ரசூல் (ஸல்) அவர்கள் ஜகாத்துல் பித்ராவாக நபருக்கு ஒரு 'ஸாஉ' என்ற அளவைக் கடமையாக்கினார்கள். ஒரு ஸாஉ என்பது சுமார் 2.2 கிலோ முதல் 3 கிலோ வரை உள்ள அளவு என இஸ்லாமிய அறிஞர்களிடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பேணுதலாக ஒருவருக்கு 2.5 கிலோ முதல் 3 கிலோ வரை நாம் நிர்ணயித்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
ஃபித்ராவைத் தானியமாகத்தான் கொடுக்க வேண்டும். நாம் சாதாரணமாக உண்ணக்கூடிய அரிசி, கோதுமை, கடலை, பருப்பு போன்ற முழு நேர உணவாகப் பயன்படக்கூடிய தானியங்களையே கொடுக்க வேண்டும். மாவு, சீனி போன்றவற்றையோ அல்லது நேரடியாக பணமாகவோ ஃபித்ராவாகக் கொடுக்கக் கூடாது (அவற்றை மேலதிகமாக ஸதக்காவாகக் கொடுக்கலாம்).
ஆனால், ஜமாஅத்தாக ஃபித்ராவை வசூல் செய்பவர்கள் 3 கிலோ அரிசியின் பெறுமதியை கணக்கிட்டு (மிகவும் மட்டமும் அல்லாத, மிகவும் உயர்தரமும் அல்லாத நடுத்தரமான தரத்தில்), உதாரணமாக ஒரு கிலோவுக்கு 60 ரூபாய் வீதம் 3 கிலோவுக்கு 180 ரூபாய் என்று ஒரு தொகையை நிர்ணயித்து, பொதுமக்களிடம் பணமாகப் பெற்று, பின்னர் அதற்கேற்ப தானியங்களை வாங்கி ஏழைகளுக்கு விநியோகிப்பதில் எந்தத் தவறும் கிடையாது. பணத்தை வசூலிக்கும்போது அது 3 கிலோ தானியத்திற்கான பணம் என்ற தெளிவோடுதான் வசூலிக்க வேண்டும். ஃபித்ரா என்ற பெயரில் அதிகப்படியான பணத்தை வசூலிப்பது மக்களின் சொத்தில் தேவையற்று கைவைப்பதாகும்.