகத்தையொத்த பெரிய தட்டுகளையும், இருப்பிடத்தை விட்டகலாத பெரும் அண்டாக்களையும் உருவாக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தன தாவூதுடைய வழித்தோன்றல்களே! நன்றி செலுத்தும் வகையில் செயலாற்றுங்கள். என்னுடைய அடிமைகளில் மிகச் சிலர்தான் நன்றி செலுத்துவோராயிருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவைகள் (ஸுலைமானாகியா) அவர் நாடிய, மிஹ்ராபுகளை (பள்ளிகள், கோட்டைகள் உயர்ந்த குடியிருப்புத்தலங்கள் ஆகியவற்றை)யும், சிற்பங்களையும், (பெரிய பெரிய தண்ணீர்த்) தடாகங்களைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத (நிலையான) பெரிய (சமையல்) பாத்திரங்களையும் அவருக்காகச் செய்து கொண்டிருந்தன: (ஆகவே,) “தாவூதுடைய சந்ததிகளே! (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதற்காக செயல்படுங்கள், மேலும், என்னுடைய அடியார்களில் நன்றிசெலுத்துவோர் (வெகு) சொற்பமேயாவர்” (என்று கூறினோம்).
அவர் (ஸுலைமான்) மீது நாம் மரணத்தை விதித்த போது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் (சாய்ந்திருந்த) தடியை அரித்து விட்ட நிலத்தின் பூச்சி (கரையானைத்) தவிர வேறெதுவும் அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை; அவர் கீழே விழவே; “தாங்கள் மறைவான விஷயங்களை அறிந்திருக்கக் கூடுமானால் (கடின உழைப்பாகிய) இழிவுதரும் வேதனையில் தாங்கள் தரி பட்டிருந்திருக்க வேண்டியதில்லை” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிந்தது.
அப்துல் ஹமீது பாகவி
ஸுலைமானுக்கு நாம் மரணத்தை விதித்தபொழுது அவர் இறந்து விட்டார் என்பதை, அவர் சாய்ந்திருந்த தடியை அரித்து விட்ட பூச்சியைத் தவிர (மற்ற எவரும்) அந்த ஜின்களுக்கு அறிவிக்கவில்லை. (அவர் சாய்ந்திருந்த தடியைக் கரையான் பூச்சிகள் அரித்து விட்டன. ஆகவே, அதன் மீது சாய்ந்திருந்த ஸுலைமான் கீழே விழுந்துவிட்டார்.) அவர் கீழே விழவே (வேலை செய்து கொண்டிருந்த) அந்த ஜின்களுக்கு தாங்கள் மறைவான விஷயங்களை அறியக் கூடுமாக இருந்தால் (இரவு பகலாக உழைக்க வேண்டிய) இழிவு தரும் இவ்வேதனையில் தங்கி இருக்க மாட்டோம் என்று தெளிவாகத் தெரிந்தது.
IFT
பிறகு நாம் ஸுலைமான் மீது மரணத்தை விதித்தபோது, அவருடைய கைத்தடியைத் தின்றுகொண்டிருந்த கரையான்களைத் தவிர வேறெதுவும் அவருடைய மரணத்தைப் பற்றி அந்த ஜின்களுக்கு அறிவித்துக்கொடுக்கவில்லை. இவ்வாறு ஸுலைமான் கீழே சாய்ந்ததும் ஜின்களுக்குப் புலப்பட்டது. மறைவானவற்றை அவர்கள் அறிபவர்களாய் இருந்திருந்தால் இழிவுதரும் இவ்வேதனையில் அவர்கள் சிக்கியிருந்திருக்க மாட்டார்களே!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்மீது நாம் மரணத்தை விதியாக்கிய பொழுது, அவருடைய மரணத்தைப் பற்றி (அவர் சாய்ந்திருந்த) அவருடைய தடியை அரித்துவிட்ட கறையானைத் தவிர, (வேறெதுவும்) அ(ந்த ஜின் இனத்த)வர்களுக்கு அறிவிக்கவில்லை, பின்னர், அவர் கீழே விழவே, “மறைவானதை அறியக்கூடியவர்களாக தாங்கள் இருந்திருந்தால் இழிவான வேதனையில் தாங்கள் தரிப்பட்டிருக்க வேண்டியதில்லை!” என்று ஜின்கள் தெளிவாகத் தெரிந்துகொண்டன.
நிச்சயமாக ஸபா நாட்டினருக்கு, அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஓர் அத்தாட்சி இருந்தது. (அதன்) வலப்புறத்திலும் இடப்புறத்திலும் இரண்டு சோலைகள் இருந்தன; “உங்கள் இறைவன் அளித்துள்ள ஆகாரத்திலிருந்து புசியுங்கள்; அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள். (அது மணமுள்ள) வளமான நகரம்; இன்னும் (அவன்) மன்னிப்பளிக்கும் இறைவன்” (என்று அவர்களுக்குக் கூறப்பட்டது).
அப்துல் ஹமீது பாகவி
மெய்யாகவே ‘ஸபா'வாசிகள் வசித்திருந்த இடத்தில் அவர்களுக்கு நல்லதோர் அத்தாட்சியிருந்தது. (அதன் வழியாகச் செல்பவர்களுக்கு) வலப்புறமாகவும் இடப்புறமாகவும் இரு சோலைகள் இருந்தன. ‘‘ உங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்தவற்றைப் புசியுங்கள்; அவனுக்கு நன்றி செலுத்துங்கள். (இம்மையில்) வளமான நகரமும், (மறுமையில்) மிக்க மன்னிப்புடைய இறைவனும் (உங்களுக்கு) உண்டு'' (எனவும் கூறப்பட்டது).
IFT
ஸபஃ சமுதாயத்தினர்க்கு அவர்கள் வசித்த இடத்திலேயே ஒரு சான்று இருந்தது. வலப்புறமும் இடப்புறமும் இரு தோட்டங்கள் இருந்தன. உண்ணுங்கள், உங்கள் இறைவன் வழங்கிய உணவை! மேலும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். நாடோ நன்கு தூய்மையாக இருக்கிறது. படைத்த இறைவனோ பெரும் மன்னிப்பாளனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
திட்டமாக ஸபஉ (என்னும் ஊர்) வாசிகளுக்கு அவர்கள் வசித்திருந்த இடங்களில் ஒரு (நல்ல) அத்தாட்சியிருந்தது, (அதுவே) வலப் புறத்திலும், இடப் புறத்திலும் (இருந்த) இரு சோலைகள். “உங்கள் இரட்சகனின் உணவிலிருந்து உண்ணுங்கள், அவனுக்கு நன்றியும் செலுத்தி வாருங்கள், பரிசுத்தமான நகரம், மிக்க மன்னிப்பளிக்கும் இரட்சகன்” (எனவும் கூறப்பட்டது).
ஆனால் அவர்கள் (இப்போதனையைப்) புறக்கணித்தார்கள்; ஆகவே, அல் அரிம் (என்னும் பெரும் அணையை உடைக்கும்) கடும் பிரவாகத்தை அவர்கள் மீது அனுப்பினோம், இன்னும் (சுவை மிக்க கனிகளைக் கொண்ட) அவர்களுடைய இரு தோப்புகளை கசப்பும் புளிப்புமுள்ள பழங்களுடைய மரங்களும், சில இலந்தை மரங்களும் உடைய இரு தோட்டங்களாக மாற்றினோம்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் (அதைப்) புறக்கணித்து(ப் பாவத்தில் ஆழ்ந்து) விட்டனர். (ஆகவே, அவர்கள் கட்டியிருந்த மகத்தானதொரு அணையை உடைக்கக்கூடிய) பெரும் வெள்ளத்தை அவர்களுக்குக் கேடாக அனுப்பிவைத்தோம். அவர்களுடைய (உன்னதமான கனிகளையுடைய) இரு சோலைகளைக் கசப்பும், புளிப்புமுள்ள காய்களையுடைய மரங்களாலும், சில இலந்தை மரங்களாலும் நிரம்பிய தோப்புகளாக மாற்றிவிட்டோம்.
IFT
ஆயினும், அவர்கள் புறக்கணித்துவிட்டார்கள். ஆகவே, அவர்கள் மீது அணை உடைத்து ஓடும் வெள்ளத்தை நாம் அனுப்பினோம். மேலும், அவர்களுடைய (முந்தைய) இரு தோட்டங்களுக்குப் பகரமாக வேறு இரு தோட்டங்களைக் கொடுத்தோம். அவற்றில் கசப்பான காய்களும், காற்றாடி மரங்களும் இன்னும் மிகச் சில இலந்தை மரங்களுமே இருந்தன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், அவர்கள் (நம்மைப்) புறக்கணித்துவிட்டனர், (ஆகவே, “மஆரிப்” அணையை உடைக்கக்கூடிய) பெரு வெள்ளத்தை அவர்கள் மீது நாம் அனுப்பி வைத்தோம்; அவர்களுடைய (சுவைமிகுந்த கனிகளையுடைய) இரு சோலைகளை, கசப்பும் புளிப்புமுள்ள பழங்களையுடைய மரங்களாகவும், சில இலந்தை மரங்களையும் உடைய இரு சோலைகளாகவும் நாம் மாற்றிவிட்டோம்.
அவர்கள் நிராகரித்ததின் காரணமாக அவர்களுக்கு இக்கூலியை, நாம் கொடுத்தோம். (நன்றி மறந்து) நிராகரித்தோருக்கன்றி வேறெவருக்கும் நாம் (இத்தகைய) கூலியைக் கொடுப்போமா?
அப்துல் ஹமீது பாகவி
நம் நன்றியை அவர்கள் மறந்ததற்கு இதை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம். நன்றி கெட்டவர்களுக்கே தவிர (மற்றெவருக்கும் இத்தகைய) கூலியை நாம் கொடுப்போமா?
IFT
இதுவே அவர்கள் நிராகரித்ததற்குப் பகரமாக நாம் வழங்கிய கூலியாகும். மேலும், நன்றி கொல்லும் மனிதர்களுக்கே அன்றி வேறெவருக்கும் நாம் இத்தகைய கூலி கொடுப்பதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் நிராகரித்ததன் காரணமாக, இதனை நாம் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தோம், நிராகரிப்போருக்கே தவிர, (இதுபோன்ற) கூலியை நாம் கொடுப்போமா?
இன்னும், அவர்களுக்கிடையிலும், நாம் பரக்கத்து (அவற்றில்) செய்திருக்கிறோமே அந்த ஊர்களுக்கிடையிலும் (வழியில்) தெரியும் பல ஊர்களையும் நாம் உண்டாக்கி அவற்றில் (போக்குவரத்து(ப் பாதைகளையு)ம் அமைத்தோம்; “அவற்றில் இரவுகளிலும், பகல்களிலும் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்).
அப்துல் ஹமீது பாகவி
அவர்களு(டைய ஊரு)க்கும் நாம் அருள்புரிந்த (சிரியாவிலுள்ள செழிப்பான) ஊர்களுக்கும் இடையில் தொடர்ச்சியாகப் பல கிராமங்களையும் உண்டுபண்ணி அவற்றில் பாதைகளையும் அமைத்து, ‘‘ இரவு பகல் எந்த நேரத்திலும் அச்சமற்றவர்களாக அதில் பிரயாணம் செய்யுங்கள்'' (என்று கூறியிருந்தோம்).
IFT
மேலும், அவர்களுக்கும் நாம் அருட்பேறுகள் வழங்கியிருந்த ஊர்களுக்குமிடையில் எல்லோருக்கும் தெரியும்படியான ஊர்களை அமைத்திருந்தோம். அவற்றில் பயணத்தூரத்தை அளவிட்டு நிர்ணயித்திருந்தோம். “பயணம் செய்யுங்கள் இவ்வழிகளினூடே; இரவு பகல் முழுவதும் அச்சமற்றவர்களாய்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களுக்கிடையேயும், நாம் பரக்கத்துச் செய்திருந்த ஊர்களுக்கிடையேயும் வெளிப்படையாகத் தென்படக்கூடிய பல ஊர்களையும் ஆக்கி, அவைகளில் பிரயாணத்தை நாம் அமைத்தோம். “இரவுகளிலும், பகல்களிலும் அவற்றில் அச்சமற்றவர்களாகப் பிரயாணம் செய்யுங்கள்” (என்று கூறினோம்.)
ஆனால், அவர்கள் “எங்கள் இறைவா! எங்களுடைய பிரயாண(ம் செய்யும் இட)ங்களுக்கு இடையேயுள்ள தூரத்தை அதிகமாக்குவாயாக!” என்று வேண்டித் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டார்கள்; ஆகவே அவர்களை (பழங்) கதைகளாக ஆக்கி விட்டோம் இன்னும் அவர்களை(ப் பல இடங்களில்) சிதறிப்போகும் படியாய் சிதற வைத்தோம்; நிச்சயமாக இதில் பொறுமையாளர் நன்றி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன.
அப்துல் ஹமீது பாகவி
ஆனால், அவர்கள் (இந்த நன்றியைப் புறக்கணித்து ‘‘தொடர்ச்சியாக ஊர்கள் இருப்பது எங்கள் பயணத்திற்கு இன்பம் அளிக்கவில்லை.) எங்கள் இறைவனே! எங்கள் பயணங்கள் நெடுந்தூரமாகும்படிச் செய்(வதற்காக மத்தியில் தொடர்ச்சியாக உள்ள இக்கிராமங்களை அழித்து விடு)வாயாக!'' என்று பிரார்த்தித்துத் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர். ஆகவே, (அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து) அவர்களையும் பல இடங்களுக்குச் சிதறடித்துப் பலரும் (இழிவாகப்) பேசப்படக்கூடிய கதைகளாக்கிவிட்டோம். பொறுமையுடையவர்கள், நன்றி செலுத்துபவர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன.
IFT
ஆயினும், அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவனே! எங்களின் பயணத் தூரத்தை நீளமாக்கித் தருவாயாக!” அவர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்தார்கள். இறுதியில் அவர்களை நாம் வெறும் பழங்கதைகளாக்கி விட்டோம். அவர்களை முற்றிலும் சின்னாபின்னமாக்கிச் சிதறடித்து விட்டோம். ஒவ்வொரு பொறுமைசாலிக்கும் நன்றி உடையவர்க்கும் இதில் திண்ணமாக சான்றுகள் இருக்கின்றன.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆனால், அவர்கள் “எங்கள் இரட்சகனே! எங்கள் யாத்திரைகளை நெடுந்தூரமாகும்படி செய்வாயாக! என்று கூறி, தமக்குத் தாமே அவர்கள் அநியாயம் செய்து கொண்டனர், ஆகவே அவர்களை(ப்பற்றி அதிசயமாக ஜனங்கள் பேசும்) செய்திகளாக்கிவிட்டோம். இன்னும் அவர்களை (பல ஊர்களில்) சிதறடித்து(ப்பிரித்து) விட்டோம், பொறுமையுடையவர், நன்றி செலுத்துபவர் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் (பல) படிப்பினைகள் இருக்கின்றன.
அன்றியும் (தன் வழிக்கு வருவார்கள் என்று) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை நிச்சயமாக அவன் உண்மையாக்கினான்; ஆகவே, முஃமின்களிலுள்ள கூட்டத்தார் தவிர, (மற்றையோர்) அவனையே பின் பற்றினார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக (அவர்கள் தன்னைப் பின்பற்றுவார்களென்று) இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை உண்மை என்றே அவன் கண்டு கொண்டான். ஆகவே, நம்பிக்கை கொண்ட சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் அவனையே பின்பற்றினார்கள்.
IFT
அவர்களின் விவகாரத்தில் இப்லீஸ் தன் எண்ணம் சரியாக நிறைவேறக் கண்டான். மேலும், அவர்கள் அவனையே பின்பற்றினார்கள், இறைநம்பிக்கையாளர்களின் ஒரு சிறு பிரிவினரைத் தவிர!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக (ஸபஉ வாசிகளான) அவர்களைப் பற்றி இப்லீஸ் எண்ணிய எண்ணத்தை அவன் உண்மை ஆக்கிக்கொண்டான், ஆகவே, விசுவாசங்கொண்ட ஒரு பிரிவினரைத் தவிர, (மற்றவர்கள்) அவனைப் பின்பற்றினர்.
எனினும் அவர்கள் மீது அவனுக்கு யாதோர் அதிகாரமுமில்லை - ஆயினும் மறுமையை நம்புகிறவர்களை அதனைப்பற்றி சந்தேகத்திலிருப்போரை விட்டும் நாம் அறி(வித்திடு)வற்காகவே (இது நடந்தது); மேலும் உம்முடைய இறைவன் அனைத்துப் பொருட்களையும் பாது காப்போனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்களை நிர்ப்பந்திக்க அவனுக்கு ஒரு அதிகாரமும் இல்லை. ஆயினும், மறுமையை நம்பாத அவர்களில் (மறுமையை) நம்புபவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே இவ்வாறு நடைபெற்றது. உம் இறைவனே எல்லா பொருள்களையும் பாதுகாப்பவன் ஆவான்.
IFT
இப்லீசுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இருக்கவில்லை. ஆனால் (இதெல்லாம் நடந்தது) மறுமையை நம்புகின்றவர் யார், அதைப்பற்றி சந்தேகப்படுகின்றவர் யார் என்பதை நாம் கண்டறிந்து கொள்வதற்காகத்தான்! உம் இறைவன் ஒவ்வொன்றையும் கண்காணிக்கக்கூடியவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அவர்கள் மீது அவனுக்கு எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை_ ஆயினும், மறுமையை நம்பாது அவர்களில் சந்தேகத்திலிருப் போரிலிருந்து (மறுமையை) நம்புவர் எவர் என்பதை நாம் தெளிவாக அறி(வித்து விடு)வதற்காகவே, (இது நடந்தது.) இன்னும், உமதிரட்சகன் ஒவ்வொரு பொருளையும் பாதுகாப்பவன்.
“அல்லாஹ்வையன்றி எவரை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ அவர்களை அழையுங்கள்; வானங்களிலோ, இன்னும் பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரமில்லை - அவற்றில் இவர்களுக்கு எத்தகைய பங்கும் இல்லை - இன்னும் அவனுக்கு உதவியாளர்களும் அவர்களில் யாருமில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் (தெய்வங்களென) எண்ணிக் கொண்டீர்களோ அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள். வானங்களிலோ பூமியிலோ அவர்களுக்கு ஓர் அணுவளவும் அதிகாரம் இல்லை. மேலும், அவற்றை படைப்பதில் அவர்களுக்கு எத்தகைய சம்பந்தமும் இல்லை. (அவற்றை படைப்பதில்) அவை அவனுக்கு உதவி செய்யவுமில்லை.
IFT
(நபியே, இந்த இணைவைப்பாளர்களிடம்) கூறும்: “அல்லாஹ்வை விடுத்து உங்களின் கடவுளர்களாக நீங்கள் யாரைக் கருதுகின்றீர்களோ அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் வானங்களிலோ பூமியிலோ உள்ள அணுவளவு பொருளுக்கும் உரிமையுடையவர்களல்லர். வானம் மற்றும் பூமியின் உடைமையில் அவர்கள் பங்காளியாகவும் இல்லை. அவர்களில் யாரும் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாயும் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வையன்றி, நீங்கள் (கடவுள்களெனத் தவறாக) எண்ணிகொண்டீர்களே அவர்களை, நீங்கள் அழைத்துப் பாருங்கள், வானங்களிலோ, பூமியிலோ அவர்கள் ஓர் அணுவளவையும் சொந்தமாக்கிக் கொள்ளமாட்டார்கள், அவ்விரண்டிலும், அவர்களுக்கு எத்தகைய கூட்டுமில்லை, (இதில்) அவனுக்கு உதவியாளரும் அவர்களில் யாருமில்லை.
அன்றியும், அவன் எவருக்கு அனுமதி கொடுக்கிறானோ அவருக்குத் தவிர, அவனிடத்தில் எந்த பரிந்துரையும் பயனளிக்காது; எனவே (நியாய விசாரணைக்கு நிற்கும்) அவர்களின் இருதயங்களிலிருந்து திடுக்கம் நீக்கப்படுமானால் “உங்கள் இறைவன் என்ன கூறினான்” என்று கேட்பார்கள். “உண்மையானதையே! மேலும், அவனே மிக்க உயர்ந்தவன் மகாப்பெரியவன்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவனுடைய அனுமதி பெற்ற (வான)வர்களைத் தவிர மற்றவர்கள் அவனிடத்தில் பரிந்து பேசுவதும் பயனளிக்காது. (அல்லாஹ்வுடைய ஒரு கட்டளை பிறக்கும் சமயத்தில் அவர்கள் பயந்து நடுங்குகின்றனர்.) அவர்களுடைய உள்ளத்தில் இருந்து நடுக்கம் நீங்கியதும் (அவர்களில் ஒருவர் மற்றவர்களை நோக்கி) ‘‘ உங்கள் இறைவன் என்ன கட்டளையிட்டான்?'' என்று கேட்பார்கள். அதற்கு மற்றவர்கள் ‘‘ (இடவேண்டிய) நியாயமான கட்டளையையே இட்டான்; அவனோ மிக்க மேலானவன், மிகப் பெரியவன் ஆவான்'' என்று கூறுவார்கள்.
IFT
மேலும், அல்லாஹ்விடத்தில் எந்த ஒரு பரிந்துரையும் யாருக்காகவும் பயனளிக்க முடியாது யாருக்கு அல்லாஹ் பரிந்துரை வழங்க அனுமதி தந்திருக்கின்றானோ அவரைத்தவிர! இவ்வாறு மக்களுடைய உள்ளங்களிலிருந்து அச்சம் அகலும்போது (பரிந்துரைப்பவர்களிடம்) “உங்களுடைய இறைவன் என்ன பதிலுரைத்தான்?” என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, “சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனாகவும் மாபெரியவனாகவும் இருக்கின்றான்” என்று கூறுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் யாருக்கு அவன் அனுமதி அழித்தானோ அவருக்குத் தவிர அவனிடத்தில் பரிந்துரை பயனளிக்காது, முடிவாக அவர்களுடைய இதயங்களிலிருந்து நடுக்கம் நீக்கப்படுமானால், (அவர்களில் ஒருவர் மற்றவர்களிடம்,) உங்கள் இரட்சகன் என்ன கூறினான்?” என்று கேட்பார்கள். (அதற்கு மற்றவர்கள்,) “உண்மையையே கூறினான். அவனோ மிக்க உயர்ந்தவன், மிகப்பெரியவன்” என்று கூறுவார்கள்.
“வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவு (வசதிகளை) அளிப்பவன் யார்?” என்று (நபியே!) நீர் கேளும்; “அல்லாஹ்தான்! இன்னும் நிச்சயமாக, நாங்களா அல்லது நீங்களா நேர்வழியில் அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவர்கள்” என்றும் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! நிராகரிக்கும் இவர்களை நோக்கி) ‘‘வானத்தில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?'' என்று கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன?) ‘‘அல்லாஹ்தான்'' என்று (நீரே) கூறி ‘‘மெய்யாகவே நேரான வழியில் இருப்பவர் அல்லது பகிரங்கமான தவறான வழியில் இருப்பவர் நீங்களா அல்லது நாமா?'' என்றும் கேட்பீராக.
IFT
(நபியே,) இவர்களிடம் கேளும்: “வானங்கள் மற்றும் பூமியிலிருந்து உங்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பவன் யார்?” கூறும்: “அல்லாஹ்தானே!” இப்போது திட்டவட்டமாக நம் இருவரில் நாமோ அல்லது நீங்களோ யாராவது ஒருவர்தான் நேர்வழியில் இருக்கிறோம். அல்லது வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்திருக்கின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) “வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்?” என்று (நிராகரிப்போரிடம்) கேட்பீராக! (அதற்கு பதிலாக) “அல்லாஹ்தான் என்று கூறுவீராக! இன்னும், நேர் வழியின் மீது, அல்லது பகிரங்கமான வழிகேட்டில் இருப்பது நிச்சயமாக நாங்களா? அல்லது நீங்களா? (என்றும் கேட்பீராக!)
“நாங்கள் செய்த குற்றம் குறித்து நீங்கள் வினவப்படமாட்டீர்கள்; நீங்கள் செய்தவை குறித்து நாங்கள் வினவப்பட மாட்டோம்” என்றும் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘நாங்கள் செய்யும் குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்; (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் கேட்கப்பட மாட்டோம்''
IFT
(இவர்களிடம்) கூறும்: “நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி உங்களிடம் கேட்கப்பட மாட்டாது. நீங்கள் செய்து கொண்டிருப்பவை பற்றி எங்களிடம் கேட்கப்பட மாட்டாது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக. ”நாங்கள் செய்த குற்றங்களைப் பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள், (அவ்வாறே) நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்களும் கேட்கப்படமாட்டோம்.”
“நம்முடைய இறைவன் நம் யாவரையும் ஒன்று சேர்ப்பான்; பின்னர் நமக்கிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாகத்) தீர்ப்பளிப்பான்; இன்னும் அவன் மேலான தீர்ப்பளிப்பவன், (யாவற்றையும்) நன்கறிபவன்” என்றும் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘முடிவில் (மறுமை நாளில்) நமது இறைவன் நம் அனைவரையும் ஒன்று சேர்த்து, பிறகு நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான். அவன் தீர்ப்பளிப்பதில் மிக்க மேலானவனும் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஆவான்.''
IFT
கூறும்: “நம்முடைய அதிபதி நம்மை ஒன்று கூட்டுவான். பிறகு நம்மிடையே சரியாகத் தீர்ப்பு வழங்குவான். அவனோ யாவற்றையும் அறிந்திருக்கின்ற ஆற்றல் மிக்க தீர்ப்பாளனாவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும்) நீர் கூறுவீராக: “(மறுமை நாளில்) எங்களுடைய இரட்சகன் நமக்கிடையில் ஒன்று சேர்ப்பான், பின்னர் நமக்கிடையில் நீதமாகவே தீர்ப்பளிப்பான், இன்னும் அவனே தீர்ப்பளிப்பவன், (யாவையும்) நன்கறிகிறவன்.
“அவனுக்கு இணையானவர்களென நீங்கள் சேர்த்தீர்களே அவர்களை எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! (அவனுக்கு எவருமே இணையில்லை.) அவனோ அல்லாஹ்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கோன்” என்றும் சொல்லும்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ (சிலை வணங்கிகளே) அவனுக்கு இணைதெய்வங்களை நீங்கள் ஏற்படுத்தினீர்களே அவற்றைப்பற்றி எனக்கு கூறுங்கள்'' அவ்வாறு (எதுவும் அவனுக்கு இணை) இல்லை. மாறாக, அவனோ அனைவரையும் மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆகிய (ஒரே இறைவனான) அல்லாஹ் ஆவான். (ஆகவே அவனுக்கு அறவே இணை துணை இல்லை)'' என்று (நபியே!) கூறுவீராக.
IFT
(இவர்களிடம்) கூறும்: “நீங்கள் எவர்களை அவனோடு இணையானவர்களாய்ச் சேர்த்து வைத்திருக்கின்றீர்களோ அவர்களை எனக்குக் கொஞ்சம் காண்பியுங்களேன்!” ஒருபோதும் முடியாது! உண்மையில் யாவற்றையும் மிகைத்தோனும், நுண்ணறிவாளனும் அந்த அல்லாஹ் ஒருவன்தான்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அன்றி) “அவனுக்கு இணையானவர்கள் என(க் கூறி) நீங்கள் அவனுடன் சேர்த்து வைத்தீர்களே அவர்களை நீங்கள் எனக்குக் காண்பியுங்கள்! அவ்வாறில்லை! மாறாக, அவன்தான் அல்லாஹ்! யாவரையும் மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்” என்று கூறுவீராக!
இன்னும், (நபியே!) நாம் உம்மை மனித குலம் முழுமைக்கும் நன்மாராயங் கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே யன்றி (வேறெவ்வாரும்) அனுப்பவில்லை; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நாம் உம்மை (இவ்வுலகில் உள்ள) எல்லா மனிதர்களுக்குமே நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்ளவில்லை.
IFT
மேலும், (நபியே!) நாம் உங்களை மனிதகுலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும் எச்சரிக்கை செய்பவராகவும்தான் அனுப்பிவைத்திருக்கின்றோம். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (நபியே!) உம்மை மனிதர்கள் அனைவருக்கும் நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமேயன்றி நாம் அனுப்பவில்லை. எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்துகொள்ளமாட்டர்கள்.
“(அந்த வாக்கு நிறைவேறுவதற்கு) உங்களுக்கு ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டீர்கள், முந்தவும் மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு நீர் கூறுவீராக: ‘‘உங்களுக்காக ஒரு நாள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவுமாட்டீர்கள்; முந்தவுமாட்டீர்கள்.''
IFT
நீர் கூறும்: “உங்களுக்காக எத்தகைய ஒரு நாள் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது எனில், அதன் வருகையை ஒரு நிமிடம் பிற்படுத்தவும் உங்களால் முடியாது; ஒரு நிமிடம் முற்படுத்தவும் முடியாது.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதற்கு நீர் கூறுவீராக: “உங்களுக்காக ஒரு நாளின் தவணையிருக்கிறது, அதிலிருந்து நீங்கள் ஒரு நாழிகை பிந்தவும்மாட்டீர்கள், முந்தவும்மாட்டீர்கள்
“இந்தக் குர்ஆனையும், இதற்கு முன்னுள்ளதையும் நிச்சயமாக நாங்கள் நம்பமாட்டோம்” என்று காஃபிரானவர்கள் கூறுகிறார்கள்; இந்த அநியாயக் காரார்கள் தங்கள் இறைவனிடம் நிறுத்தப்படும் போது நீர் பார்ப்பீரானால் அவர்களில் சிலர் சிலர் மீது பேச்சைத் திருப்பி பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்கள் பெருமையைத் தேடிக் கொண்டிருந்தோரை நோக்கி, “நீங்கள் இல்லாதிருந்திருப்பின், நிச்சயமாக நாங்கள் முஃமின்களாகியிருப்போம்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்).
IFT
இந்நிராகரிப்பாளர்கள் (உம்மிடம்) கூறுகின்றார்கள்: “நாங்கள் ஒருபோதும் இந்தக் குர்ஆனையும் நம்ப மாட்டோம்; இதற்கு முன்பு வந்திருந்த எந்த வேதத்தையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” அந்தோ! கொடுமை புரியும் இவர்கள் தம்முடைய இறைவனின் திருமுன் நிறுத்தப்படும்போது இவர்களின் நிலையை நீர் பார்க்க வேண்டுமே! (அவ்வேளை) இவர்கள் ஒருவர் மற்றவர் மீது குற்றம் சுமத்திக்கொண்டிருப்பார்கள். (உலகில்) தங்களைப் பெரியவர்களாய்க் கருதிக்கொண்டிருந்தவர்களை நோக்கி ஒடுக்கப்பட்டிருந்தவர்கள் கூறுவார்கள்: “நீங்கள் இல்லாதிருந்தால் நாங்கள் இறைநம்பிக்கையாளர்களாய் இருந்திருப்போம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக நாங்கள் இந்தக் குர் ஆனையும், இதற்கு முன்னுள்ள (வேதத்)தையும் நம்பவேமாட்டோம்” என்று (இந்த) நிராகரிப்போர் கூறுகின்றனர், ஆகவே இந்த அநியாயக்காரர்கள் தங்கள் இரட்சகன் முன் நிறுத்தபட்டவர்களாக நீர் பார்ப்பீராயின், அவர்களில் சிலர் சிலரின்பால் கூற்றைத் திருப்புவர், (அப்போது) பலவீனமாகக் கருதப்பட்டவர்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தோரிடம், “நீங்கள் இல்லாவிடில், நிச்சயமாக நாங்கள் விசுவாசங்கொண்டவர்களாகியிருந்திருப்போம்” என்று கூறுவார்கள்.
பெருமை தேடிக் கொண்டிருந்தவர்கள், பலஹீனர்களாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர்வழி வந்தபின், அதை விட்டும் உங்களை நாங்களா தடுத்தோம்? அல்ல! நீங்கள் தாம் (நேர்வழி ஏற்காத) குற்றவளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தான் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக ஆனீர்கள்'' என்று கூறுவார்கள்.
IFT
தங்களைப் பெரியவர்களாய்க் காட்டிக்கொண்டிருந்தவர்கள் இந்த ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி பதில் சொல்வார்கள்: “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர் நாங்களா அதனை விட்டு உங்களைத் தடுத்தோம்? இல்லை! மாறாக, நீங்களே குற்றவாளிகளாயிருந்தீர்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு அவர்களில்) பெருமையடித்துக்கொண்டிருந்தவர்கள், பலவீனமாகக் கருதப்பட்டவர்களிடம், “உங்களிடம் நேர் வழி வந்ததன் பின்னர், (நீங்கள் அதில் சொல்லாது) அதை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை, நீங்கள் தாம் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக இருந்தீர்கள்” என்று கூறுவார்கள்.
அதற்கு பலஹீனர்களாகக் கருதப் பட்டவர்கள் பெருமை தேடிக் கொண்டவர்களிடம், “அப்படியல்ல! நீங்கள் தாம் இரவும் பகலும் சூழ்ச்சி செய்து, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணைவைக்குமாறு ஏவினீர்கள்” என்று கூறுவார்கள். மேலும், அவர்கள் வேதனையைப் பார்க்கும் போது இந்தக் கைசேதத்தை (ஒருவருக்கொருவர்) மறைப்பார்கள்; இன்னும் நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டுவிடுவோம்; அவர்கள் செய்து கொண்டிருந்த (தீ) வினைகளுக்கன்றி கூலி கொடுக்கப்படுவார்களா?
அப்துல் ஹமீது பாகவி
அதற்கு, பலவீனமாயிருந்தவர்கள் கர்வம் கொண்டிருந்தவர்களை நோக்கி, ‘‘மாறாக, நாங்கள் அல்லாஹ்வை நிராகரித்து விட்டு, அவனுக்கு இணை வைக்குமாறு நீங்கள் எங்களை ஏவி, இரவு பகலாக சூழ்ச்சி செய்யவில்லையா?'' என்று கூறுவார்கள். ஆகவே, இவர்கள் அனைவருமே வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில் தங்கள் துக்கத்தை மறைத்துக்கொண்டு (இவ்வாறு) கூறுவார்கள். (ஆனால்,) நிராகரித்தவர்களுடைய கழுத்துகளில் நாம் விலங்கிட்டு விடுவோம். இவர்கள், தாங்கள் செய்துகொண்டிருந்த (தீய) செயலுக்குத் தக்க கூலியே தவிர மற்றெதுவும் கொடுக்கப்படுவார்களா?
IFT
ஒடுக்கப்பட்ட மக்கள் பெரியவர்களாய்க் காட்டிக் கொண்டிருந்தவர்களிடம் கூறுவார்கள்: “இல்லை; இரவு பகலாக நீங்கள் செய்துகொண்டிருந்த வஞ்சனையாகும் இது! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிக்கும்படியும் மற்றவர்களை அவனுக்கு இணையாக்கும்படியும் நீங்கள் எங்களிடம் கூறியவண்ணம் இருந்தீர்கள்.” இறுதியில் இவர்கள் வேதனையைக் காணும்போது உள்ளூர வருந்துவார்கள். மேலும், நாம் இந்நிராகரிப்பாளர்களின் பிடரிகளில் விலங்குகளைப் பூட்டுவோம். தாம் எவ்விதம் செயல்பட்டார்களோ அதற்கேற்பவே கூலி கிடைக்கும் என்பதைத் தவிர வேறு பிரதிபலன் ஏதேனும் மக்களுக்குக் கிடைக்குமா என்ன?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், பலவீனமாகக் கருதப்பட்டவர்கள், பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களிடம், “அவ்வாறல்ல! நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும், அவனுக்குச் சமமானவர்களை (_கூட்டுக்காரர்களை) நாங்கள் ஆக்குவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய பொழுது, (உங்களுக்குக் கீழ்ப்படியசெய்தது) இரவிலும், பகலிலும் (எங்களுக்கு நீங்கள்) செய்த சூழ்ச்சியாகும். “இன்னும், அவர்கள் (யாவருமே) வேதனையைக் (கண்ணால்) காணும் சமயத்தில், தங்கள் கைசேதத்தை (தங்களுக்குள்) மறைத்துக் கொள்வார்கள், மேலும், நிராகரித்தோருடைய கழுத்துகளில் நாம் விலங்குகளை ஆக்குவோம், அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கல்லாமல் (வேறெதற்கும்) அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா?
அன்றியும் அச்சமூட்டி எச்சரிப்போரை நாம் (எந்த) ஓர் ஊருக்கு அனுப்பிய போதும், அங்கிருந்த செல்வந்தர்கள்; “நிச்சயமாக நாங்கள் நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கின்றீர்களோ, அதை நிராகரிக்கின்றோம்” என்று கூறாமல் இருக்கவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (நமது) தூதரை நாம் எங்கெங்கு அனுப்பினோமோ அங்கெல்லாம் இருந்த செல்வந்தர்கள் (அவரை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் நீங்கள் கொண்டு வந்த தூதை நிராகரிக்கிறோம்'' என்று கூறாமல் இருக்கவில்லை.
IFT
எச்சரிக்கை செய்யக்கூடிய ஒருவரை எந்த ஊருக்கு நாம் அனுப்பி வைத்தாலும் அவ்வூரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்தவர்கள், “நீங்கள் கொண்டு வந்திருக்கின்ற தூதுச் செய்தியை நாங்கள் ஏற்க மாட்டோம்” என்றே கூறினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எந்த ஊருக்கும்_அங்கிருந்த செல்வந்தர்கள், “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரிக்கின்றோம்” என்று கூறியே தவிர, நாம் அச்சமூட்டி எச்சரிப்போரை அனுப்பவில்லை.
இன்னும்: “நாங்கள் செல்வங்களாலும் மக்களாலும் மிகுந்தவர்கள், ஆகவே (இத்தகு செல்வங்களைப் பெற்றிருக்கும்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்கள் அல்லர்” என்றும் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், ‘‘நாங்கள் அதிகமான செல்வங்களையும் சந்ததிகளையும் உடையவர்கள். ஆகவே, (மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்பட மாட்டோம்'' என்று கூறினர்.
IFT
மேலும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உங்களைவிட) அதிகமான செல்வமும் சந்ததிகளும் உடையவர்கள். நாங்கள் ஒருபோதும் தண்டனை பெறக்கூடியவர்கள் அல்லர்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், “செல்வங்களாலும், மக்களாலும் நாங்கள் மிக அதிகமானவர்கள், (ஆகவே மறுமையில்) நாங்கள் வேதனை செய்யப்படுபவர்களும் அல்லர்” என்றும் அவர்கள் கூறினர்.
“நிச்சயமாக என்னுடைய இறைவன் தான் நாடியவர்களுக்கு, செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும், (அதை, தான் நாடியவர்களுக்கு சுருக்கியும் விடுகிறான் - எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘நிச்சயமாக என் இறைவன், தான் விரும்பியவர்களுக்கு வாழ்வாதாரத்தை அதிகமாகவும் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்குக்) குறைத்தும் விடுகிறான். எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை.''
IFT
(நபியே, இவர்களிடம் நீர்) கூறும்: “என் இறைவன் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தைத் தாராளமாக வழங்குகின்றான். மேலும், தான் நாடுகின்றவர்களுக்கு அளவோடு கொடுக்கின்றான். ஆயினும், மக்களில் பெரும்பாலோர் (இந்த உண்மையை) அறிவதில்லை.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இரட்சகன், தான் நாடியவர்களுக்கு சம்பத்தை விசாலமாகவும் கொடுக்கின்றான், (தான் நாடியவர்களுக்கு அளவோடு) சுருக்கியும் கொடுக்கின்றான், எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அதன் கருத்தை) அறிந்து கொள்ளமாட்டார்கள்.
இன்னும் உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ (உங்களுக்குத் தகுதி கொடுத்து) உங்களை நம்மளவில் நெருங்கி வைக்க கூடியவர்கள் அல்லர். ஆனால் எவர் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல் செய்கின்றாரோ அத்தகையோர்க்கு, அவர்கள் செய்ததற்கு இரட்டிப்பு நற்கூலி உண்டு; மேலும் அவர்கள் (சுவனபதியின்) உன்னதமான மாளிகைகளில் நிம்மதியுடன் இருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(நீங்கள் எண்ணுகிறவாறு) உங்கள் செல்வங்களும் உங்கள் சந்ததிகளும் உங்களை நம்மிடம் சேர்க்கக் கூடியவை அல்ல. ஆயினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ (அவையே அவர்களை நம்மிடம் சேர்க்கும்.) அவர்களுக்கு அவர்கள் செய்த (நற்)செயலின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு. மேலும், அவர்கள் (சொர்க்கத்திலுள்ள) மேல் மாடிகளில் கவலையற்றும் வசிப்பார்கள்.
IFT
உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை நம்மிடத்தில் மிகவும் நெருக்கமாக்கி வைக்கக்கூடியவை அல்ல; ஆயினும் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தவர்களைத் தவிர! அத்தகையவர்களுக்கே, அவர்கள் செய்த செயல்களின் கூலி இரு மடங்கு இருக்கிறது. மேலும், அவர்கள் உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியோடிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுடைய செல்வங்களோ, உங்களுடைய மக்களோ உங்களை நம்மிடத்தில் சமீபமாக நெருக்கிவைப்பவர்கள் அல்லர்_ விசுவாசங்கொண்டு நற்செயல்களும் செய்தவரைத்தவிர_ அவர்களுக்கு அவர்கள் செய்த (நல்) வினையின் காரணமாக இரட்டிப்பான கூலியுண்டு, அவர்களோ (சுவனபதியிலுள்ள) உயர்ந்த மாளிகைகளில் நிம்மதியாக இருப்பவர்கள்.
“நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் யாருக்கு நாடுகிறானோ, அவருக்கு செல்வத்தை விசாலப்படுத்துவான்; இன்னும் தான் நாடியோருக்கு சுருக்கியும் விடுகிறான்; ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும், அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும், அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறும்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்கு அதிகமான வாழ்வாதாரத்தைக் கொடுக்கிறான்; தான் விரும்பியவர்களுக்கு குறைத்து விடுகிறான். ஆகவே, நீங்கள் எதை தானம் செய்தபோதிலும் அவன் அதற்குப் பிரதி கொடுத்தே தீருவான். அவன் கொடையளிப்பவர்களில் மிக்க மேலானவன்.
IFT
(நபியே, இவர்களிடம்) கூறும்: என்னுடைய இறைவன் தன் அடிமைகளில் தான் நாடுவோருக்கு தாராளமாய் வாழ்வாதாரம் வழங்குகின்றான். இன்னும் தான் நாடுவோருக்கு அளவோடு கொடுக்கின்றான். நீங்கள் செலவு செய்கின்றவற்றுக்குப் பகரமாக இன்னும் பலவற்றை அவனே உங்களுக்குத் தருகின்றான். வாழ்வாதாரம் வழங்குவோரில் அவன் மிகச் சிறந்தவனாவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நீர் கூறுவீராக: “நிச்சயமாக என் இரட்சகன், தன் அடியார்களில் தான் நாடியவர்களுக்கு, வாழ்வாதாரத்தை விசாலப் படுத்துகிறான், (தான் விரும்பியவர்களுக்கு) அளவோடும் கொடுக்கிறான். எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்த போதிலும் அதற்குப் பகரமானதை அவன் அளிக்கிறான், இன்னும், வாழ்வாதாரங்களை நல்குவோரில் அவன் மிகச் சிறந்தவன்.
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் “இவர்கள்தானா உங்களை வணங்கிக்கொண்டு இருந்தார்கள்” என்று (அல்லாஹ்) கேட்பான்.
அப்துல் ஹமீது பாகவி
(வானவர்களை வணங்கிக் கொண்டிருந்த) அவர்கள் அனைவரும் ஒன்று சேர்க்கப்படும் நாளில், வானவர்களை நோக்கி ‘‘இவர்கள் உங்களையா வணங்கி வந்தார்கள்?'' என்று கேட்கப்படும்.
IFT
மேலும், அந்நாளில் அவன் மனிதர்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவான். பிறகு வானவர்களிடம் கேட்பான்: “என்ன, இவர்கள் உங்களைத்தானா வணங்கிக் கொண்டிருந்தார்கள்?”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனைவரையும் அவன் (_அல்லாஹ்) ஒன்றுதிரட்டும் நாளை (நினைவு கூறுங்கள்). பின்னர் மலக்குகளிடம், இவர்கள்தானா உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள்? என்று அவன் கேட்பான்.
(இதற்கு மலக்குகள்:) “நீ மிகத் தூய்மையானவன்; நீயே எங்கள் பாதுகாவலன்; இவர்கள் அல்லர்; எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள் - இவர்களில் பெரும்பாலோர் அவர்(ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அதற்கவர்கள், ‘‘(எங்கள் இறைவனே!) நீ மிகப் பரிசுத்தமானவன். நீதான் எங்கள் பாதுகாவலன்; அவர்களன்று. மாறாக, அவர்கள் ஜின்களையே வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் அந்த ஜின்களையே நம்பிக்கை கொண்டும் இருந்தார்கள்'' என்று (வானவர்கள்) கூறுவார்கள்.
IFT
அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்: “தூய்மையானவன் நீ! எங்களுடைய தொடர்பு உன்னுடன்தானே தவிர இவர்களுடன் அல்ல! இவர்கள் வணங்கிக் கொண்டிருந்தது எங்களை அல்ல; ஜின்களைத்தான்! இவர்களில் பெரும்பாலோர் அந்த ஜின்களின் மீதே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அ(தற்க)வர்கள், “(எங்கள் இரட்சகனே!) நீ மிகப் பரிசுத்தமானவன், அவர்களன்றி நீதான் எங்கள் பாதுகாவலன், எனினும் அவர்கள் ஜின்களை வணங்கிக்கொண்டிருந்தனர், அவர்களில் பெரும்பாலோர் அவர்களை(_அந்த ஜின்களை) விசுவாசித்துமிருந்தவர்கள்” என்று கூறுவார்கள்.
“இன்றைய தினம், உங்களில் சிலர் (உங்களில் மற்றும்) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்யச் சக்தியற்றவர்களாவீர்; நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ அந்(நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள் என்றும் அநியாயம் செய்தார்களே அவர்களிடம்” நாம் கூறுவோம்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில் உங்களில் ஒருவர் மற்றவருக்கு நன்மையோ தீமையோ செய்ய சக்தியற்றவராக இருப்பார். மேலும், (அச்சமயம்) அவ்வக்கிரமக்காரர்களை நோக்கி ‘‘நீங்கள் (நம் வேதனையைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்த(தன் காரணமாக) இந்நரக வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்'' எனக் கூறுவோம்.
IFT
(அவ்வேளை நாம் கூறுவோம்:) “இன்று உங்களில் எவரும் வேறெவர்க்கும் இலாபம் அளிக்கவும் முடியாது; நஷ்டம் ஏற்படுத்தவும் முடியாது.” மேலும், கொடுமை புரிந்து கொண்டு இருந்தவர்களிடம் நாம் கூறுவோம்: “இப்பொழுது சுவையுங்கள் இந்த நரகவேதனையை! இதைத்தான் நீங்கள் பொய்யென்று கூறிக் கொண்டிருந்தீர்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“எனவே, இந்நாளில் உங்களில் சிலர் (மற்ற) சிலருக்கு நன்மையோ, தீமையோ செய்ய அதிகாரம் பெற மாட்டார்கள்; (இம்மையில்) அநியாயம் செய்தார்களே அவர்களுக்கு “நீங்கள் எதைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தீர்களோ அத்தகைய (நரக) நெருப்பின் வேதனையைச் சுவைத்துப் பாருங்கள்” என்றும் நாம் கூறுவோம்.
நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்: “இவர் (ஒரு சாதாரண) மனிதரே அன்றி வேறில்லை; உங்கள் மூதாதையவர்கள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டும் உங்களைத் தடுத்து விடவே இவர் விரும்புகிறார்” என்று கூறுகிறார்கள்; இன்னும் அவர்கள் “இது இட்டுக் கட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர். மேலும், அல் ஹக்கு (சத்தியம்: திருக் குர்ஆன்) அவர்களிடத்தில் வந்தபோது, “இது வெளிப்படையான சூனியமேயன்றி வேறில்லை” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கு நம் தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அதற்கவர்கள் (நம் தூதரைப் பற்றி) ‘‘இவர் ஒரு சாதாரண மனிதரே தவிர வேறில்லை. உங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றிலிருந்து உங்களைத் தடுத்துவிடவே இவர் விரும்புகிறார்'' என்றும் (நம் தூதர் கூறுகின்ற) ‘‘இது வெறும் கட்டுக் கதையே தவிர வேறில்லை'' என்றும் கூறுகின்றனர். மேலும்,”(திரு குர்ஆனாகிய) இந்த உண்மை அவர்களிடம் வந்த சமயத்தில், இது பகிரங்கமான சூனியமே தவிர வேறில்லை'' என்றும் இந்த நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.
IFT
இவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக்காட்டப்படும்போது இவர்கள் கூறுகின்றார்கள். “இந்த மனிதர் விரும்புவதெல்லாம் உங்களுடைய முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வங்களை விட்டு உங்களைத் தடுத்துவிடுவதுதான்.” மேலும், கூறுகின்றார்கள்: “(குர்ஆன்) புனைந்துரைக்கப்பட்ட வெறும் பொய்யே தவிர வேறில்லை.” இந்நிராகரிப்பாளர்களின் முன்னால் சத்தியம் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இதுவோ வெளிப்படையான சூனியம்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும் தெளிவான நம்முடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “உங்கள் மூதாதையர்கள் வணங்கிக் கொண்டிருந்தவைகளை விட்டும், உங்களைத் தடுத்துவிட நாடுகின்ற ஒரு மனிதரேயன்றி இவர் (வேறு) இல்லை” என்று அவர்கள் கூறுகின்றனர், மேலும், அவர்கள், (அவர் கூறுகிற) “இது இட்டுகட்டப்பட்ட பொய்யேயன்றி வேறில்லை” என்றும் கூறுகின்றனர், மேலும், (திருக்குர் ஆனாகிய இந்த) உண்மை_அவர்களிடம் வந்த சமயத்தில், ‘இது பகிரங்கமான சூனியமேயன்றி (வேறு) இல்லை” என்றும் நிராகரிப்போர் கூறுகின்றனர்.
எனினும் (இதற்கு முன்) நாம் இவர்களுக்கு இவர்கள் ஓதக்கூடிய வேதங்கள் எதையும் கொடுக்கவில்லை; உமக்கு முன்னர், நாம் இவர்களிடம் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரையும் அனுப்பவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! இதற்கு முன்னர்) நாம் (உம்மை நிராகரிக்கும் அரபிகளாகிய) இவர்களுக்கு, இவர்கள் ஓதக்கூடிய வேதம் எதையும் கொடுக்கவில்லை; அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய தூதர் எவரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களிடம் அனுப்பவில்லை. (இவ்வாறிருந்தும் அவர்கள் உம்மை நிராகரிக்கின்றனர்.)
IFT
நாம் இந்த மக்களுக்கு இவர்கள் படிக்கக்கூடிய வகையில் எந்த வேதத்தையும் முன்னர் வழங்கவில்லை. மேலும், உமக்கு முன்பு எச்சரிக்கை செய்பவர் எவரையும் இவர்களிடம் நாம் அனுப்பவுமில்லை
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) இவர்களுக்கு, (இதற்கு முன்னர்) வேதங்களிலிருந்து எதையும்_ அதனை அவர்கள் ஓதுவதற்காக நாம் கொடுக்கவுமில்லை; அச்சமூட்டி எச்சரிக்ககூடிய எவரையும் உமக்கு முன்னர் நாம் அவர்களின்பால் அனுப்பவுமில்லை.
மேலும் இவர்களுக்கு முன்னிருந்த (ஏனைய சமூகத்த)வர்களும் (இவ்வாறே) பொய்ப்பிக்க முற்பட்டனர், அன்றியும் அவர்களுக்குக் கொடுத்ததில் பத்தில் ஒன்றைக் கூட இவர்கள் அடையவில்லை; ஆகவே அவர்கள் என் தூதர்களைப் பொய்ப்பிக்க முற்பட்டார்கள்; அந்த நிராகரிப்பு (கடின வேதனையைக் கொண்டு வருவதாக) எவ்வாறு இருந்தது (என்பதை இவர்கள் நினைவு கூறட்டும்)
அப்துல் ஹமீது பாகவி
இவர்களுக்கு முன்னிருந்த (அரபிகளல்லாத)வர்களும் மற்ற (தூதர்களை இவ்வாறே) பொய்யாக்கினார்கள். அவர்களுக்கு நாம் கொடுத்திருந்ததில் பத்தில் ஒரு பாகத்தையும் இவர்கள் அடைந்து விடவில்லை. (அதற்குள்ளாகவே) இவர்கள் எனது தூதர்களைப் பொய்யாக்க முற்பட்டு இருக்கின்றனர். (இவர்களுக்கு முன்னர் நம் தூதர்களை நிராகரித்து பொய்யாக்கியவர்களை) நான் தண்டித்தது எவ்வாறாயிற்று? (என்பதை இவர்கள் கவனிப்பார்களாக)
IFT
இவர்களுக்கு முன் வாழ்ந்து சென்ற மக்களும் பொய்யென்று தூற்றிவிட்டிருக்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியிருந்தவற்றில் பத்திலொரு பங்குகூட இவர்கள் பெறவில்லை. ஆனால், அவர்கள் என்னுடைய தூதர்களைப் பொய்யர்கள் எனத் தூற்றியபோது பாருங்கள்! என்னுடைய வேதனை எத்துணைக் கடுமையாக இருந்தது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம்முடைய தூதர்களைப்) பொய்யாக்கினார்கள். இன்னும் அவர்களுக்கும் நாம் கொடுத்திருந்ததில், பத்தில் ஒரு பாகத்தையேனும் இவர்கள் அடைந்துவிடவில்லை. பின்னர் அவர்கள் என்னுடைய தூதர்களை (நிராகரித்து)ப் பொய்ப்படுத்தினார்கள்; ஆகவே, (என்னை மறுத்ததன் காரணமாக தண்டனையைக் கொண்டும், வேதனையைக் கொண்டும் பிடித்த என்னுடைய) மறுப்பு எவ்வாறிருந்தது?
“நான் உங்களுக்கு உபதேசிப்பது ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்; நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ அல்லாஹ்வுக்காக எழுந்தமர்ந்து பின்னர் சிந்தித்துப் பாருங்கள்” என்று (நபியே!) நீர் கூறும்; உங்கள் நண்பருக்கு பைத்தியம் எதுவுமில்லை; உங்களுக்குக் கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரல்லாமல் அவர் வேறில்லை.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) கூறுவீராக: ‘‘நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயம்தான். நீங்கள் ஒவ்வொருவராகவோ, இரண்டிரண்டு பேர்களாகவோ அல்லாஹ்வுக்காகச் சிறிது பொறுத்திருந்து, பின்னர் (உங்களுக்குள்) ஆலோசித்துப் பாருங்கள். உங்கள் சிநேகிதராகிய எனக்கு எத்தகைய பைத்தியமும் இல்லை. (நான் உங்களுக்குக்) கடினமான வேதனை வருவதற்கு முன்னர் (அதைப் பற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை.''
IFT
(நபியே! இவர்களிடம்) கூறும்: “நான் உங்களுக்கு ஒரே ஒரு விஷயத்தை அறிவுறுத்துகின்றேன்: நீங்கள் அல்லாஹ்வுக்காக தனித் தனியாகவோ இருவரிருவராகவோ சேர்ந்து ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்; உங்களுடைய தோழரிடம் பைத்தியக்காரத்தனம் என்ன இருக்கிறது என்று! அவரோ ஒரு கடினமான வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றிதான், நீங்கள் இரண்டிரண்டு பேர்களாகவோ, தனித்தனியாகவோ, அல்லாஹ்வுக்காகச் சிறிது எழுந்து (நின்று), பின்னர் (உங்களுக்குள்) சிந்தித்துப்பாருங்கள்” என்று (நபியே! நீர்) கூறுவீராக! “உங்களுடைய சிநேகிதர் (ஆகிய என)க்கு எத்தகைய பைத்தியமுமில்லை, கடினமான வேதனை வருவதற்கு முன்னர் அவர் உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே தவிர வேறில்லை” (என்பதை தெளிவாக உணர்வீர்கள்).
கூறுவீராக: “நான் உங்களிடமிருந்து யாதொரு கூலியையும் கேட்கவில்லை; அது உங்களுக்கே இருக்கட்டும்; என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை -அவன் எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.“
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! மேலும்) கூறுவீராக: ‘‘நான் உங்களிடத்தில் ஏதும் கூலியைக் கேட்டிருந்தால் அது உங்களுக்கே சொந்தம் ஆகட்டும். என் கூலி அல்லாஹ்விடமே தவிர (உங்களிடம்) இல்லை. அவன் அனைத்திற்கும் (அவற்றை நன்கறிந்த) சாட்சி ஆவான்.
IFT
இவர்களிடம் கூறும்: “நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. அவ்வாறு கேட்டிருந்தாலும் அதனை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என்னுடைய கூலி அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது. அவன் அனைத்து விஷயங்களுக்கும் சாட்சியாக இருக்கின்றான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! மேலும்) நீர் கூறுவீராக: “நான் உங்களிடம் எவ்விதக் கூலியையும் கேட்கவில்லை, அவ்வாறாயின் அது உங்களுக்கே உரியது, என்னுடைய கூலி அல்லாஹ்விடமேயன்றி (உங்களிடம்) இல்லை_ அவனோ ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கிறான்.”
கூறுவீராக: “நான் வழிகெடுவேனாயின்; வழிகேடு எனக்கே நஷ்டமாகும்; நான் நேர்வழியில் செல்வேனாயின் (அது) என்னுடைய இறைவன் எனக்கு “வஹீ” மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும்; நிச்சயமாக அவன் (மிகச்) செவியேற்பவன். (மிக) நெருங்கியிருப்பவன்.”
அப்துல் ஹமீது பாகவி
(மேலும்) கூறுவீராக: ‘‘நான் வழிதவறி இருந்தால் அது எனக்கே நஷ்டமாகும். நான் நேரான வழியை அடைந்து இருந்தால் அது என் இறைவன் எனக்கு வஹ்யி மூலமாக அறிவித்ததன் காரணமாகவே ஆகும். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் (அனைத்திற்கும்) சமீபமானவனும் ஆவான்.
IFT
கூறுவீராக: “நான் வழிதவறிப் போய்விட்டால், எனது வழிகேட்டின் தீயவிளைவு என்னையே சாரும். நான் நேர்வழியில் இருக்கிறேனென்றால், அது என்னுடைய இறைவன் எனக்கு அனுப்புகின்ற வஹியின்* காரணத்தினாலாகும். அவன் எல்லாவற்றையும் செவியுறுபவனும் அருகிலேயே உள்ளவனுமாவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மேலும்) நீர் கூறுவீராக: “நான் (உண்மையான வழியை விட்டு) வழி தவறிவிடுவேனாயின் அப்போது நான் வழி தவறி விடுவதெல்லாம் என் மீதே (பாவமாகும்) ஆகும். நான் நேர் வழியை அடைந்திருந்தால், (அது) என் இரட்சகன் எனக்கு வஹீ மூலமாக அறிவித்ததைக் கொண்டேயாகும். நிச்சயமாக அவன், (யாவற்றையும்) செவியேற்பவன், (யாவற்றிற்கும்) நெருக்கமானவன்.
இன்னும் (காஃபிர்கள் மறுமையில்) பயத்தால் நடுங்குவதை நீர் காண்பீராயின்: அவர்களுக்குத் தப்பியோட வழியுமிராது; இன்னும் சமீபமான இடத்திலிருந்தே அவர்கள் பிடிபடுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
‘‘(மறுமையில்) இவர்கள் திடுக்கிட்டு(த் தப்பி) ஓட முயற்சித்த போதிலும் ஒருவருமே தப்பிவிட மாட்டார்கள். மிக்க சமீபத்திலேயே பிடிபட்டு விடுவார்கள்'' என்பதை நீர் காண்பீராயின் (அது எவ்வாறிருக்கும்)!
IFT
(மேலும்) அந்தோ! இவர்கள் திகைப்புற்றுத் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில் இவர்களை நீர் காண வேண்டுமே! இவர்களால் எங்கும் தப்பித்துச் செல்ல முடியாது. மாறாக, அருகிலிருந்தே பிடிக்கப்படுவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இன்னும் மறுமையில் காஃபிர்களான) அவர்கள், திடுக்கமுற்றிருக்கும் பொழுது நீர் காண்பீராயின், அப்பொழுது (அவர்களால் எங்கும்) தப்பிச் செல்ல முடியாது. மிகச் சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப் பட்டும் விடுவார்கள்.
மேலும் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (இப்போது சத்தியத்தின் மீது) ஈமான் கொள்கிறோம்” என்று; ஆனால் (அமல் செய்யவேண்டிய இடத்தை விட்டும்) வெகு தூரத்திலிருந்து கொண்டு அவர்கள் எவ்வாறு (ஈமானை எளிதில்) அடைய முடியும்?
அப்துல் ஹமீது பாகவி
(அச்சமயம்) இவர்கள் (திடுக்கிட்டு) அதை (நம்பிக்கை கொண்டோம்) நம்பிக்கை கொண்டோம் என்று கதறுவார்கள். (சத்தியத்திலிருந்து) இவ்வளவு தூரம் சென்றுவிட்ட இவர்கள் (உண்மையான நம்பிக்கையை) எவ்வாறு அடைந்து விடுவார்கள்?
IFT
அப்போது, இவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அதன் மீது நம்பிக்கை கொண்டோம்.” ஆயினும், அவர்களை விட்டு தூரமாகச் சென்றுவிட்ட ஒன்றை எங்ஙனம் அவர்களால் கைக்கொள்ள முடியும்?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், (அச்சமயம்) அவர்கள் (திடுக்கிட்டு) “நாங்கள் அ(வ்வேதத்)தை விசுவாசஙகொண்டோம்” என்று கூறுவார்கள், (அவனிடமிருந்து செயல்களை அங்கீகரிக்கப்படும் இடத்தை விட்டு) மேலும், வெகு தூரமான இடத்திலிருந்து கொண்டு (உண்மை விசுவாசத்தைப்) பெறுதல் எவ்வாறு அவர்களுக்கு முடியும்?
ஆனால், இதற்கு முன்னர் அவர்கள் சத்தியத்தை நிராகரித்துக் கொண்டும், மறைவாய் உள்ளவைப்பற்றி வெகு தூரத்திலிருந்தவாறு (வெற்று யூகங்களை) எறிந்து கொண்டுமிருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இதற்கு முன்னரோ, இவர்கள் அதை நிராகரித்துக் கொண்டும், இவ்வளவு தூரத்தில் அவர்களுக்கு மறைத்திருந்ததைப் (பொய் என்று) பிதற்றிக்கொண்டும் இருந்தனர்.
IFT
இதற்கு முன்போ அவர்கள் அதனை நிராகரித்துவிட்டிருந்தார்கள். மேலும், உண்மையான அறிவில்லாமல், புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தூரமான விஷயங்கள் குறித்து கற்பனைகளைக் கூறிக் கொண்டிருந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இதற்கு) முன்னர், அதைத்திட்டமாக அவர்கள் நிராகரித்தும்விட்டார்கள், மேலும் வெகு தூரமான இடத்திலிருந்து மறைவானதைப் பற்றி (வீண் எண்ணத்தைக் கொண்டே) எறிந்து (_சொல்லிக்) கொண்டும் இருந்தார்கள்.
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்களுக்கும் அவர்கள் விரும்பியவற்றுக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டுவிடும். அவ்வாறே இவர்களுக்கு முன்னிருந்த இவர்களுடைய இனத்தாருக்குச் செய்யப்பட்டது. (ஏனென்றால்,) நிச்சயமாக அவர்களும் பெரும் சந்தேகத்தில் ஆழ்ந்தே கிடந்தனர்.
IFT
அந்நேரத்தில் எவற்றிற்காக இவர்கள் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பார்களோ அவற்றைவிட்டு இவர்கள் தடுக்கப்பட்டு விடுவார்கள் இவர்களுக்கு முன்னர் இவர்களைப் போல் வாழ்ந்தவர்கள் தடுக்கப்பட்டதைப் போல! திண்ணமாக, இவர்கள் வழிகெடுக்கும் பெரும் ஐயப்பாட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இதற்கு முன்பு இவர்களைப்போன்ற (நிராகரித்த)வர்களுக்கு செய்யப்பட்டது போல் இவர்களுக்கிடையிலும், இவர்கள் விருப்பம் கொண்டிருந்தவைகளுக்கிடையிலும் திரைபோடப்பட்டுவிட்டது, (ஏனென்றால்) நிச்சயமாக அவர்கள் அவநம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய சந்தேகத்திலேயே இருந்தார்கள்.