''அலைஹிஸ்ஸலாம்'' (அவர் மீது சாந்தி உண்டாவதாக) என்பது ஆண்பாலுக்கான வார்த்தையாகும்; பெண்பாலுக்கு அதனைக் கூறும்போது ''அலைஹஸ்ஸலாம்'' (அவள் மீது சாந்தி உண்டாவதாக) என்று கூற வேண்டும்.
நாம் பொதுவாக அனைவரையும் பார்த்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறுவது போல, படர்க்கையில் உள்ளவர்களுக்காகக் கேட்கப்படும் ஒரு பிரார்த்தனை வார்த்தையே இதுவாகும். இது நபிமார்களுக்கு மட்டுமே உரிய பிரத்தியேக வார்த்தை அல்ல. குர்ஆனில் மர்யம் (அலை) அவர்களின் தியாகங்கள் மற்றும் அவர்களுக்கு இறைவன் அளித்த கண்ணியம் காரணமாக அவர்கள் தனித்துவமாகப் பேசப்படுகிறார்கள். அதனாலேயே அந்த கண்ணியத்தின் வெளிப்பாடாக அவர்களுக்கு இந்த ஸலாம் கூறப்படும் வழக்கம் ஏற்பட்டது.
முஹம்மது (ஸல்) அவர்களுக்கு ''ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்'' என்று கூறுவது கடமையாகும். ஆனால், மற்றவர்களுக்கு இவ்வாறான பிரார்த்தனை வார்த்தைகளைக் கூறுவது கட்டாயக் கடமையல்ல; விருப்பத்தின் பேரில் கூறலாம். இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு வழக்கமே தவிர, மார்க்க முரணான எந்த அம்சமும் இதில் இல்லை.