الشمس
ஸூரா 91 — அஷ்ஷம்ஸ் | 4 மொழிபெயர்ப்பு ஒப்பீடு
15 வசனங்கள் · ஜுஸ் 30
1
وَالشَّمْسِ وَضُحٰىهَا ۟
முஹம்மது ஜான்
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
சூரியன் மீதும், அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக,
IFT
சூரியன் மீதும் அதன் வெயிலின் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சூரியன் மீதும் அதன் பிரகாசத்தின் மீதும் சத்தியமாக-
2
وَالْقَمَرِ اِذَا تَلٰىهَا ۟
முஹம்மது ஜான்
(பின்) அதனைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(அது அஸ்தமித்ததற்குப்) பின் உதயமாகும் சந்திரன் மீதும்,
IFT
மேலும், சந்திரன் மீது சத்தியமாக, அது சூரியனைத் தொடர்ந்து வரும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
சந்திரன் மீதும் சத்தியமாக-அது அச்சூரியனாகியதை அடுத்து தொடர்ந்துவிடும்போது-
3
وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَا ۟
முஹம்மது ஜான்
(சூரியனால்) பகல் வெளியாகும்போது, அதன் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(சூரியன்) பிரகாசிக்கும் பகலின் மீதும்,
IFT
மேலும், பகலின் மீது சத்தியமாக, அது சூரியனை வெளிப்படுத்திக் காட்டும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பகலின் மீதும் சத்தியமாக –அது அச்சூரியனாகியதை வெளிப்படுத்திவிடும்போது-
4
وَالَّیْلِ اِذَا یَغْشٰىهَا ۟
முஹம்மது ஜான்
(அப்பகலை) மூடிக்கொள்ளும் இரவின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
(அதை) மறைத்துக்கொள்ளும் இரவின் மீதும்,
IFT
மேலும், இரவின் மீது சத்தியமாக, அது சூரியனை மூடி மறைத்துக் கொள்ளும்போது!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இரவின் மீது சத்தியமாக-அது அ(ச்சூரியனாகிய)தை மூடிக்கொண்டுவிடும்போது-
5
وَالسَّمَآءِ وَمَا بَنٰىهَا ۟
முஹம்மது ஜான்
வானத்தின் மீதும், அதை(ஒழுங்குற) அமைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
வானத்தின் மீதும், அதை அமைத்தவன் மீதும்,
IFT
மேலும், வானத்தின் மீதும் அதை அமைத்தவன் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வானத்தின்மீதும் அதை (ஒழுங்குற) அமைத்தவன் மீதும் சத்தியமாக-
6
وَالْاَرْضِ وَمَا طَحٰىهَا ۟
முஹம்மது ஜான்
பூமியின் மீதும், இன்னும் அதை விரித்ததின் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
பூமியின் மீதும், அதை விரித்தவன் மீதும்,
IFT
மேலும், பூமியின் மீதும் அதை விரித்தவன் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பூமியின் மீதும் - அதை விரித்தவன் மீதும் சத்தியமாக-
7
وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَا ۟
முஹம்மது ஜான்
ஆத்மாவின் மீதும், அதை ஒழுங்குபடுத்தியவன் மீதும் சத்தியமாக-
அப்துல் ஹமீது பாகவி
ஆத்மாவின் மீதும், அதை (மனிதனாக) உருவாக்கியவன் மீதும்,
IFT
மேலும், மனித ஆன்மாவின் மீதும் அதனைச் செம்மைப்படுத்தி பின்னர்,
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆத்மாவின் மீதும்-அதனைச் செவ்வையாக்கியவனின் மீதும் சத்தியமாக-
8
فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَا ۟
முஹம்மது ஜான்
அப்பால், அவன் (அல்லாஹ்) அதற்கு அதன் தீமையையும், அதன் நன்மையையும் உணர்த்தினான்.
அப்துல் ஹமீது பாகவி
அதன் நன்மை தீமைகளை அதற்கறிவித்தவன் மீதும் சத்தியமாக!
IFT
அதன் தீமையையும் தூய்மையையும் அதனுடைய உள்ளுணர்வில் வைத்தவன் மீதும் சத்தியமாக!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அதற்கு அதன் தீமையையும் அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான்.
9
قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَا ۟
முஹம்மது ஜான்
அதை (ஆத்மாவை)ப் பரிசுத்தமாக்கியவர் திடமாக வெற்றியடைந்தார்.
அப்துல் ஹமீது பாகவி
எவர் (பாவங்களை விட்டும் தன் ஆத்மாவைப்) பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், நிச்சயமாக வெற்றி அடைந்துவிட்டார்.
IFT
திண்ணமாக, வெற்றி பெற்றுவிட்டான் மனத்தைத் தூய்மைப்படுத்தியவன்;
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
எவர் (ஆத்மாவாகிய) அதை பரிசுத்தமாக்கிக் கொண்டாரோ அவர், திட்டமாக வெற்றியடைந்து விட்டார்.
10
وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَا ۟ؕ
முஹம்மது ஜான்
ஆனால் எவன் அதை(ப் பாவத்தில்) புகுத்தினானோ அவன் திட்டமாகத் தோல்வி அடைந்தான்.
அப்துல் ஹமீது பாகவி
எவன் அதைப் (பாவத்தில்) புதைத்துவிட்டானோ அவன், நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான்.
IFT
மேலும், தோற்றுவிட்டான் அதனை நசுக்கியவன்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், எவர் அதனை (ப்பாவத்தைக்கொண்டு) களங்கப்படுத்திவிட்டாரோ, அவர் திட்டமாக நஷ்டமடைந்து விட்டார்.
11
كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَاۤ ۟
முஹம்மது ஜான்
“ஸமூது” (கூட்டத்தினர்) தங்கள் அக்கிரமத்தினால் (ஸாலிஹ் நபியைப்) பொய்ப்பித்தனர்.
அப்துல் ஹமீது பாகவி
ஸமூது கூட்டத்தினர் (ஸாலிஹ் நபியைத்) தங்கள் அநியாயத்தால் பொய்யாக்கினார்கள்.
IFT
ஸமூத் சமுதாயத்தார் தங்கள் வரம்பு மீறிய போக்கினால் பொய்யெனத் தூற்றினார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஸமூது (கூட்டத்தினர் ஸாலிஹ் நபியை) தங்கள் அக்கிரமத்தால் பொய்யாக்கினார்கள்.
12
اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَا ۟
முஹம்மது ஜான்
அவர்களில் கேடுகெட்ட ஒருவன் விரைந்து முன் வந்தபோது,
அப்துல் ஹமீது பாகவி
அவர்களிலுள்ள ஒரு துர்பாக்கியன் முன் வந்தபொழுது,
IFT
அவர்களில் மிகவும் கேடுகெட்ட ஒருவன் எழுந்து வந்தபோது
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அக்கூட்டத்திலுள்ள மிக துர்பாக்கியமுடையவன் விரைந்து முன்வந்தபொழுது-
13
فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْیٰهَا ۟ؕ
முஹம்மது ஜான்
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ்) அவர்களை நோக்கி: “இப் பெண் ஒட்டகம் அல்லாஹ்வுடையது; இது தண்ணீர் அருந்த(த் தடை செய்யாது) விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
அப்துல் ஹமீது பாகவி
அல்லாஹ்வின் தூதர் (ஆகிய சாலிஹ் நபி) தன் மக்களை நோக்கி ‘‘இது அல்லாஹ்வுடைய ஒரு பெண் ஒட்டகம் (இதைத் துன்புறுத்தாமலும்) இது தண்ணீர் அருந்த (தடை செய்யாமலும்) விட்டு விடுங்கள்'' என்று கூறினார்.
IFT
அவர்களை நோக்கி அல்லாஹ்வின் தூதர் கூறினார்: “எச்சரிக்கை! அல்லாஹ்வின் ஒட்டகம் (அதன் மீது கை வைக்காதீர்கள்;) அது நீர் அருந்துவதைத் (தடுக்காதீர்கள்).”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அல்லாஹ்வின் தூதர் (ஸாலிஹ் நபி) அ(ந்த ஸமூது கூட்டத்த)வர்களிடம் “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தை (இம்சிப்பதை)யும் அது தண்ணீர் அருந்துவதையயும் (விட்டுவிடுங்கள்)” என்று கூறினார்.
14
فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا فَدَمْدَمَ عَلَیْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَا ۟
முஹம்மது ஜான்
ஆனால், அவர்கள் அவரைப் பொய்ப்பித்து, அதன் கால் நரம்பைத் தறித்து விட்டனர் - ஆகவே, அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது வேதனையை இறக்கி, அவர்கள் யாவரையும் (அழித்துச்) சரியாக்கி விட்டான்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அவர்கள் அவரைப் பொய்யாக்கி, அதன் கால் நரம்பைத் தறித்துவிட்டனர். ஆகவே, அவர்களுடைய இறைவன் அவர்களின் இந்தப் பாவத்தின் காரணமாக, அவர்களின் மீது வேதனையை இறக்கி, அவர்கள் அனைவரையும் (தரை) மட்டமாக்கி விட்டான்.
IFT
ஆனால், அம்மக்கள் அவருடைய பேச்சைப் பொய்யெனத் தூற்றினார்கள். மேலும், ஒட்டகத்தைக் கொன்று விட்டார்கள். இறுதியில், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய பாவத்தின் விளைவாக கடுமையானதொரு ஆபத்தை இறக்கி, அனைவரையும் அழித்து, மண்ணோடு மண்ணாக்கி விட்டான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
பின்னர், அவர்கள் அவரைப் பொய்யாக்கி (அதன் கால் நரம்பைத்தறித்து) அதை அறுத்துவிட்டனர்; ஆகவே, அவர்களின் இரட்சகன் அவர்களுடைய (இந்தப்)பாவத்தின் காரணமாக அவர்களின் மீது (மண்ணோடு மண்ணாகிவிடும்) கடும் வேதனையை இறக்கிவைத்து பிறகு அதனை (ச் சகலருக்கும்) சமமாக்கினான்.
15
وَلَا یَخَافُ عُقْبٰهَا ۟۠
முஹம்மது ஜான்
அதன் முடிவைப் பற்றி அவன் பயப்படவில்லை.
அப்துல் ஹமீது பாகவி
இவர்களின் முடிவைப் பற்றி(த் தன்னைப் பழிவாங்கி விடுவார்களென்று இறைவன்) பயப்படவில்லை.
IFT
மேலும், (தனது இந்தச் செயலின்) எந்தவொரு தீயவிளைவு பற்றியும் அவனுக்கு அச்சம் இல்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதனுடைய முடிவைப்பற்றியும் அவன் பயப்படவில்லை.