வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது; அவனே உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்கள் பூமியின் ஆட்சியும் அவனுக்குரியதே! அவனே உயிர்ப்பிக்கிறான்; அவனே மரணிக்க வைக்கிறான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
IFT
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சிக்கு அவனே உரிமையாளன்; அவன் உயிரை வழங்குகின்றான்; மரணத்தை அளிக்கின்றான். மேலும், அவன் ஒவ்வொன்றின்மீதும் பேராற்றல் கொண்டவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது, அவன் உயிர்ப்பிக்கின்றான், அவனே மரணிக்குமாறும் செய்கின்றான், மேலும், அவன், ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.
அவனே ஆதியும் அந்தமும் ஆவான். அவனே வெளிப்படையானவனும், மறைவானவனும் ஆவான். மேலும், அவன் ஒவ்வொன்றையும் நன்கறிபவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவனே முதலாமவனும், கடைசியானவனும், (அவனுக்கு முன்னும், பின்னும் ஒன்றுமில்லை!) அவனே (சகலவற்றிற்கும்) மேலானவனும், அந்தரங்கமானவனும் (ஆவான்), மேலும், அவன் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் நன்கறிகிறவன்.
அவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்; பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையும்; வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான்; நீங்கள் எங்கிருந்து போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.
அப்துல் ஹமீது பாகவி
அவன்தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். பின்னர், அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தகுந்தாற்போல்) உயர்ந்து விட்டான். (வித்து முதலியவை) பூமியில் விதைக்கப்படுவதையும் அவை முளைத்து வெளிப்படுவதையும், வானத்தில் இருந்து இறங்குபவற்றையும், (பூமியிலிருந்து) ஏறுபவற்றையும் அவன் நன்கறிவான். நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்பவற்றையும் (அந்த) அல்லாஹ் உற்று நோக்குகிறான்.
IFT
வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் அவன்தான் படைத்தான். பின்னர், அர்ஷின்* மீது அமர்ந்தான். பூமிக்குள் செல்பவற்றையும், அதிலிருந்து வெளியேறுகின்றவற்றையும் வானத்திலிருந்து இறங்குகின்றவற்றையும், அதில் ஏறுகின்றவற்றையும் அவன் அறிகின்றான். நீங்கள் எங்கிருப்பினும் அவன் உங்களுடன் இருக்கின்றான். மேலும், நீங்கள் செய்யும் செயல்களையெல்லாம் அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர், (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறும், மகத்துவத்திற்குரியவாறும் அர்ஷின் மீதிருப்பது அவனுக்கு எவ்வாறு தகுமோ அவ்வாறே) அர்ஷின் மீது உயர்ந்து (நிலைபெற்று) விட்டான், பூமியில் நுழைவதையும், அதிலிருந்து வெளிப்படுவதையும், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான், நீங்கள் எங்கிருந்த போதிலும், அவன் (அறிவாலும், ஆற்றலாலும் உங்களுடன் இருக்கிறான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவைகளை நன்கு பார்க்கிறவன்.
நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நம்பிக்கைகொள்ளுங்கள். இன்னும், அல்லாஹ் உங்களுக்கு முன் சென்றவர்களின் எப்பொருள்களுக்கு உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கினானோ அப்பொருள்களிலிருந்து நீங்கள் தானம் செய்யுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு தானம் செய்கிறார்களோ, அவர்களுக்குப் பெரியதொரு கூலி உண்டு.
IFT
அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவற்றின் விஷயத்தில் அவன் உங்களைப் பிரதிநிதியாக்கியிருக்கின்றானோ அவற்றிலிருந்து செலவழியுங்கள். உங்களில் எவர்கள் நம்பிக்கை கொள்வார்களோ, மேலும், பொருளைச் செலவிடுவார்களோ அவர்களுக்குப் பெரும் கூலி உண்டு.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே மனிதர்களே! நீங்கள்) அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் விசுவாசியுங்கள். அன்றியும், எதில் உங்களை அவன் பின்தோன்றல்களாக ஆக்கி இருக்கிறானோ, அதிலிருந்து (தர்மமாகச்) செலவு செய்யுங்கள், ஆகவே, உங்களில் விசுவாசங்கொண்டு, (தர்மமாகச்) செலவு செய்கின்றார்களே அத்தகையோர்_அவர்களுக்குப் பெரியதொரு கூலியுண்டு.
உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வை ஏன் நம்பிக்கைகொள்வதில்லை? உங்களைப் படைத்துக் காக்கும் உங்கள் இறைவனைத்தான் நீங்கள் நம்பிக்கைகொள்ளுமாறு, உங்களை (நமது) தூதர் அழைக்கிறார். (இதைப்பற்றி, இறைவன்) உங்களிடம் நிச்சயமாக வாக்குறுதி பெற்றிருக்கிறான். நீங்கள் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (இதன் உண்மையை நீங்கள் நன்கறிந்து கொள்வீர்கள்.)
IFT
உங்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நீங்கள் அல்லாஹ்வின் மீது ஏன் நம்பிக்கை கொள்வதில்லை? இறைத்தூதரோ உங்களை உங்கள் அதிபதியின்மீது நம்பிக்கை கொள்ளும்படி அழைத்துக் கொண்டிருக்கின்றார். மேலும், அவர் உங்களிடம் உறுதிப்பிரமாணம் வாங்கியிருக்கின்றார். நீங்கள் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் (அல்லாஹ்வையே நம்புங்கள்).
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நம்முடைய) தூதர், உங்களுடைய இரட்சகனை நீங்கள் விசுவாசிக்குமாறு உங்களை அழைப்பவராக இருக்க, மேலும், (இதைப்பற்றி முன்னதாக அல்லாஹ்) நிச்சயமாக உங்களுடைய வாக்குறுதியை அவன் வாங்கியிமிருக்க_(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு விசுவாசம் கொள்ளாதிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது? நீங்கள் (உண்மையாகவே) விசுவாசங்கொண்டவர்களாக இருந்தால் (அல்லாஹ்வையே நம்புங்கள்.)
அவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான்; மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன்; நிகரற்ற அன்புடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் கொண்டு வரும் பொருட்டே, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கி வைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.
IFT
அல்லாஹ்தான் தன் அடியார்மீது தெளிவான வசனங்களை இறக்கிக்கொண்டிருக்கின்றான், உங்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருவதற்காக! உண்மை யாதெனில், அல்லாஹ் உங்கள் மீது மிகுந்த பரிவும் கருணையும் கொண்டவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், உங்களை(ப் பாவத்தின்) இருள்களிலிருந்து (நேர் வழியின்) பிரகாசத்தின்பால் வெளிப்படுத்துவதற்காக, அவன் தனது அடியார் மீது தெளிவான வசனங்களை இறக்கிவைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவன், மிக்க கிருபையுடையவன்.
அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே! (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார்; (மக்காவின் வெற்றிக்குப்) பின்; செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்; எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
உங்களுக்கென்ன நேர்ந்தது! அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் தர்மம் செய்ய வேண்டாமா? வானங்கள், பூமியிலுள்ளவற்றின் உரிமை அல்லாஹ்வுக்குரியதுதானே! உங்களில் எவர்கள் (மக்காவை) வெல்வதற்கு முன்னர் தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தார்களோ, அவர்களும் அதற்குப் பின்னர், தம் பொருளைச் செலவு செய்து போர் புரிந்தவர்களும் சமமாக மாட்டார்கள். அவர்கள் (-மக்கா வெற்றிக்கு முன் செலவு செய்து போரிட்டவர்கள்) அதற்கு பின்னர் செலவு செய்து போரிட்டவர்களைவிட மகத்தான பதவி உடையவர்கள். எனினும், இவ்விருவருக்கும் அல்லாஹ் நன்மையை (சொர்க்கத்தை)த்தான் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான்.
IFT
நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமலிருப்பதற்கு என்னதான் காரணம்? உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் வாரிசுரிமையோ அல்லாஹ்விற்கே உரியதாகும். உங்களில் (யார் வெற்றிக்குப் பின் செலவு செய்வார்களோ, மேலும், அறப்போரும் புரிவார்களோ அவர்கள்) வெற்றிக்கு முன் செலவு செய்து, அறப்போரும் புரிந்தவர்களுக்குச் சமமாக மாட்டார்கள். அத்தகையவர்களின் அந்தஸ்து, பின்னர் செலவு செய்தவர்களைவிடவும், அறப்போர் புரிந்தவர்களைவிடவும் உயர்ந்ததாகும். ஆயினும், அல்லாஹ் இரு சாராருக்கும் நல் வாக்குறுதியினை அளித்திருக்கின்றான். நீங்கள் செய்பவை அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவனாயிருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும் வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவைகளின் வாரிசுரிமை அல்லாஹ்வுக்கே உரியதாயிருக்க _ அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் செலவு செய்யாமலிருக்க உங்களுக்கென்ன நேர்ந்தது? உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் யார் (தன் பொருளைச்) செலவும் செய்து, யுத்தமும் புரிந்தாரோ அவருக்கு உங்களில் (யாரும்) நிகராகமாட்டார். (முந்திய) அவர்கள், (மக்கா வெற்றிக்குப்) பிறகு செலவும் செய்து போரிட்டார்களே அத்தகையோரைவிட பதவியால் மிக மகத்தானவர்கள், (எனினும்,) ஒவ்வொருவருக்கும் அல்லாஹ் நன்மையையே வாக்களித்திருக்கிறான், மேலும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்குணர்பவன்.
அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் அதை இரட்டிப்பாக்குகின்றான்; மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.
அப்துல் ஹமீது பாகவி
எவர் அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுக்கிறாரோ அவருக்கு, அதை இரட்டிப்பாக்கியே வைத்திருக்கிறான். மேலும் அவருக்கு மிக கண்ணியமான கூலியும் உண்டு.
IFT
அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? அழகிய கடன்! அல்லாஹ் அதனைப் பன்மடங்கு பெருக்கி அவருக்குத் திரும்பக் கொடுப்பதற்காக! மேலும், அவருக்கு மிகச் சிறந்த கூலியும் இருக்கின்றது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அதனை அவன் இரட்டிப்பாக்கி வைக்கிறான், (அன்றியும்,) அவருக்கு மிக்க கண்ணியமான நற்கூலியும் உண்டு.
முஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) “இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும்; அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்” (என்று கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீர் காணுகின்ற அந்நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களது வலப்பக்கத்திலும் சென்று கொண்டிருக்கும். (உண்மையான அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, வானவர்கள் அவர்களை நோக்கி:) ‘‘தொடர்ந்து நீரருவிகள் ஓடிக்கொண்டிருக்கும் சொர்க்கங்கள் (உங்களுக்கு உண்டு) என்ற நற்செய்தி இன்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது. என்றென்றும் அதில் தங்கி விடுவீர்கள்'' என்று கூறுவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.
IFT
அன்று நீர் காண்பீர், நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும்! அவர்களுடைய ஒளி அவர்களின் முன்பும், அவர்களின் வலப்புறத்திலும் விரைந் தோடிக் கொண்டிருக்கும். கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்கள் இன்று உங்களுக்கு இருக்கின்றன என்று நற்செய்தி (அவர்களுக்குக் கூறப்படும்); அவற்றில் அவர்கள் நிரந்தரமாய்த் தங்கி வாழ்வார்கள். இதுவே மாபெரும் வெற்றியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) விசுவாசங்கொண்ட ஆண்களையும், விசுவாசங்கொண்ட பெண்களையும் நீர் காணும் (அந்) நாளில், அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னும், அவர்களுடைய வலப்புறங்களிலும் விரைந்து (சென்று) கொண்டிருக்கும், “இன்றைய தினம் உங்களுக்கு நன்மாராயம் சுவனங்களாகும், அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவற்றில் நீங்கள் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர்கள், அதுவே மகத்தான வெற்றியாகும்” (என்று மலக்குகள் கூறுவார்கள்).
முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: “எங்களை கவனியுங்கள்; உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்” என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும்: “உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.” பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும்! அதற்கு ஒரு வாயில் இருக்கும்; அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும்; ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அந்நாளில், நயவஞ்சக ஆண்களும் பெண்களும் நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி ‘‘நீங்கள் (முன்னேறி சென்றுவிடாமல்) எங்களுக்காகச் சிறிது தாமதியுங்கள். உங்கள் பிரகாசத்தைக் கொண்டு நாங்கள் பயனடைவோம்'' என்று கூறுவார்கள். (அதற்கு அவர்களை நோக்கி ‘‘எங்கள் முன் நிற்காதீர்கள்.) நீங்கள் உங்கள் பின்புறம் சென்று (அங்குப்) பிரகாசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்'' என்று கூறப்படும். அந்நேரத்தில், இவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் ஒரு சுவர் எழுப்பப்பட்டு விடும். அதற்கு வாசலும் இருக்கும். (நம்பிக்கையாளர்கள் இருக்கக்கூடிய) அதன் உட்புறத்தில் (இறைவனின்) அருளும், அதன் வெளிப்புறத்தில் (பாவிகள் அனுபவிக்கக்கூடிய அவனுடைய) வேதனையுமிருக்கும்.
IFT
அந்நாளில் நயவஞ்சகர்களான ஆண்கள் பெண்களின் நிலை எவ்வாறிருக்குமெனில், நம்பிக்கையாளர்களிடம் அவர்கள் கூறுவார்கள்: “சற்று எங்கள் பக்கம் பாருங்களேன். நாங்கள் உங்களுடைய ஒளியிலிருந்து சற்றுப் பயனடைந்து கொள்கின்றோம்.” ஆயினும் அவர்களிடம் சொல்லப்படும்: “பின்னால் தள்ளிப் போய் விடுங்கள்! (உங்களுக்குரிய) ஒளியை வேறெங்காவது தேடிக் கொள்ளுங்கள்!” பிறகு அவர்களுக்கிடையே ஒரு தடுப்புச்சுவர் எழுப்பப்படும். அதில் ஒரு கதவு இருக்கும். அந்தக் கதவுக்கு உட்புறத்தில் கருணை இருக்கும். அதன் வெளிப்புறத்தில் வேதனை இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(வேஷதாரிகளான_) முனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் விசுவாசங்கொண்டவர்களிடம், “நீங்கள் (முன் செல்லாது எங்களுக்காகச் சிறிது தாமதித்து) எங்களைப் பாருங்கள், உங்களுடைய பிரகாசத்திலிருந்து நாங்கள் (கொஞ்சம் ஒளியை) எடுத்துக்கொள்கிறோம்” என்று கூறும் நாளில், (அவர்களிடம்,) “நீங்கள் உங்கள் பின்புறம் (திரும்பிச்) சென்று பிராகசத்தைத் தேடிக்கொள்ளுங்கள்” என்று கூறப்படும், அப்பொழுது அவர்களுக்கிடையில் ஒரு தடுப்பு எழுப்பப்படும். அதற்கு வாசலும் இருக்கும், (விசுவாசிகள் இருக்கக்கூடிய) அதன் உட்புறம் _அதில் (அல்லாஹ்வின்) அருளும், அதன் வெளிப்புறம்_அதன் பக்கமிருந்து வேதனையும் இருக்கும்.
இவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள்; “மெய்தான்; எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள்; (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன; அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்” என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி ‘‘உலகத்தில்) நாங்கள் உங்களுடன் சேர்ந்திருக்க வில்லையா?'' என்று சப்தமிட்டுக் கூறுவார்கள். அதற்கவர்கள் (இவர்களை நோக்கி) ‘‘மெய்தான். ஆயினும், நீங்களே உங்களைத் துன்பத்திற்குள்ளாக்கிக் கொண்டீர்கள். (நாங்கள் அழிந்து போவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள்; (இந்நாளைப் பற்றியும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும் வரை, உங்கள் பேராசைகள் உங்களை மயக்கி விட்டன! மாயக்கார (ஷைத்தா)ன் அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கிவிட்டான்.
IFT
அவர்கள் நம்பிக்கையாளர்களைக் கூப்பிட்டுக் கேட்பார்கள்: “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” அதற்கு நம்பிக்கையாளர்கள் பதிலளிப்பார்கள்: “ஆம்! ஆனால், நீங்களே உங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டீர்கள். சந்தர்ப்பவாதிகளாய் இருந்தீர்கள்; ஐயத்தில் உழன்றுகொண்டிருந்தீர்கள். மேலும், வீணான எதிர்பார்ப்புகள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தன. இறுதியில் அல்லாஹ்வின் தீர்ப்பு வந்துவிட்டது. மேலும் (இறுதி வரை) அந்தப் பெரும் ஏமாற்றுக்காரன் (ஷைத்தான்) உங்களை அல்லாஹ்வின் விஷயத்தில் ஏமாற்றிக்கொண்டிருந்தான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் (உலகத்தில்) “நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (விசுவாசிகளாகிய) அவர்களை அழைப்பார்கள், (அதற்கு) அவர்கள், (இவர்களிடம்) “மெய்தான்! ஆயினும், நீங்களே உங்களை (நயவஞ்சகத்தால்) துன்பத்திற்குள்ளாகிக் கொண்டீர்கள், அன்றியும், (நாங்கள் அழிக்கப்படுவதை) நீங்கள் எதிர்பார்த்தீர்கள், (அல்லாஹ்வின் ஏகத்துவத்திலும், நபியின் தூதிலும்) நீங்கள் சந்தேகித்துக் கொண்டுமிருந்தீர்கள், அல்லாஹ்வுடைய கட்டளை(யாகிய மரணம்) வரும்வரையில், (உங்களுடைய) பேராசைகள் உங்களைச் சதிசெய்தும் விட்டன, மேலும், ஏமாற்றுகிறவ(னாகிய ஷைத்தா)ன், அல்லாஹ்வைப்பற்றி உங்களை ஏமாற்றியும் விட்டான்.
“ஆகவே, இன்று உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது; உங்களுடைய தங்குமிடம் நரகம் தான்; அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்” (என்றுங் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, இன்றைய தினம் உங்களிடமிருந்தோ அல்லது (உங்களைப் போல்) நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வேதனைக்குப் பதிலாக) எதையும் பரிகாரமாகப் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது. நீங்கள் செல்லுமிடம் நரகம்தான். (நரக) நெருப்புத்தான் உங்களுக்குத் துணை'' (என்றும் கூறப்படும்). அது தங்குமிடங்களில் எல்லாம் மகா கெட்டது.
IFT
எனவே, இன்று உங்களிடமிருந்து ஈடு எதுவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், எவர்கள் வெளிப்படையாக நிராகரித்திருந்தார்களோ, அவர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. நரகமே உங்களுடைய இருப்பிடம் ஆகும். அதுவே உங்களைக் கவனித்துக் கொள்ளும். மேலும், இது மிக மோசமான கதியாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, இன்றையத் தினம் உங்களிடமிருந்தோ, அல்லது நிராகரித்தவர்களிடமிருந்தோ (நீங்கள் அடையவேண்டிய தண்டனைக்குப் பதிலாக) யாதொரு நஷ்ட ஈடும் எடுக்கப்படமாட்டாது, நீங்கள் தங்குமிடம் நரகந்தான், அதுதான் உங்களுக்குத் துணை, சென்றடையும் இடமான அது மிகக்கெட்டது (என்று கூறப்படும்).
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கை கொண்டவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைத்தும், அவன் இறக்கிவைத்த சத்திய (வசன)ங்களைக் கவனித்தும் பயப்படக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? இவர்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல், இவர்களும் ஆகிவிட வேண்டாம். (இவ்வாறே) அவர்கள் மீதும் ஒரு நீண்ட காலம் கடந்து விட்டது. ஆகவே, அவர்களுடைய உள்ளங்கள் கடினமாக இருகிவிட்டன. இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பாவிகளாகி விட்டனர்.
IFT
நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவினால் உருகுவதற்கும், அவன் இறக்கி வைத்த சத்தியத்தின் முன் பணிவதற்கும் நேரம் இன்னும் வரவில்லையா? மேலும், முன்னர் வேதம் வழங்கப்பட்டவர்களைப் போன்று அவர்கள் ஆகிவிட வேண்டாம். (பிறகு) நீண்டகாலம் அவர்கள் மீது உருண்டு ஓடிவிட்டபொழுது அவர்களின் இதயங்கள் இறுகிப்போய் விட்டன. (இன்று) அவர்களில் பெரும்பாலோர் தீயவர்களாகி விட்டிருக்கின்றனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டிருந்தோருக்கு, அவர்களது இதயங்கள், அல்லாஹ்வையும், உண்மையிலிருந்து இறங்கிய (வேதத்)தையும் நினைவு கூர்வதற்காக, பயந்து நடுங்கக்கூடிய நேரம் (இன்னும்) வரவில்லையா? மேலும், இவர்களுக்கு முன்னர் வேதங்கொடுக்கப்பட்டோரைப் போன்று இவர்களும் ஆகிவிடவேண்டாம், பின்னர், அவர்கள் மீது (நபிமார்கள் வருகையின்) ஒரு காலம் நீண்டுவிட்டது, ஆகவே, அவர்களுடைய இதயங்கள் கடினமாகிவிட்டன, மேலும், அவர்களில் பெரும்பாலோர் பாவிகள்.
அறிந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ்தான், இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறான் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டே, நிச்சயமாக அவன் பல உதாரணங்களை உங்களுக்குத் தெளிவாக்கி இருக்கிறான்.
IFT
நன்கறிந்து கொள்ளுங்கள்: பூமிக்கு அது இறந்துவிட்ட பிறகு அல்லாஹ் உயிரூட்டுகின்றான். நாம் சான்றுகளை உங்களுக்குத் தெளிவாக விளக்கிக் காட்டியுள்ளோம், நீங்கள் சிந்தித்து உணர்வதற்காக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) நிச்சயமாக அல்லாஹ், பூமியை_அது (வறண்டு) இறந்ததன் பின்னர் அவன் உயிர்ப்பிக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக நிச்சயமாக (நம்முடைய) வசனங்களை நாம் உங்களுக்குத் தெளிவாக்கியிருக்கின்றோம்.
நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக ஆண்களிலோ, பெண்களிலோ எவர்கள் தானம் செய்து அழகான முறையில் அல்லாஹ்வு(க்காகப் பிறரு)க்கு கடன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு, அது பன் மடங்காக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு மிக்க கண்ணியமான கூலியுமுண்டு.
IFT
ஆண்கள் மற்றும் பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா தான தருமங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக பன்மடங்கு அதிகம் வழங்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் இருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக தர்மம் செய்யும் ஆண்களும், தர்மம் செய்யும் பெண்களும், அல்லாஹ்வுக்காக(ப் பிறருக்குப் பொருளை) அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும்_அவர்களுக்கு அது இரு மடங்காக (அதன் பலன்) ஆக்கப்படுகின்றது, இன்னும் அவர்களுக்கு மிக்க கண்ணியமான (நற்)கூலியும் உண்டு.
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள்; அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) பேரொளியும் உண்டு; எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள்தான்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் மெய்யாகவே நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள்தான் ‘ஸித்தீக்' என்ற உண்மையாளர்கள். சன்மார்க்கப் போரில் உயிர்த்தியாகம் செய்த ‘ஷஹீது' என்பவர்கள் தங்கள் இறைவனிடத்தில் இருப்பார்கள். மேலும், அவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கூலி (குறைவின்றி) உண்டு. (நேரான வழியை அறிவிக்கக்கூடிய) பிரகாசமும் உண்டு. எவர்கள் நம் வசனங்களை நிராகரித்துப் பொய்யாக்குகிறார்களோ, அவர்கள் நரகவாசிகள்தான்.
IFT
மேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்களோ, அவர்களே தம் இறைவனிடத்தில் ‘ஸித்தீக்கு’ (வாய்மை மிக்கவர்களாகவும்) ‘ஷஹீத்’ (சான்றுபகர்பவர்களாகவும்) இருக்கின்றார்கள். அவர்களுக்காக அவர்களின் கூலியும் ஒளியும் இருக்கின்றன. எவர்கள் நிராகரித்தார்களோ, மேலும், நம்முடைய வசனங்களைப் பொய்யெனத் தூற்றினார்களோ அவர்கள் நரகவாசிகளாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசிக்கின்றார்களே அத்தகையோர்_ அவர்கள்தாம் தங்கள் இரட்சகனிடத்தில் உண்மைப்படுத்தியவர்களும், (தியாகிகளான) ஷூஹதாக்களும் ஆவர் (மேற் கூறப்பட்ட இருசாரர்களாகிய) அவர்களுக்கு அவர்களுடைய கூலியும், (அவர்களுக்கு வழியை அறிவிக்கக் கூடிய) அவர்களுடைய பிரகாசமும் உண்டு, இன்னும், நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகின்றார்களே அத்தகையோர்_ அவர்கள் நரக வாசிகள்.
அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும்; மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும்; பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும்; (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும்; (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது; ஆனால், சீக்கிரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கின்றீர்; பின்னர் அது கூளமாகி விடுகிறது; (உலக வாழ்வும் இத்தகையதே; எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையான வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.
அப்துல் ஹமீது பாகவி
(மனிதர்களே!) நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் இவ்வுலக வாழ்க்கையெல்லாம் வீண் விளையாட்டும், வேடிக்கையும், வெறும் அலங்காரமும்தான். தவிர உங்களுக்கிடையில் ஏற்படும் வீண் பெருமையும், பொருளிலும் சந்ததியிலும் அதிகரிக்க வேண்டுமென்ற வீண் எண்ணமும்தான். (இதன் உதாரணமாவது:) ஒரு மழையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அந்த மழையினால் முளைத்த பயிர்கள் (நன்கு வளர்ந்து) விவசாயிகளுக்குக் களிப்பை உண்டு பண்ணிக்கொண்டிருந்தன. பின்னர், அவை மஞ்சனித்துக் காய்ந்து, சருகுகளாகிவிடுவதை நீர் காண்கிறீர். (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது.) மறுமையிலோ (அவர்களில் பலருக்குக்) கொடிய வேதனையும், (பலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவனது திருப்பொருத்தமும் கிடைக்கின்றன. ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமே தவிர வேறில்லை.
IFT
நன்கு அறிந்து கொள்ளுங்கள்: இந்த உலக வாழ்க்கை விளையாட்டும், கேளிக்கையும், வெளிப்பகட்டும் மற்றும் உங்களிடையே ஒருவருக்கொருவர் பெருமையடித்துக் கொள்ளுதல், செல்வங்கள், குழந்தைகள் ஆகியவற்றில் ஒருவரையொருவர் மிஞ்சிவிட முற்படுதலுமேயன்றி வேறில்லை. அதற்கான உவமை: மழை பொழிந்திடும்போது அதன்மூலம் விளைகின்ற தாவரங்களைப் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைவது போன்றதாகும். பின்னர், அதே பயிர் காய்ந்துவிடுகின்றது. அது மஞ்சளித்துப் போவதையும், பின்னர், பதராகிவிடுவதையும் நீர் பார்க்கலாம். (இதற்கு மாறாக) மறுமை எத்தகைய இடமெனில், அங்கு கடும் தண்டனை இருக்கிறது. அல்லாஹ்வின் மன்னிப்பும் திருப்தியும் இருக்கின்றன. ஆனால், உலக வாழ்க்கை ஓர் ஏமாற்றுச் சாதனமே தவிர வேறெதுவுமில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(மனிதர்களே!) நீங்கள் அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கையெல்லாம் விளையாட்டும், வீணும், அலங்காரமும், (அது) உங்களுக்கிடையில் பெருமையடித்துக் கொள்வதும், செல்வங்களிலும், பிள்ளைகளிலும் (ஒருவருக்கொருவர்) அதிகபடுத்திக் கொள்வதும்தான். (இந்நிலை) ஒரு மழையைப் போன்றாகும், (அதன் மூலம் முளைத்த) பயிர்கள் நன்கு வளர்ந்து விவசாயிகளை அதிசயத்தில் ஆழ்த்தியது, பின்னர், அது காய்ந்து விடுகிறது, (அப்போது) அதை மஞ்சளாகிவிடுவதை நீர் காண்கின்றீர், பின்னர் அது சருகுகளாகிவிடுகின்றது (இவ்வுலக வாழ்க்கையும் அவ்வாறே இருக்கிறது), மறுமையிலோ, (அவர்களின் பலருக்குக்) கொடிய வேதனையும், (சிலருக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், பொருத்தமும் கிடைக்கின்றன, ஆகவே, இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் (சொற்ப) இன்பமேயன்றி வேறில்லை.
உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (மனிதர்களே!) நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பை நோக்கியும், சொர்க்கத்தை நோக்கியும் முந்திச் செல்லுங்கள். அச்சொர்க்கத்தின் விசாலமோ வானம், பூமியின் விசாலத்தைப்போல் இருக்கிறது. அது அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காகவே தயார்படுத்தப்பட்டிருக்கிறது. இது அல்லாஹ்வுடைய அருளாகும். இதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளாளன்!
IFT
ஓடுங்கள்; ஒருவரையொருவர் முந்திச் செல்வதற்கு முயலுங்கள்; உங்கள் இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் வானம், பூமியின் அளவிற்கு விசாலமான சுவனத்தை நோக்கியும்! அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக அது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. இது அல்லாஹ்வின் அருளாகும். தான் நாடுகின்றவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே மனிதர்களே!) உங்கள் இரட்சகனின் மன்னிப்பின் பக்கமும், சுவனபதியின் பக்கமும் நீங்கள் முந்துங்கள், அதன் அகலம், வானம் மற்றும் பூமியின் அகலத்தைப் போன்றதாகும், அது அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் விசுவாசங்கொண்டோருக்காக தயாராக்கப்பட்டிருக்கின்றது. அது அல்லாஹ்வுடைய பேரருளாகும்_அதனை அவன், தான் நாடியவருக்குக் கொடுக்கின்றான், மேலும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.
அப்துல் ஹமீது பாகவி
(பொதுவாக) பூமியிலோ அல்லது (குறிப்பாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தச் சிரமமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே!
IFT
பூமியில் ஏற்படுகின்ற அல்லது உங்களின் மீது இறங்குகின்ற எந்தத் துன்பமானாலும் அதனை நாம் உருவாக்குவதற்கு முன்பு அதைக்குறித்து ஒரு சுவடியில் (அதாவது விதி ஏட்டில்) எழுதி வைக்காமல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எந்தத் துன்பமும்_அதனை நாம் சிருஷ்டிப்பதற்கு முன்னதாக, (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) புத்தகத்தில் (பதியப்பட்டு) இருந்தே தவிர_பூமியிலோ, அல்லது உங்களிலோ ஏற்படுவதில்லை, நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக்க எளிதானதாகும்.
உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
அப்துல் ஹமீது பாகவி
உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை.
IFT
(இவையனைத்தும்) எதற்காகவெனில், உங்களுக்கு எந்த நஷ்டம் ஏற்பட்டாலும் நீங்கள் மனம் துவண்டுவிடக்கூடாது. மேலும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருப்பவற்றைக் கொண்டு நீங்கள் பூரித்துப்போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்! தம்மையே பெரிதாக நினைத்துக் கொள்கின்ற, பெருமை பேசித்திரிகின்ற யாரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
உங்களுக்கு தவறிவிட்டதின் மீது நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காகவும், (அல்லாஹ்வாகிய) அவன் உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் (வரம்புமீறி) மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் (இதனை உங்களுக்கு அறிவிக்கின்றான்), கர்வங்கொண்டு, தற்பெருமையடிப்போர் ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
எவர்கள் உலோபித்தனம் செய்து உலோபித்தனம் செய்யுமாறு மனிதர்களையும் ஏவுகிறார்களோ; எவர் (அல்லாஹ்வின் கட்டளைகளைப்) புறக்கணிக்கிறாரோ - (இவர்களே நஷ்டவாளிகள்.) நிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
எவர்கள் கஞ்சத்தனம் செய்து, மற்ற மனிதர்களையும் கஞ்சத்தனம் செய்யும்படி தூண்டுகிறார்களோ (அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு. ஆகவே, அல்லாஹ்வுடைய கட்டளைகளை) எவன் புறக்கணிக்கிறானோ (அது அவனுக்குத்தான் நஷ்டத்தை உண்டுபண்ணும். அல்லாஹ்வுக்கு ஒரு நஷ்டமும் ஏற்படாது.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ்தான் பெரும் சீமான், பெரும் புகழுடையவன் ஆவான்.
IFT
இவர்களோ தாமும் கஞ்சத்தனம் செய்கின்றார்கள்; பிறரையும் கஞ்சத்தனம் செய்திடத் தூண்டுகின்றார்கள். இனி எவரேனும் புறக்கணித்தால் திண்ணமாக, அல்லாஹ் தேவைகள் அற்றவனாகவும் மாபெரும் புகழுக்குரிய தன்மைகள் கொண்டவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் எத்தகையோரென்றால், உலோபத்தனம் செய்வார்கள், (மற்ற) மனிதர்களையும் உலோபத்தனத்தைக் கொண்டு ஏவுவார்கள், இன்னும், எவர் (தன் பொருளைச் செலவு செய்வதிலிருந்து) புறக்கணித்து விடுகிறாரோ, அப்பொழுது நிச்சயமாக அல்லாஹ்_அவனே தேவையற்றவன், பெரும் புகழுடையவன்.
நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம்; இன்னும், இரும்பையும் நாம் இறக்கினோம்; அதில் கடினமான சக்தியும் மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாக உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
நாம் நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்து கொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இன்னும், இரும்பையும் நாமே இறக்கினோம். அதில் பெரும் சக்தி இருக்கிறது; இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்கிறான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனும் ஆவான்.
IFT
நாம் நம் தூதர்களைத் தெளிவான சான்றுகளுடனும், வழிகாட்டுதல்களுடனும் அனுப்பினோம்; மேலும், அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும், துலாக்கோலையும் இறக்கினோம். மக்கள் நீதியில் நிலைத்திருக்கும் பொருட்டு! மேலும், இரும்பையும் இறக்கினோம்; அதில் பெரும் வலிமை உள்ளது. மக்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. (இவ்வாறெல்லாம் செய்யப்பட்டது எதற்காகவெனில்) அல்லாஹ்வைப் பார்க்காமலே அவனுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் கண்டறிவதற்காகத்தான்! திண்ணமாக அல்லாஹ் பேராற்றல் கொண்டவனாகவும், வல்லமை மிக்கவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம், நம்முடைய தூதர்களை (அத்தாட்சிகளில்) தெளிவானவற்றுடன் அனுப்பிவைத்தோம், அவர்களுடன் வேதத்தையும், மனிதர்கள் நீதியைக் கொண்டு நிலைத்திருப்பதற்காக தராசையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் நாமே இறக்கினோம், அதில் (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும், மனிதர்களுக்குப் பயன்களும் இருக்கின்றன. இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோர் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வதற்காகவும் (இவ்வாறு செய்துள்ளான்), நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.
அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
நூஹையும், இப்ராஹீமையும் மெய்யாகவே நாம்தான் நம் தூதர்களாக அனுப்பி வைத்தோம். அவ்விருவர்களுடைய சந்ததிகளுக்குள்ளாகவே நபிப்பட்டத்தையும் வேதத்தையும் (சொந்தமாக) ஆக்கினோம். ஆயினும், நேரான வழியில் சென்றவர்கள் அவர்க(ள் சந்ததிக)ளில் சிலர்தான். அவர்களில் பெரும்பாலரோ பாவிகளாகிவிட்டனர்.
IFT
நாம் நூஹையும் இப்ராஹீமையும் அனுப்பினோம்; அவர்களின் வழித்தோன்றல்களில் தூதுத்துவத்தையும், வேதத்தையும் வைத்துவிட்டோம். பின்னர் அவர்களுடைய வழித்தோன்றல்களில் சிலர் நேர்வழியை மேற்கொண்டனர். அவர்களில் பலர் தீயவர்களாகிவிட்டனர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், நூஹையும், இப்றாஹீமையும் திட்டமாக நாம் (நம்முடைய தூதர்களாக) அனுப்பிவைத்தோம், அவ்விருவருடைய சந்ததியில் நபித்துவத்தையும், வேதத்தையும் ஆக்கியிருந்தோம், அவர்களில் நேர்வழி பெற்றோரும் இருந்தனர், இன்னும் அவர்களில் பெரும்போலோர் பாவிகளாக இருந்தனர்.
பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம்; ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்கவில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பேணவில்லை - அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (சென்றுபோன நூஹ், இப்ராஹீமுக்குப் பின்னர்) அவர்களுடைய வழியைப் பின்பற்றி (நடக்கக்கூடிய பல) தூதர்களை ஒருவருக்குப் பின் ஒருவராக அனுப்பி வைத்தோம். அவ்வாறே, மர்யமுடைய மகன் ஈஸாவையும் (அவர்களுக்குப் பின்னர், அவர்களைப் பின்பற்றி நடக்குமாறு) அனுப்பிவைத்தோம். அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் இவரைப் பின்பற்றியவர்களுடைய உள்ளங்களில், கருணையையும் இரக்கத்தையும் உண்டு பண்ணினோம். (உலகத்தின் எல்லா இன்பங்களையும் துறந்து விடக்கூடிய) துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக விதிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி, அவர்களே அதை உண்டுபண்ணிக்கொண்டார்கள். அவ்வாறிருந்தும், அதை அனுசரிக்க வேண்டிய முறைப்படி அவர்கள் அனுசரிக்கவில்லை. ஆயினும், (நபியே!) அவர்களில் எவர்கள் (மெய்யாகவே உம்மை) நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுடைய கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (நபியே! உம்மை நிராகரிக்கின்ற) பாவிகளாகவே இருக்கின்றனர்.
IFT
அவர்களுக்குப் பின் ஒருவர் பின் ஒருவராக நம் தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களுக்குப் பிறகு மர்யமின் குமாரர் ஈஸாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை வழங்கினோம். மேலும், எவர்கள் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களின் உள்ளங்களில் நாம் பரிவையும் கருணையையும் ஏற்படுத்தினோம். மேலும், துறவுக்கோட்பாட்டை அவர்களாகவே தோற்றுவித்துக் கொண்டார்கள். நாம் அதனை அவர்கள்மீது கடமையாக்கவில்லை. ஆயினும், அல்லாஹ்வின் திருப்தியைப் பெறும் பொருட்டு அவர்கள் தாமாகவே இந்த நூதன முறையைத் தோற்றுவித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் எப்படி அதனைப் பேணவேண்டுமோ அப்படி அதனைப் பேணவில்லை. அவர்களில் யார் இறைநம்பிக்கை கொண்டிருந்தார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலியை நாம் வழங்கினோம். எனினும், அவர்களில் அநேகர் தீயவர்களாவர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, அவர்களுக்குப்) பின்னர், அவர்களுடைய (அடிச்)சுவடுகளின் மீது (ஏனைய) தூதர்களை ஒருவர் பின் ஒருவராக நாம் தொடரச் செய்தோம், அவ்வாறே மர்யமுடைய மகன் ஈஸாவையும் நாம் தொடரச் செய்தோம், அவருக்கு இன்ஜீலையும் (வேதமாக) நாம் கொடுத்தோம், இவரைப் பின்பற்றி இருந்தவர்களுடைய இதயங்களில், இரக்கத்தையும், கிருபையையும் நாம் ஆக்கினோம், இன்னும் துறவறத்தை_அதை அவர்கள் புதிதாக உண்டாக்கிக் கொண்டார்கள், அதை அவர்கள் மீது (கடமையாக) நாம் விதிக்கவில்லை, எனினும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடியே (அவர்கள் அதனை உண்டாக்கிக் கொண்டார்கள்). பின்னர், அதனைப் பேணுகின்ற முறைப்படி அவர்கள் அதைப்பேணவில்லை, (அதன்) பின், (நபியே!) அவர்களில் விசுவாசம் கொண்டிருந்தார்களே அத்தகையோருக்கு_அவர்களுடைய கூலியை நாம் கொடுத்தோம், (எனினும்,) அவர்களில் பெரும்பாலோர் (நீர் கொண்டுவந்ததை நிராகரிக்கும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான்; அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள்; இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபை உடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, (ஈஸாவை) நம்பிக்கை கொண்ட (கிறிஸ்த)வர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய இத்தூதரை (முஹம்மதை)யும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து (ஈஸாவை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், இத்தூதரை நம்பிக்கை கொண்டதற்கு ஒரு பங்கும், ஆக) இரண்டு பங்கு கூலி கொடுப்பான். உங்களுக்கு (நேரான வழியை அறிவிக்கக்கூடிய இந்த குர்ஆன் என்னும்) ஒளியையும் கொடுப்பான். அதன் பிரகாசத்தைக் கொண்டு நீங்கள் (நேரான வழியில்) செல்லலாம். (உங்கள்) குற்றங்களையும் உங்களுக்கு மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான்.
IFT
இறைநம்பிக்கைகொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! அவனுடைய தூதர் (முஹம்மத் (ஸல்)) மீது நம்பிக்கையும் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்குத் தன் கருணையிலிருந்து இரு மடங்கை வழங்குவான். மேலும், உங்களுக்கு ஒளியையும் அருளுவான்; அந்த ஒளியில் நீங்கள் நடந்து செல்வீர்கள். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான் அல்லாஹ் பெரிதும் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, (ஈஸாவை) விசுவாசம் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து, அவனுடைய (இத்)தூதரையும் விசுவாசியுங்கள், உங்களுக்கு அவனுடைய அருளிலிருந்து இரண்டு பங்கு (கூலி) கொடுப்பான், உங்களுக்கு ஒளியையும் அவன் ஆக்குவான், நீங்கள் அதனைக் கொண்டு (நேர் வழியில்) நடப்பீர்கள், (உங்களுடைய பாவங்களையும்) உங்களுக்காக அவன் மன்னிப்பான், மேலும், அல்லாஹ் மிக்க மன்னிக்கிறவன், மிகக் கிருபையுடையவன்.
அல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்); அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது; தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
(இத்தூதரை நம்பிக்கை கொண்டவர்களுக்கு) அல்லாஹ்வுடைய அருளில் ஒரு பாகமும் கிடைக்காதென்று, வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இதை அவன் உங்களுக்கு அறிவித்தான்). அருள் அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் தான் இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு அதை அளிக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
IFT
(இப்படிப்பட்ட நடத்தையை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.) வேதம் அருளப்பட்டவர்கள் இவற்றை அறிந்து கொள்வதற்காக: ‘அல்லாஹ்வின் அருளில் அவர்களுக்கு எந்தக் குத்தகையும் இல்லை; மேலும், அல்லாஹ்வின் அருள் அவனுடைய கையில்தான் இருக்கிறது. தான் நாடுபவர்களுக்கு அதனை அவன் வழங்குகின்றான். மேலும், அல்லாஹ் பேரருள் உடையவனாகவும் இருக்கின்றான்.’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(விசுவாசம் கொண்டோர்க்கு) அல்லாஹ்வுடைய பேரருளிருந்து (கிடைத்த) எப்பொருளின் மீதும் (அதைப்பெற வேதக்காரர்களாகிய) அவர்கள் சக்தி பெறமாட்டார்கள் என வேதத்தையுடையவர்கள் அறிந்து கொள்வதற்காக (இதனை அவன் உங்களுக்கு அறிவித்தான்), மேலும், பேரருள் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில் இருக்கிறது, அவன் நாடியவர்களுக்கு அதனை அளிக்கின்றான், மேலும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.