யோகா என்பது உள்ளத்தையும் உடலையும் ஒருநிலைப்படுத்துவதற்கான ஒரு பயிற்சி முறையாக அறிமுகப்படுத்தப்பட்டாலும், இது அடிப்படையில் இந்து மற்றும் பௌத்த மத அனுஷ்டானங்களோடு நெருக்கமான தொடர்பைக் கொண்டதாகும். யோகா செய்வது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடையே மூன்று விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன: 1. இது மார்க்கத்தில் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட ஒன்று, 2. இது மதத்தோடு தொடர்பற்ற வெறும் பயிற்சி என்பதால் தாராளமாகச் செய்யலாம், 3. சில வரையறைகளோடு செய்வதில் எவ்விதத் தடையுமில்லை.
இந்தக் கருத்து வேறுபாடுகளை ஆய்வு செய்யும்போது, யோகாவின் பல நிலைகளும், ஆசனங்களும், அதனைச் செய்யும் முறைகளும் மாற்று மத வழிபாட்டு முறைகளோடு பெருமளவு ஒத்திருப்பதைக் காண முடிகிறது. "சந்தேகத்திற்குரிய விஷயங்களைத் தவிர்த்துக் கொள்வது சிறந்தது" என்ற மார்க்க அடிப்படையிலும், பிற மத கலாச்சாரங்களோடு ஒத்துப் போகக் கூடாது என்ற எச்சரிக்கையின் அடிப்படையிலும், யோகா பயிற்சி முறையை ஒரு முஸ்லிம் தவிர்த்துக் கொள்வதே பாதுகாப்பானதும் சரியான நிலைப்பாடுமாகும்.