1
یُسَبِّحُ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الْاَرْضِ الْمَلِكِ الْقُدُّوْسِ الْعَزِیْزِ الْحَكِیْمِ ۟
முஹம்மது ஜான்
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன; (அவன்தான்) மெய்யான பேரரசன்; பரிசுத்தமானவன்; யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை புகழ்கின்றன. (அவன்தான்) மெய்யான அரசன்; பரிசுத்தமானவன்; (அனைவரையும்) மிகைத்தவன்; ஞானமுடையவன் ஆவான்.
IFT
அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றன வானங்களில் உள்ள ஒவ்வொன்றும்; பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! அவன் அரசனாக இருக்கிறான். மிகவும் தூய்மையானவன்; யாவரையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. (அவன்தான்) பேரரசன், பரிசுத்தமானவன், (யாவரையும்) மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
2
هُوَ الَّذِیْ بَعَثَ فِی الْاُمِّیّٖنَ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِهٖ وَیُزَكِّیْهِمْ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ ۗ وَاِنْ كَانُوْا مِنْ قَبْلُ لَفِیْ ضَلٰلٍ مُّبِیْنٍ ۟ۙ
முஹம்மது ஜான்
அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய வசனங்களை ஓதிக்காட்டி, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்பிக்கும் படியான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான்; அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
கல்வி அறிவில்லாத (அரபு) மக்களில் அவர்களில் உள்ள ஒருவரை அவன் (தன்) தூதராக அனுப்பி வைத்தான். அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தபோதிலும், அத்தூதர் அவர்களுக்கு அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி வைத்து, அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.
IFT
அவன்தான் உம்மிகளிடையே* ஒரு தூதரை அவர்களிலிருந்தே தோற்றுவித்தான். அவர் எத்தகையவர் எனில், அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுகின்றார்; அவர்களின் வாழ்க்கையைத் தூய்மைப்படுத்துகின்றார். மேலும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார். ஆனால், அவர்களோ இதற்கு முன்பு வெளிப்படையான வழிகேட்டில் வீழ்ந்து கிடந்தார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவன் எத்தகையவனென்றால், எழுத்தறிவில்லாத (அரபி) சமூகத்தார்களில், அவர்களிலிருந்தே ஒரு தூதரைத் தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்தான். அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காண்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைத்து, அவர்களுக்கு வேதத்தையும், தீர்க்கமான அறிவை (சுன்னத்தையும்) கற்றுக் கொடுக்கின்றார், நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.
3
وَّاٰخَرِیْنَ مِنْهُمْ لَمَّا یَلْحَقُوْا بِهِمْ ؕ وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟
முஹம்மது ஜான்
(இவர்களுக்காகவும்), இவர்களுடன் சேராத (பிற்காலத்த)வர்களுக்காகவும், (தூதராக அனுப்பி வைத்தான்) அவன் (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
(தற்காலமுள்ள இவர்களுக்காகவும்) இதுவரை இவர்களுடன் சேராத இவர்கள் இனத்தில் (பிற்காலத்தில் வரும்) மற்றவர்களுக்காகவும் (அத்தூதரை அனுப்பிவைத்தான்). அவன் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனும் ஆவான்.
IFT
இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதர் தோற்றுவிக்கப்பட்டுள்ளார்). அல்லாஹ் வல்லமைமிக்கவனாகவும் நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அவர்களிலிருந்து (தோன்றக்கூடியவர்களும்) இதுவரை அவர்களுடன் சேராத(வர்களும் உலக முடிவுவரை தோன்றக் கூடியவர்களுமான) மற்றுமுள்ளோருக்கும் (தூதராக அவரை அல்லாஹ் அனுப்பி வைத்தான்) அவனோ யாவரையும் மிகைத்தோன், தீர்க்கமான அறிவுடையோன்.
4
ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟
முஹம்மது ஜான்
அதுவே அல்லாஹ்வின் அருளாகும், தான் விரும்பியவர்களுக்கு அதை அவனளிக்கிறான்; மேலும் அல்லாஹ் மகத்தான அருளுடையவன்.
அப்துல் ஹமீது பாகவி
இது அல்லாஹ்வுடைய அருளாகும். அவன் விரும்பியவர்களுக்கே இதைக் கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்.
IFT
இது அவனுடைய அருள். தான் நாடுகின்றவர்களுக்கு இதனை அவன் வழங்குகின்றான். மேலும், அவன் மகத்தான அருளைப் பொழிபவனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அது அல்லாஹ்வுடைய பேரருளாகும், அவன் நாடியவர்களுக்கு அதனைக் கொடுக்கின்றான், மேலும், அல்லாஹ் மகத்தான பேரருளுடையவன்.
5
مَثَلُ الَّذِیْنَ حُمِّلُوا التَّوْرٰىةَ ثُمَّ لَمْ یَحْمِلُوْهَا كَمَثَلِ الْحِمَارِ یَحْمِلُ اَسْفَارًا ؕ بِئْسَ مَثَلُ الْقَوْمِ الَّذِیْنَ كَذَّبُوْا بِاٰیٰتِ اللّٰهِ ؕ وَاللّٰهُ لَا یَهْدِی الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟
முஹம்மது ஜான்
எவர்கள் தவ்ராத் (வேதம்) சுமத்தப்பெற்று பின்னர் அதன்படி நடக்கவில்லையோ, அவர்களுக்கு உதாரணமாவது: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்திற்கு ஒப்பாகும்; எச்சமூகத்தார் அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பிக்கிறார்களோ அவர்களின் உதாரணம் மிகக் கெட்டதாகும் - அல்லாஹ் அநியாயக்கார சமூகத்தாரை நேர்வழியில் செலுத்தமாட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
‘தவ்றாத்' என்னும் வேதத்தைச் சுமந்து கொண்டு, அதிலுள்ளபடி நடக்காதவர்களின் உதாரணம்: புத்தகங்களைச் சுமக்கும் கழுதையின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கும் மக்களின் இவ்வுதாரணம் மகா கெட்டது. அல்லாஹ் இத்தகைய அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்தமாட்டான்.
IFT
எந்த மக்கள் மீது ‘தவ்ராத்’ சுமத்தப்பட்டதோ பின்னர் அவர்கள் அதன் பொறுப்பை ஏற்றுச் செயல்படவில்லையோ அந்த மக்களின் உதாரணம், வேதங்களைச் சுமக்கின்ற கழுதையைப் போன்றதாகும். அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யென்று தூற்றிய மக்களின் உதாரணம் இதனைவிட மோசமானதாகும். இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“தவ்றாத்”தைச் சுமத்தப்பட்டுப் பின்னர், அதிலுள்ளவாறு செயல்படாதவர்களின் உதாரணம்: ஏடுகளைச் சுமக்கும் கழுதையின் உதராணத்தைப் போன்றதாகும், அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யாக்கியவர்களான சமூகத்தாரின் இவ்வுதாரணம் மிகக்கெட்டது, அல்லாஹ்வோ அநியாயக்கார சமூகத்தாரை நேர் வழியில் செலுத்தமாட்டான்.
6
قُلْ یٰۤاَیُّهَا الَّذِیْنَ هَادُوْۤا اِنْ زَعَمْتُمْ اَنَّكُمْ اَوْلِیَآءُ لِلّٰهِ مِنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟
முஹம்மது ஜான்
(நபியே!) நீர் கூறுவீராக: யஹூதிகளே! மற்ற மனிதர்களைவிட நீங்கள் தாம் அல்லாஹ்வுக்குப் பிரியமானவர்கள் என்று எண்ணுவீர்களானால், மேலும் (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையாளராக இருப்பின், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.”
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நீர் கூறுவீராக: ‘‘யூதர்களே! நீங்கள் மற்ற மனிதர்களைவிட அல்லாஹ்வுக்குச் சொந்தமானவர்கள் என்று மெய்யாகவே நீங்கள் எண்ணிக்கொண்டிருந்து, அந்த எண்ணத்தில் நீங்கள் உண்மையானவர்களாகவும் இருந்தால், நீங்கள் மரணத்தை விரும்புங்கள்.''
IFT
(இவர்களிடம்) கூறும்: “யூதர்களாக ஆகிவிட்டவர்களே! மக்கள் அனைவரையும்விட நீங்கள்தாம் அல்லாஹ்வின் அன்பிற்குரியவர்கள் என்று கர்வத்துடன் எண்ணுவீர்களானால் உங்கள் கருத்தில் நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால், மரணத்தை விரும்புங்கள்!”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“யூதர்களே! (மற்ற) மனிதர்களன்றி நீங்கள் தான் அல்லாஹ்வின் நண்பர்களென்று நிச்சயமாக நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தால், (அவ்வெண்ணத்தில்) நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் நீங்கள் மரணத்தை விரும்புங்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக!
7
وَلَا یَتَمَنَّوْنَهٗۤ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟
முஹம்மது ஜான்
ஆனால், அவர்களுடைய கைகள் முற்படுத்தி வைத்த (பாவத்)தின் காரணத்தால், அவர்கள் அதை (மரணத்தை) ஒருக்காலும் விரும்ப மாட்டார்கள். மேலும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் கரங்கள் தேடிக்கொண்ட (பாவத்)தின் காரணமாக, எக்காலத்திலும் இவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். அல்லாஹ் இந்த அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
IFT
ஆனால், அவர்கள் செய்துவிட்ட தீய செயல்களின் காரணத்தால் அதனை அவர்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள். மேலும், அல்லாஹ் இந்தக் கொடுமைக்காரர்களை நன்கு அறிந்தே இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்களின் கரங்கள் முற்படுத்திவைத்ததின் காரணமாக (மரணமாகிய) அதை ஒரு போதும் அவர்கள் விரும்பமாட்டார்கள், மேலும் அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
8
قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِیْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِیْكُمْ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰی عٰلِمِ الْغَیْبِ وَالشَّهَادَةِ فَیُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ۟۠
முஹம்மது ஜான்
“நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! அவர்களை நோக்கி,) கூறுவீராக: ‘‘நீங்கள் வெருண்டோடும் மரணம் உங்களை நிச்சயமாகப் பிடித்துக் கொள்ளும். பின்னர், மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிந்தவனிடம் கொண்டு போகப்பட்டு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்.
IFT
(இவர்களிடம்) கூறும்: “எந்த மரணத்தைவிட்டு நீங்கள் விரண்டோடுகின்றீர்களோ அது திண்ணமாக உங்களை அடைந்தே தீரும். பின்னர், மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவனாகிய இறைவனின் முன் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். மேலும், நீங்கள் என்னவெல்லாம் செய்து கொண்டிருந்தீர்களோ அவற்றை அவன் உங்களுக்கு அறிவித்துத் தருவான்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: நிச்சயமாக நீங்கள் எதைவிட்டும் வெருண்டோடுகிறீர்களோ அத்தகைய மரணம்_நிச்சயமாக அது_உங்களைச் சந்திக்கும், பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிகிறவன் பக்கம் நீங்கள் மீட்டப்படுவீர்கள், அப்போது, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை உங்களுக்கு அவன் அறிவிப்பான்.
9
یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِیَ لِلصَّلٰوةِ مِنْ یَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰی ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَیْعَ ؕ ذٰلِكُمْ خَیْرٌ لَّكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ ۟
முஹம்மது ஜான்
ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.
அப்துல் ஹமீது பாகவி
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆ தொழுகைக்காக (அதான் சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!)
IFT
இறைநம்பிக்கை கொண்டவர்களே! வெள்ளிக்கிழமை யன்று தொழுகைக்காக அழைக்கப்படும்போது அல்லாஹ்வை நினைவுகூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள். கொடுக்கல் வாங்கலை விட்டுவிடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
விசுவாசங்கொண்டோரே! (வெள்ளிக்கிழமையாகிய) ஜூமுஆ தினத்தன்று தொழுகைக்காக (பாங்கு சொல்லி நீங்கள்) அழைக்கப்பட்டால், அப்போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன்பால் நீங்கள் சென்றுவிடுங்கள், வர்த்தகத்தையும் விட்டுவிடுங்கள், நீங்கள் அறிவுடையோர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (இதனை அறிந்துகொள்வீர்களாக!)
10
فَاِذَا قُضِیَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِی الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِیْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ ۟
முஹம்மது ஜான்
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(ஜூமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
IFT
பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டுவிட்டால் பூமியில் பரவிச்செல்லுங்கள்; அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக்கூடும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், (ஜூமுஆத்) தொழுகை நிறைவேற்றுப்பட்டுவிட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று, அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக்கொள்ளுங்கள், மேலும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவு கூருங்கள்.
11
وَاِذَا رَاَوْا تِجَارَةً اَوْ لَهْوَا نْفَضُّوْۤا اِلَیْهَا وَتَرَكُوْكَ قَآىِٕمًا ؕ قُلْ مَا عِنْدَ اللّٰهِ خَیْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ؕ وَاللّٰهُ خَیْرُ الرّٰزِقِیْنَ ۟۠
முஹம்மது ஜான்
இன்னும், (நபியே!) அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே! சிலர் இருக்கின்றனர்;) அவர்கள் ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கையையோ கண்டால், (பிரசங்கம் நிகழ்த்துகின்ற) உம்மை நின்ற வண்ணமாக விட்டுவிட்டு அதனளவில் சென்று விடுகின்றனர். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) நீர் கூறுவீராக: ‘‘அல்லாஹ்விடத்தில் உள்ளது, இந்த வியாபாரத்தையும் வேடிக்கையையும்விட மிக மேலானதாகும், மேலும், உணவு அளிப்பவர்களிலும் அல்லாஹ்தான் மிக மேலானவன்.''
IFT
அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கை நடைபெறுவதையோ பார்த்தபோது அவற்றின் பக்கம் பாய்ந்து சென்றுவிட்டார்கள். மேலும் உம்மை நின்ற நிலையில் விட்டுவிட்டார்கள். (அவர்களிடம்) கூறும்: அல்லாஹ்விடம் இருப்பவை விளையாட்டு, வேடிக்கை மற்றும் வியாபாரத்தைவிடச் சிறந்தவையாகும். மேலும் அல்லாஹ் அனைவரைவிடவும் சிறந்த வாழ்வாதாரம் வழங்குபவனாக இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) ஒரு வியாபாரத்தையோ, அல்லது வேடிக்கயையோ அவர்கள் பார்த்துவிட்டால், அதனளவில் சென்றுவிடுகின்றனர், (குத்பா ஓதும்) உம்மை நின்றவண்ணமாக விட்டும் விடுகின்றனர், (ஆகவே, நபியே! அவர்களிடம்,) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடத்தில் உள்ளது வேடிக்கையையும், வர்த்தகத்தையும் விட மிகச் சிறந்ததாகும், அன்றியும் உணவளிப்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்.”