ஷேக் முஜாஹித் இப்னு ரஸீன்

இஃதிகாப் (I'tikaf) என்பது மக்கா, மதீனா மற்றும் பைத்துல் முகத்தஸ் ஆகிய மூன்று பிரதான பள்ளிவாசல்களில் மாத்திரமே இருக்க வேண

இஃதிகாப் மஸ்ஜித் 3 பள்ளிகள் நோன்பு

← முந்தையஅடுதது →
கேள்வி
இஃதிகாப் (I'tikaf) என்பது மக்கா, மதீனா மற்றும் பைத்துல் முகத்தஸ் ஆகிய மூன்று பிரதான பள்ளிவாசல்களில் மாத்திரமே இருக்க வேண்டுமா? ஏனைய பள்ளிகளில் இஃதிகாப் இருக்க முடியாதா?
பதில்
பதில்:

"மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறு எந்தப் பள்ளிகளிலும் இஃதிகாப் இல்லை" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் பதிவாகியுள்ளது. இந்த ஹதீஸை ஷெய்க் அல்பானி உள்ளிட்ட சில அறிஞர்கள் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) என்று கூறுகின்றனர். ஆனால், இந்த ஹதீஸை ஸஹீஹ் என்று நாம் வைத்துக் கொண்டாலும், அந்த மூன்று பள்ளிகளைத் தவிர வேறு எங்கும் இஃதிகாப் இருக்கவே கூடாது என்று இதனைப் புரிந்து கொள்ளக் கூடாது.

மாறாக, ஒரு பூரணமான, மிகச் சிறந்த கூலி கிடைக்கக்கூடிய இஃதிகாப் இந்த மூன்று பள்ளிகளில் மாத்திரமே சாத்தியமாகும் என்ற கருத்திலேயே இதனை விளங்க வேண்டும். இஸ்லாமியச் சட்டங்களில் இதற்குப் பல முன்மாதிரிகள் உள்ளன. உதாரணமாக, "சாப்பாடு தயாரான நிலையில் தொழுகை இல்லை" என்று ஒரு ஹதீஸ் வருகிறது. இதற்காக, சாப்பாடு தயாராக இருக்கும் போது ஒருவன் தொழுதுவிட்டால் அவனது தொழுகையே பாத்தில் (செல்லாது) என்று அர்த்தமல்ல; மாறாக அவனது தொழுகையில் பூரணத்துவம் இல்லை என்பதே அதனது அர்த்தமாகும். அதேபோன்று, "அமானிதம் இல்லாதவனுக்கு ஈமான் இல்லை" என்ற ஹதீஸும், ஒருவன் அமானித மோசடி செய்துவிட்டால் அவன் இஸ்லாத்தை விட்டே வெளியேறி காஃபிராகிவிட்டான் என்று அர்த்தப்படாது; அவனது ஈமான் பூரணமாக இல்லை என்றே பொருள்கொள்ளப்படும்.

இந்த அடிப்படையில்தான் பல இஸ்லாமிய அறிஞர்களான முஹம்மது பின் சாலிஹ் அல்-உஸைமீன் போன்றவர்கள், "மக்காவில் இஃதிகாப் இருந்தால் ஏனைய பள்ளிகளை விடக் கூலி அதிகம், மதீனாவில் இருந்தால் பைத்துல் முகத்தஸை விடக் கூலி அதிகம்" என்ற ரீதியிலேயே இந்த ஹதீஸுக்கு விளக்கமளித்துள்ளார்கள். ஷெய்க் அல்பானி அவர்கள் மாத்திரமே அந்த மூன்று பள்ளிகளில் மட்டுமே இஃதிகாப் இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும், அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனில், "நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்கின்ற நிலையில்" (வ அன்துும் ஆகிஃபூன பில் மஸாஜித்) என்று பொதுப்படையாகவே கூறுகிறான். உலகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்தான் அல்லாஹ்வுக்கு சுஜூத் செய்யப்படுகிறது. எனவே, ஏனைய பள்ளிவாசல்களிலும் இஃதிகாப் இருப்பது மார்க்க ரீதியாக அனுமதிக்கப்பட்டதேயாகும். ஒருவருக்கு ரமழானில் இஃதிகாப் இருக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்றால், அவர் ஷவ்வால் மாதத்தில் அதனைக் கழா (Qada) செய்து கொள்வதிலும் எவ்விதப் பிழையும் இல்லை.

← முந்தையஅடுதது →