الإنسان
ஸூரா 76 — அத்தஹ்ர்
31 வசனங்கள் · ஜுஎ் 29
1
هَلْ اَتٰی عَلَی الْاِنْسَانِ حِیْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ یَكُنْ شَیْـًٔا مَّذْكُوْرًا ۟
முஹம்மது ஜான்
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா?
அப்துல் ஹமீது பாகவி
ஒவ்வொரு மனிதனுக்கும் (உலகில் அவன் வெளிவருவதற்கு) முன்னர் ஒரு காலம் செல்லவில்லையா? அதில் அவன், இன்ன பொருள் என்றும் கூறுவதற்கில்லாத நிலைமையில் இருந்தான்.
IFT
மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மனிதன் மீது காலத்திலிருந்து ஒரு நேரம் திட்டமாக வந்துவிட்டது, (அதில் இன்னதென்று கூறப்படும் ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை.
2
اِنَّا خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ نُّطْفَةٍ اَمْشَاجٍ ۖۗ نَّبْتَلِیْهِ فَجَعَلْنٰهُ سَمِیْعًا بَصِیْرًا ۟
முஹம்மது ஜான்
(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
அப்துல் ஹமீது பாகவி
(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
IFT
நாம் மனிதனை கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து படைத்தோம்; நாம் அவனைச் சோதிக்க வேண்டும் என்பதற்காக! மேலும், இந் நோக்கத்திற்காக நாம் அவனைச் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண் இருவரின்) கலப்பான ஓர் இந்திரியத் துளியிலிருந்து நாம் சோதிப்ப(தற்கு நாடிய)வர்களாக அவனை படைத்தோம், எனவே, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை நாம் ஆக்கினோம்.
3
اِنَّا هَدَیْنٰهُ السَّبِیْلَ اِمَّا شَاكِرًا وَّاِمَّا كَفُوْرًا ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியைக் காண்பித்தோம்; (அதைப் பின்பற்றி) நன்றி உள்ளவனாக இருக்கின்றான்; அல்லது (அதைப்புறக்கணித்து) நன்றியற்றவனாக இருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர்.
IFT
நாம் அவனுக்கு வழிகாட்டினோம். இனி, அவன் நன்றியுள்ளவனாகவும் இருக்கலாம் அல்லது நன்றி கொன்றவனாகவும் இருக்கலாம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நாம் அவனுக்கு (நல்லது தீயது பற்றிய) வழியைத்தெளிவு செய்தோம்; (அதைப் பின்பற்றி)அவன் ஒன்று நன்றியுள்ளவனாக இருக்கலாம், அல்லது (அதைப் பின்பற்றாது நன்றியற்ற (நிராகரிப்ப)வனாக இருக்கலாம்.
4
اِنَّاۤ اَعْتَدْنَا لِلْكٰفِرِیْنَ سَلٰسِلَاۡ وَاَغْلٰلًا وَّسَعِیْرًا ۟
முஹம்மது ஜான்
காஃபிர்களுக்குச் சங்கிலிகளையும், அரிகண்டங்களையும், கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பையும் நிச்சயமாக நாம் தயார் செய்திருக்கின்றோம்.
அப்துல் ஹமீது பாகவி
நிராகரிப்பவர்களுக்கு நாம் சங்கிலிகளையும், (கை, கால்) விலங்குகளையும், நரகத்தையும் நிச்சயமாக தயார்படுத்தி வைத்திருக்கிறோம்.
IFT
நன்றி கொல்பவர்களுக்குத் திண்ணமாக, நாம் சங்கிலிகளையும், விலங்குகளையும், கொழுந்துவிட்டெரியும் நெருப்பையும் தயார் செய்து வைத்திருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிராகரிப்போர்க்கு சங்கிலிகளையும், விலங்குகளையும் (ஜுவாலை விட்டு எரியும்) நரகத்தையும், நிச்சயமாக நாம் தயார்செய்து வைத்திருக்கின்றோம்.
5
اِنَّ الْاَبْرَارَ یَشْرَبُوْنَ مِنْ كَاْسٍ كَانَ مِزَاجُهَا كَافُوْرًا ۟ۚ
முஹம்மது ஜான்
நிச்சயமாக நல்லவர்கள் (சுவர்க்கத்தில்) குவளைகளிலிருந்து (பானம்) அருந்துவார்கள்; அதன் கலப்பு காஃபூராக (கற்பூராக) இருக்கும்,
அப்துல் ஹமீது பாகவி
நல்லவர்கள், கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
IFT
நன்மக்கள் (சுவனத்தில்) கிண்ணங்களிலிருந்து கற்பூரம் கலந்திருக்கும் மது அருந்துவார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக நல்லோர்கள், குவளையில் (பானத்தை) அருந்துவார்கள், அதன் கலப்பு கற்பூரமாக இருக்கும்.
6
عَیْنًا یَّشْرَبُ بِهَا عِبَادُ اللّٰهِ یُفَجِّرُوْنَهَا تَفْجِیْرًا ۟
முஹம்மது ஜான்
(காஃபூர்) ஒரு சுனையாகும்; அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள். அதை (அவர்கள் விரும்பும் இடங்களுக்கெல்லாம்) ஓடைகளாக ஓடச் செய்வார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
அது (சொந்தமாக) அல்லாஹ்வுடைய (நல்) அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள்.
IFT
அது ஓடிக் கொண்டிருக்கும் ஊற்றின் நீராகும். இதன் நீரைக் கலந்தே அல்லாஹ்வின் அடியார்கள் மது அருந்துவார்கள். மேலும், தாம் விரும்பும் இடங்களுக்கு அதன் கிளைகளை எளிதாக ஏற்படுத்திக் கொள்வார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(இவ்வாறு கலக்கப்பட்ட அது) ஒரு ஊற்றாகும், அதிலிருந்து அல்லாஹ்வின் நல்லடியார்கள் அருந்துவார்கள், அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓடையாக ஓடச் செய்வார்கள்.
7
یُوْفُوْنَ بِالنَّذْرِ وَیَخَافُوْنَ یَوْمًا كَانَ شَرُّهٗ مُسْتَطِیْرًا ۟
முஹம்மது ஜான்
அவர்கள் தாம் (தங்கள்) நேர்ச்சைகளை நிறை வேற்றி வந்தார்கள்; (கியாம) நாளை அவர்கள் அஞ்சி வந்தார்கள். அதன் தீங்கு (எங்கும்) பரவியிருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
இவர்கள் (தங்கள்) நேர்ச்சைகளையும் நிறைவேற்றுவார்கள். நீண்ட வேதனையுடைய (மறுமை) நாளை பயந்துகொள்வார்கள்.
IFT
இவர்கள் எத்தகையவர்கள் என்றால், (இந்த உலகத்தில்) நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் துன்பங்கள் பரவக்கூடிய அந்த (மறுமை) நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இவர்கள் (தங்கள்) நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள்; இன்னும் ஒருநாளையும் பயப்படுவார்கள்; அதன் தீமை எங்கும் பரவியதாக இருக்கும்.
8
وَیُطْعِمُوْنَ الطَّعَامَ عَلٰی حُبِّهٖ مِسْكِیْنًا وَّیَتِیْمًا وَّاَسِیْرًا ۟
முஹம்மது ஜான்
மேலும், அ(வ்விறை)வன் மீதுள்ள பிரியத்தினால் ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், சிறைப்பட்டவர்களுக்கும் உணவளிப்பார்கள்.
IFT
மேலும், அல்லாஹ்வின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், அல்லாஹ்வாகிய அவன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்.
9
اِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللّٰهِ لَا نُرِیْدُ مِنْكُمْ جَزَآءً وَّلَا شُكُوْرًا ۟
முஹம்மது ஜான்
“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).
அப்துல் ஹமீது பாகவி
(தம்மிடம் பெறுபவர்களை நோக்கி) ‘‘நாம் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் நாம் ஒரு கூலியையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ கருதவில்லை (என்றும்),
IFT
(மேலும், அவர்களிடம் கூறுகின்றார்கள்:) “நாங்கள் அல்லாஹ்வுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்தப் பிரதிபலனையும், நன்றியையும் எதிர்பார்க்கவில்லை.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(உணவை உண்போரிடம்) “உங்களுக்காக நாம் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்தை நாடியேதான்; உங்களிடமிருந்து நாம் யாதொரு பிரதிபலனையோ அல்லது (நீங்கள் நமக்கு) நன்றி செலுத்துவதையோ நாங்கள் நாடவில்லை” என்றும்,
10
اِنَّا نَخَافُ مِنْ رَّبِّنَا یَوْمًا عَبُوْسًا قَمْطَرِیْرًا ۟
முஹம்மது ஜான்
“எங்கள் இறைவனிடமிருந்து, (எங்கள்) முகங் கடுகடுத்துச் சுண்டிவிடும் நாளை நிச்சயமாக நாங்கள் பயப்படுகிறோம்” (என்றும் கூறுவர்).
அப்துல் ஹமீது பாகவி
‘‘நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனின் ஒரு நாளைப் பற்றிப் பயப்படுகிறோம். அந்நாளில் முகம் கடுகடுத்துச் சுண்டி விடும்'' (என்றும் கூறுவார்கள்).
IFT
நீண்ட, கடும் துன்பத்திற்குரிய ஒருநாளின் வேதனையைக் குறித்துதான் எங்கள் இறைவனிடம் நாங்கள் அஞ்சுகின்றோம்.”
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“(அந்நாளின் அமளியினால் முகங்கள்) மிக்க கடுகடுக்கக்கூடிய நெருக்கடியான ஒருநாளை நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனிடமிருந்து பயப்படுகின்றோம்” (என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.)
11
فَوَقٰىهُمُ اللّٰهُ شَرَّ ذٰلِكَ الْیَوْمِ وَلَقّٰىهُمْ نَضْرَةً وَّسُرُوْرًا ۟ۚ
முஹம்மது ஜான்
எனவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கை விட்டும் அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகச் செழுமையையும், மனமகிழ்வையும் அளிப்பான்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, அல்லாஹ் அத்தகைய நாளின் தீங்கிலிருந்து அவர்களை பாதுகாத்துக் கொண்டு, அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுத்தான்.
IFT
எனவே, அல்லாஹ் அவர்களை அந்நாளின் தீங்கிலிருந்து காப்பாற்றிக் கொள்வான்; அவர்களுக்குப் பொலிவையும் மகிழ்வையும் அளிப்பான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, அல்லாஹ் அந்நாளின் தீங்கிலிருந்து அவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு முகமலர்ச்சியையும் (அவர்களின் இதயங்களில்) மகிழ்வையும் கொடுத்தான்.
12
وَجَزٰىهُمْ بِمَا صَبَرُوْا جَنَّةً وَّحَرِیْرًا ۟ۙ
முஹம்மது ஜான்
மேலும், அவர்கள் பொறுமையுடன் இருந்ததற்காக அவர்களுக்கு சுவர்க்கச் சோலைகளையும், பட்டாடைகளையும் அவன் நற்கூலியாகக் கொடுத்தான்.
அப்துல் ஹமீது பாகவி
மேலும், அவர்கள் இம்மையில் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்ததன் காரணமாகச் சொர்க்கத்தையும், (அணிவதற்குப்) பட்டாடைகளையும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்தான் (என்று கூறப்படும்).
IFT
மேலும், அவர்களின் பொறுமைக்குப் பகரமாக சுவனத்தையும் பட்டாடையையும் அவர்களுக்கு வழங்குவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அன்றியும், அவர்கள் (இம்மையில் கஷ்டங்களைச் சகித்து) பொறுமையுடனிருந்ததன் காரணமாக சுவனத்தையும்) அணிவதற்குப் பட்டாடையையும் அவர்களுக்கு அவன் நற்கூலியாக வழங்குகிறான்.
13
مُّتَّكِـِٕیْنَ فِیْهَا عَلَی الْاَرَآىِٕكِ ۚ لَا یَرَوْنَ فِیْهَا شَمْسًا وَّلَا زَمْهَرِیْرًا ۟ۚ
முஹம்மது ஜான்
அவர்கள் அங்குள்ள ஆசனங்களில் சாய்ந்து (மகிழ்ந்து) இருப்பார்கள்; சூரியனையோ, கடுங் குளிரையோ அதில் அவர்கள் காணமாட்டார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவர்கள்) அங்குள்ள கட்டில்களின் மீது(ள்ள பஞ்சணைகளின் மேல்) சாய்ந்து கொண்டிருப்பார்கள். அதில் சூரிய வெப்பத்தையும், பனியின் கொடிய குளிர்ச்சியையும் காண மாட்டார்கள்.
IFT
அங்கு அவர்கள் உயர்ந்த கட்டில்களில் தலையணைகள் வைத்து சாய்ந்திருப்பார்கள். வெயிலின் வெப்பமோ, கடும் குளிரோ அங்கு அவர்களைத் துன்புறுத்தாது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(அவர்கள்) அச்சுவனத்தில்) ஆசனங்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்; அதில் சூரிய வெப்பத்தினையும் கடுங்குளிரையும் அவர்கள் காணமாட்டார்கள்.
14
وَدَانِیَةً عَلَیْهِمْ ظِلٰلُهَا وَذُلِّلَتْ قُطُوْفُهَا تَذْلِیْلًا ۟
முஹம்மது ஜான்
மேலும், அதன் (மர) நிழல்கள், அவர்கள் மீது நெருங்கியதாக இருக்கும்; அன்றியும், அதன் பழங்கள் மிகத் தாழ்வாகத் தாழ்ந்திருக்கும்.
அப்துல் ஹமீது பாகவி
அதிலுள்ள (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது தாழ்ந்து (சூழ்ந்து) கொண்டிருக்கும். அதன் கனிகள் (சுலபமாகப் பறிக்கக்கூடிய விதத்தில்) அவர்கள் முன் சாய்ந்து வரும்.
IFT
சுவனத்தின் நிழல்கள் அவர்களின் மீது தாழ்ந்திருக்கும். மேலும், அதன் கனிகள் எப்போதும் (அவர்கள் விரும்பியபடி பறித்துக் கொள்ளும் அளவில்) அவர்களின் அருகில் இருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்கள் மீது நெருங்கியவையாக இருக்கும், அதன் கனிகள் (அவர்கள் பறிப்பதற்கேற்றவாறு) தாழ்வாக்கப்பட்டுள்ளது.
15
وَیُطَافُ عَلَیْهِمْ بِاٰنِیَةٍ مِّنْ فِضَّةٍ وَّاَكْوَابٍ كَانَتْ قَوَارِیْرَاۡؔ ۟ۙ
முஹம்மது ஜான்
(பானங்கள்) வெள்ளிப் பாத்திரங்களையும், பளிங்குக் கிண்ணங்களையும் (கொண்டு) அவர்கள் மீது சுற்றிக் கொண்டு வரப்படும்.
அப்துல் ஹமீது பாகவி
(பலவகை இன்பமான பானங்கள் நிறைந்த) பளிங்குக் கெண்டிகளும், வெள்ளிக் கிண்ணங்களும் அவர்கள் முன் சுற்றிக் கொண்டே இருக்கும்.
IFT
வெள்ளிப் பாத்திரங்களும் கண்ணாடிக் குவளைகளும் அவர்களுக்கு முன்னிலையில் சுற்றிச் சுற்றி வருமாறு செய்யப்பட்டிருக்கும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், வெள்ளியிலான பாத்திரங்களையும், பளிங்கினாலானக் கிண்ணங்களையும் கொண்டு (சிறார்களால்) அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.
16
قَوَارِیْرَاۡؔ مِنْ فِضَّةٍ قَدَّرُوْهَا تَقْدِیْرًا ۟
முஹம்மது ஜான்
(அவை பளிங்கல்ல) வெள்ளியினாலான, பளிங்கைப் போன்ற தெளிவான கிண்ணங்கள். அவற்றைத் தக்க அளவாக அமைத்திருப்பார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(அவை பளிங்குகளல்ல; எனினும்,) பளிங்குகளைப் போல் வெள்ளியினால் (அவர்களின் அவசியத்திற்குத்) தக்கவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
IFT
அந்தக் கண்ணாடிகளும் வெள்ளி வகையைச் சேர்ந்ததாக இருக்கும். அவற்றைச் (சுவனத்தின் ஊழியர்கள்) சரியான அளவில் நிரப்பியிருப்பார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
வெள்ளியிலான கிண்ணங்கள், அவற்றை (தாகம் தீர்க்கும் அளவிற்குத் தக்கவாறு) அளவை (வழங்கக்கூடிய) அவர்கள் நிர்ணயிப்பர்.
17
وَیُسْقَوْنَ فِیْهَا كَاْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِیْلًا ۟ۚ
முஹம்மது ஜான்
மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (என்னும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.
அப்துல் ஹமீது பாகவி
(இஞ்சி கலந்த) ‘சன்ஜபீல்' என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.
IFT
அந்தக் கிண்ணங்களில் இருந்து இஞ்சிச்சுவை கலந்திருக்கும் பானங்கள் அவர்களுக்கு அங்கு குடிப்பதற்கு வழங்கப்படும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அதில் அவர்கள் குவளையில் (மதுபானத்தைப்) புகட்டப்படுவார்கள், அதன் கலவை இஞ்சியாக இருக்கும்.
18
عَیْنًا فِیْهَا تُسَمّٰی سَلْسَبِیْلًا ۟
முஹம்மது ஜான்
“ஸல்ஸபீல்” என்ற பெயருடைய ஓர் ஊற்றும் அங்கு இருக்கிறது.
அப்துல் ஹமீது பாகவி
அது அங்குள்ள ஓர் ஊற்றின் நீர், அதற்கு ‘ஸல்ஸபீல்' என்றும் பெயர் கூறப்படும்.
IFT
அது சுவனத்தில் உள்ள ஒரு நீரூற்றாகும். அதன் பெயர் ‘ஸல்ஸபீல்.’
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அங்குள்ள ஓர் ஊற்றிலிருந்து (அதனைப்) புகட்டப்படுவார்கள் – அதற்கு ஸல்ஸபீல் (மிக மதுரமான நீர்) என்று கூறப்படும்.
19
وَیَطُوْفُ عَلَیْهِمْ وِلْدَانٌ مُّخَلَّدُوْنَ ۚ اِذَا رَاَیْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَّنْثُوْرًا ۟
முஹம்மது ஜான்
இன்னும், (அந்த சுவர்க்கவாசிகளைச்) சுற்றி எப்போதும் (இளமையோடு) இருக்கும் சிறுவர்கள் (சேவை செய்து) வருவார்கள்; அவர்களை நீர் காண்பீரானால் சிதறிய முத்துகளெனவே அவர்களை நீர் எண்ணுவீர்.
அப்துல் ஹமீது பாகவி
(என்றுமே) சிறுவர்களாக இருக்கக்கூடிய பணியாளர்கள் அவர்களைச் சுற்றிக்கொண்டே திரிவார்கள். (நபியே!) அவர்களை நீர் கண்டால் சிதறிய முத்துக்கள் என்றே கருதுவீர்.
IFT
மாறாத இளமையுடைய சிறுவர்கள் அவர்களுக்(கு ஊழியம் புரிவதற்)காக சுற்றித் திரிந்து கொண்டேயிருப்பார்கள். நீர் அவர்களைப் பார்த்தால் தெளித்துக் கிடக்கும் முத்துக்கள் என்று எண்ணுவீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், என்றுமே (இளமை மாறாமல்) இருக்கும் சிறுவர்கள் அவர்களைச் சுற்றிக் கொண்டே இருப்பார்கள்; (நபியே!) அவர்களை நீர் காணுவீரானால் பரத்தப்பட்ட முத்துக்களென அவர்களை எண்ணுவீர்.
20
وَاِذَا رَاَیْتَ ثَمَّ رَاَیْتَ نَعِیْمًا وَّمُلْكًا كَبِیْرًا ۟
முஹம்மது ஜான்
அன்றியும், (அங்கு) நீர் பார்த்தீராயின், இன்ப பாக்கியங்களையும், மாபெரும் அரசாங்கத்தையும் அங்கு காண்பீர்.
அப்துல் ஹமீது பாகவி
பின்னும் கவனித்துப் பார்த்தால், பெரிய அரச மாளிகையில் உள்ள சுகபோகங்களையெல்லாம் நீர் (அங்குக்) காண்பீர்.
IFT
அங்கு நீர் எந்தப் பக்கம் நோக்கினாலும் அருட்கொடைகள் நிறைந்திருப்பதையும், மாபெரும் பேரரசுக்கான அத்தனை சாதனங்களையும் காண்பீர்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அங்கு நீர் பார்த்தால், (அவற்றின்) அருட்கொடைகளையும் பெரிய அரசாட்சியையும் நீர் காண்பீர்.
21
عٰلِیَهُمْ ثِیَابُ سُنْدُسٍ خُضْرٌ وَّاِسْتَبْرَقٌ ؗ وَّحُلُّوْۤا اَسَاوِرَ مِنْ فِضَّةٍ ۚ وَسَقٰىهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُوْرًا ۟
முஹம்மது ஜான்
அவர்களின் மீது ஸுன்துஸு, இஸ்தப்ரக் போன்ற பச்சை நிற பூம்பட்டாடைகள் இருக்கும்; இன்னும் அவர்கள் வெள்ளியாலாகிய கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பர்; அன்றியும், அவர்களுடைய இறைவன் அவர்களுக்குப் பரிசுத்தமான பானமும் புகட்டுவான்.
அப்துல் ஹமீது பாகவி
அவர்கள் தேகத்தின் மேல் மெல்லிய பசும் பட்டாடையோ அல்லது தடிப்பான (பல நிற) பட்டாடையோ இருக்கும். (விருதாக) வெள்ளிக் காப்பும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களின் இறைவன் அவர்களுக்குப் புகட்டுவான்.
IFT
மென்மையான மற்றும் கனமான பச்சைநிறப் பட்டாடைகள் அவர்களின் மீதிருக்கும். மேலும், அவர்களுக்கு வெள்ளிக்காப்புகள் அணிவிக்கப்படும். அவர்களின் அதிபதி அவர்களுக்குத் தூய்மை மிக்க பானத்தைப் புகட்டுவான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
அவர்கள் (தேகத்தின்) மேல் மென்மையான மற்றும் கனமான பச்சைப் பட்டாடைகள் இருக்கும், இன்னும், அவர்கள் வெள்ளியினால் (ஆகிய) கடகங்கள் அணிவிக்கப்பட்டிருப்பார்கள், அவர்களின் இரட்சகன் பரிசுத்தமான ஒரு பானத்தையும் அவர்களுக்குப் புகட்டுவான்; (மேலும் அவர்களிடம்),
22
اِنَّ هٰذَا كَانَ لَكُمْ جَزَآءً وَّكَانَ سَعْیُكُمْ مَّشْكُوْرًا ۟۠
முஹம்மது ஜான்
“நிச்சயமாக இது உங்களுக்கு நற்கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாயிற்று” (என்று அவர்களிடம் கூறப்படும்).
அப்துல் ஹமீது பாகவி
(அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக கொடுக்கப்பட்டது; உங்கள் முயற்சியும் அங்கீகரிக்கப்பட்டது'' (என்றும் கூறுவான்).
IFT
திண்ணமாக, இதுதான் உங்களுக்குரிய கூலி. உங்களுடைய உழைப்பு மதிப்புக்குரியதாக ஆகிவிட்டிருக்கிறது.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
“நிச்சயமாக இது உங்களுக்குக் கூலியாக இருக்கும்; உங்களுடைய முயற்சியும் நன்றிக்குரியதாகி (அங்கீகரிக்கப்பட்டு) விட்டது” என்று கூறுவான்.
23
اِنَّا نَحْنُ نَزَّلْنَا عَلَیْكَ الْقُرْاٰنَ تَنْزِیْلًا ۟ۚ
முஹம்மது ஜான்
நிச்சயமாக நாம் தான் உம்மீது இந்தக் குர்ஆனை சிறுகச் சிறுக இறக்கி வைத்தோம்.
அப்துல் ஹமீது பாகவி
(நபியே!) நிச்சயமாக நாம் இந்த குர்ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைக்கிறோம்.
IFT
(நபியே!) நாம்தாம் உம்மீது இந்தக் குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியிருக்கின்றோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(நபியே!) நிச்சயமாக நாம்தாம் இந்தக் குர் ஆனைச் சிறிது சிறிதாகவே உம்மீது இறக்கி வைத்தோம்.
24
فَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ وَلَا تُطِعْ مِنْهُمْ اٰثِمًا اَوْ كَفُوْرًا ۟ۚ
முஹம்மது ஜான்
ஆகவே, உம்முடைய இறைவனின் கட்டளைக்காகப் பொறுமையுடன் (எதிர் பார்த்து) இருப்பீராக; அன்றியும், அவர்களில் நின்று எந்தப் பாவிக்கோ அல்லது நன்றியற்றவனுக்கோ நீர் வழிபடாதீர்.
அப்துல் ஹமீது பாகவி
ஆகவே, உமது இறைவனின் கட்டளையை (பெற்றுக் கொள்ள) நீர் பொறுத்திருப்பீராக. அவர்களிலுள்ள பாவிகளையும், நன்றி கெட்டவர்களையும் நீர் பின்பற்றாதீர்.
IFT
எனவே, நீர் உம் அதிபதியின் கட்டளைப்படி பொறுமையை மேற்கொள்ளும்! இவர்களில் தீயசெயல் செய்பவனுக்கோ சத்தியத்தை நிராகரிப்பவனுக்கோ இணங்கிப் போகாதீர்!
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
ஆகவே, நீர் உமதிரட்சகனின் கட்டளைக்காகப் பொறுமையுடனிருப்பீராக! அவர்களிலுள்ள (யாதொரு) பாவிக்கோ, அல்லது நன்றி கெட்டவனுக்கோ நீர் கீழ்ப்படியாதீர்.
25
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ بُكْرَةً وَّاَصِیْلًا ۟ۖۚ
முஹம்மது ஜான்
காலையிலும், மாலையிலும் உம்முடைய இறைவனின் திருநாமத்தை தஸ்பீஹு (துதி) செய்து கொண்டிருப்பீராக.
அப்துல் ஹமீது பாகவி
காலையிலும் மாலையிலும் உங்கள் இறைவனின் திருநாமத்தை(க் கூறி) நினைவு கூருவீராக.
IFT
உம் அதிபதியின் பெயரைக் காலையிலும் மாலையிலும் நினைவுகூரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
மேலும், காலையிலும், மாலையிலும் உமதிரட்சகனின் (சங்கையான) பெயரை நினைவு கூர்வீராக!
26
وَمِنَ الَّیْلِ فَاسْجُدْ لَهٗ وَسَبِّحْهُ لَیْلًا طَوِیْلًا ۟
முஹம்மது ஜான்
இன்னும் இரவிலும் அவனுக்கு ஸுஜூது செய்வீராக; அன்றியும் இரவில் நெடுநேரம் அவனுக்கு தஸ்பீஹு (துதி) செய்வீராக.
அப்துல் ஹமீது பாகவி
இரவிலும், அவனுக்குச் சிரம் பணிந்து வணங்கி, இரவு நேரத்தில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டிருப்பீராக!
IFT
மேலும், இரவிலும் அவனது திருமுன் ஸஜ்தா செய்யும்! மேலும், இரவின் நீண்ட நேரங்களில் அவனைத் துதித்துக்கொண்டிரும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், இரவில் அவனுக்கு (ஸுஜூது செய்து) சிரம் பணிவீராக! இரவில் நெடுநேரம் அவனைத் துதி செய்து கொண்டுமிருப்பீராக!
27
اِنَّ هٰۤؤُلَآءِ یُحِبُّوْنَ الْعَاجِلَةَ وَیَذَرُوْنَ وَرَآءَهُمْ یَوْمًا ثَقِیْلًا ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக இவர்கள் விரைந்து சென்று விடுவ(தான இவ்வுலகத்)தையே நேசிக்கின்றனர்; அப்பால் பளுவான (மறுமை) நாளைத் தங்களுக்குப் பின்னே விட்டு(ப் புறக்கணித்து) விடுகின்றனர்.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இந்த மக்கள் இம்மையை விரும்பி, அவர்களுக்கு முன்னிருக்கும் (மறுமையின்) கடினமான நாளைப் புறக்கணித்து விடுகின்றனர்.
IFT
இவர்கள் உடனடியாகக் கிடைக்கக்கூடியதை (இம்மையை) நேசிக்கிறார்கள். ஆனால், பிறகு வரவிருக்கும் கடினமான நாளினை அலட்சியப்படுத்தி விடுகிறார்கள்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இவர்கள் விரைவாகச் செல்லக்கூடிய (இம்மையான)தை விரும்புகின்றனர்; மேலும் கடினமான (மறுமை)நாளை அவர்களுக்குப் பின்னால் (புறக்கணித்து)விட்டு விடுகின்றனர்.
28
نَحْنُ خَلَقْنٰهُمْ وَشَدَدْنَاۤ اَسْرَهُمْ ۚ وَاِذَا شِئْنَا بَدَّلْنَاۤ اَمْثَالَهُمْ تَبْدِیْلًا ۟
முஹம்மது ஜான்
நாமே அவர்களைப் படைத்து அவர்களுடைய அமைப்பையும் கெட்டிப்படுத்தினோம்; அன்றியும் நாம் விரும்பினால் அவர்கள் போன்றவர்களை (அவர்களுக்குப் பதிலாக) மாற்றிக் கொண்டு வருவோம்.
அப்துல் ஹமீது பாகவி
நாம்தான் அவர்களைப் படைத்தோம். நாம்தான் அவர்களுடைய அமைப்பையும் உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (அவர்களை) மாற்றி அவர்களைப் போன்ற மற்றவர்களை (அவர்கள் இடத்தில்) அமர்த்திவிடுவோம்.
IFT
நாமே இவர்களைப் படைத்தோம். இவர்களுடைய எலும்பு மூட்டுக்களை உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால், இவர்களின் வடிவங்களை மாற்றி அமைத்துவிடுவோம்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நாம்தாம் அவர்களைப் படைத்தோம், நாமே அவர்களுடைய படைப்பின் அமைப்பையும் உறுதிப்படுத்தினோம்; மேலும், நாம் நாடினால், அவர்களைப் போன்ற (மற்ற)வர்களை அவர்களுக்குப் பகரமாக மாற்றி விடுவோம்.
29
اِنَّ هٰذِهٖ تَذْكِرَةٌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰی رَبِّهٖ سَبِیْلًا ۟
முஹம்மது ஜான்
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; எனவே யார் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவன் பால் (செல்லும்) வழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்வாராக.
அப்துல் ஹமீது பாகவி
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும். விரும்பியவர் தன் இறைவன் பக்கம் செல்லக்கூடிய (நேரான) வழியைப் பலமாகப் பிடித்துக் கொள்ளவும்.
IFT
இது ஒரு நல்லுரையாகும். இனி, விருப்பமுள்ளவர் தன்னுடைய அதிபதியின் பக்கம் செல்லும் வழியை மேற்கொள்ளட்டும்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்; ஆகவே யார் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகன் பக்கம் செல்லும் வழியை எடுத்துக்கொள்வாராக!
30
وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ یَّشَآءَ اللّٰهُ ؕ اِنَّ اللّٰهَ كَانَ عَلِیْمًا حَكِیْمًا ۟ۗۖ
முஹம்மது ஜான்
எனினும், அல்லாஹ் நாடினாலன்றி, நீங்கள் நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன்.
அப்துல் ஹமீது பாகவி
எனினும், அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் (எதையும்) விரும்ப முடியாது. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் அனைவரின் தன்மைகளையும்) நன்கறிந்தவனாக, ஞானமுடையவனாக இருக்கிறான்.
IFT
மேலும், நீங்கள் விரும்புவதால் எதுவும் நடக்கப்போவதில்லை, அல்லாஹ் நாடினால் அன்றி! திண்ணமாக, அல்லாஹ் பேரறிவாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (எதையும்) நாட மாட்டீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் (உங்களனைவரையும்பற்றி) நன்கறிகிறவனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கிறான்.
31
یُّدْخِلُ مَنْ یَّشَآءُ فِیْ رَحْمَتِهٖ ؕ وَالظّٰلِمِیْنَ اَعَدَّ لَهُمْ عَذَابًا اَلِیْمًا ۟۠
முஹம்மது ஜான்
அவன், தான் விரும்புபவரை தன்னுடைய ரஹ்மத்தில் புகுத்துகிறான்; அன்றியும் அநியாயக்காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை அவர்களுக்காகச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்.
அப்துல் ஹமீது பாகவி
(ஆகவே, உங்களில்) அவன் விரும்பியவர்களைத் தன் அருளில் புகுத்தி விடுகிறான். அநியாயக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத்தான் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.
IFT
தான் நாடுவோரை தனது கருணையில் நுழையச் செய்கின்றான். மேலும், கொடுமைக்காரர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையைத் தயார் செய்து வைத்திருக்கின்றான்.
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
(ஆகவே, உங்களில்) அவன் நாடியவரை தன் அருளில் நுழைவிக்கிறான்; இன்னும், அநியாயக்காரர்கள் - அவர்களுக்காகத் துன்புறுத்தும் வேதனையை அவன் தயார்படுத்தி வைத்திருக்கிறான்.